16 Dec

பி.விக்னேஸ்வரனின் நாடக நூல் வெளியீடு

Translation of The Chairs by Eugène Ionesco

 

சென்ற 8ந்திகதி (8.12.12) சனிக்கிழமை மாலை 4.30 அளவில் சன் சிற்றி பிளாசா ஸ்ரீஐயப்பன் ஆலய மணடபத்தில் பி.விக்னேஸ்வரன் மொழிபெயர்த்த இயூஜின் அயனஸ்கோவின் அபத்த நாடகமான “நாற்காலிகள்” நூலின் வெளியீடு நடைபெற்றது.

ஏற்கெனவே மனவெளி கலையாற்றுக்குழுவினரின் அரங்காடல் நாடக நிகழ்விலே மேடையேற்றப்பட்ட இந்த நாடகத்தை விக்னேஸ்வரனே நெறியாள்கை செய்திருந்தார் எனபதும் இந்நூல் வெளியீட்டு விழாவை மனவெளி கலையாற்றுக் குழுவினரே ஏற்பாடு செய்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடற்குரியது.

அமைப்பாளர்கள் எதிர்பார்த்தபடி நாடகத்துறை சார்ந்தவர்களே நிறைந்திருந்த அரங்கில் வழங்கப்பட்ட உரைகளும் காத்திரமானவையாகவும் பொருத்தமானவையாகவும் இருந்தன.

மனவெளி கலையாற்றுக் குழுவை சார்ந்த செல்வன் வெளியீட்டுவிழா பற்றியும், மனவெளி குழுவினரின் பங்கு பற்றியும் குறிப்பிட்டு, பேச்சாளர்களை அறிமுகம் செய்து விழாவை தொடர்ந்து நடத்தினார்.

வி.என்.மதியழகன், விக்னேஸ்வரன் பற்றிய அறிமுக உரையில், அவரது ஆரம்பகால கலை ஈடுபாடு, இலங்கை வானொலியிலும், ரூபவாகினியிலும் அவரது பங்களிப்பு, அவரது ஆர்வம்< அவர் முன்னோடியாக செய்த நிகழ்ச்சிகள் எனபனவற்றையெல்லாம் விபரமாக குறிப்பிட்ட்டு சிறப்பான அறிமுகத்தை வழங்கினார்..

நாடகத்துறையில் “பட்டயப் படிப்பு’ பெற்றவரும், கவிஞருமான கந்தவனம் அவர்கள், அபத்த நாடகங்கள் பற்றி உரையாற்றினார். இரண்டாம் உலகப்போர் நடந்ததின் விளைவாகவே அபத்தநாடங்கள் பற்றிய சிந்தனை உருவாகியது என்ற பொதுவான கருத்தை அவர் மறுத்துப் பேசினார். முதலாம் உலக யுத்தகாலத்திலே ஏன் இந்தச்சிந்தனை வரவில்லை என்றார். காலாகாலமாக இப்படி மாற்றங்கள் எல்லாத் துறைகளிலும் வரத்தான் செய்கிறது. எனவே அபத்த நாடகத்தின் வருகைக்கும் யுத்தங்களுக்கும் தொடர்பு இருக்கிறதாக நினைக்க முடியாது என்றும், நாற்காலிகள் நாடகத்தைக்கூட அபத்த நாடகமாக கருதமுடியாது என்றும் கூறினார்..

 

“நாற்காலிகள்” நாடக நூலுக்கு, மிகச்சிறப்பானதும் தெளிவானதுமான நீண்ட முன்னுரைய எழுதியிருந்த கவிஞர் சேரன் உருத்திரமூர்த்தி அடுத்து உரையாற்றினார். “ஒரு படைப்பாளி இதைத்தான் எழுதுகிறேன் என்று வகுத்துக்கொண்டு எழுதுவதில்லை. விமர்சகர்கள்தான் அந்தப்பாகுபாட்டை தீர்மானிக்கிறார்கள்.” என்று கூறி முன்னுரையில் தான் கூறிய :இலக்கியத்திற்கு பிறகுதான் இலக்கணம் உருவாகின்றது” என்ற கருத்தை வலியுறுத்தினார். அபத்த நாடங்கள் வலியுறுத்த முயலும் இருத்தலியல் பற்றிய சிந்தனையினால், வாழ்வின் ஸ்திரமற்ர தன்மை என்ற அடிப்படையில் இந்த கருத்தும் நாடக வடிவமும் முள்ளிவாய்க்காலின் பின்பு எங்கள் மக்களுக்கு மிகவும் நெருங்கியாகியதென்றும், எதையும் தாங்கிக்கொண்டு தொடர்ந்து போகும் நினைப்பு அவர்களுக்கு வந்த சோகத்தை சொல்லியபோது, அவையினர் அந்த நினைவுகளை பெற்றுக்கொண்டவர்களாக காணப்பட்டர்கள்.

இந்த நூலை வெளியிட்டு வைத்து உரையாற்றும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டதை எனது கலை வாழ்க்கையின் முக்கியமான கெளரவமாக கருதுகிறேன்.அதே நேரத்தில் ஒரு நாடக அறிவு சார்ந்த அவைக்கு என் கருத்துக்களை முவைக்கும் சந்தர்ப்பம் இதுவரையில் என்னைத்தேடி வந்ததாக நினைவில்லை என்பதையும் கூற விரும்புகிறேன்…

எனது உரையில் விக்னேஸ்வரனுக்கும் எனக்கும் வானொலி, தொலைக்காட்சி காலங்களில் ஏற்பட்ட நெருக்கமான நட்பை, புரிந்துணர்வை தொட்டுக்காட்டி, அவரது தளராத தேடல்களை, மேற்கத்திய இலக்கியங்களோடு அவருக்கு பரிச்சியம் ஏற்பட காலம்சென்ற ஜோர்ஜ் சந்திரசேகரன் எவ்வாறு தூண்டுகோலாக அமைந்தார் என்பதையும் கூறினேன்..

தொடர்ந்து இயூஜின் அயனஸ்கோ உடனான அறிமுகம் எனக்கு எவ்வாறு ஏற்பட்டது என்பதை விளக்குமுகமாக அவரது மூண்று நாடகங்களை குறிப்பிட்டேன்..

இலங்கையில் கொழும்பில் எல்பின்ஸ்டன் அரங்கிலே 1989ல் நடைபெற்ற வானொலி நாடக விழாவில் இடம்பெற்ற ஜோர்ஜ் சந்திரசேகரன் மொழிபெயர்த்து இயக்கிய அயனள்கோவின் “Frenzy, doe Two or More “ {தமிழில் :நத்தையும் ஆமையும் என்ற பெயரில்) என்ற அபத்த நாடகத்தில் நானும், ஜீவனி ஞானரத்தினமும் (இரண்டே நடிகர்கள்0 45 நிமிடங்கள் நடித்ததையும்,.

பின்னர் கனடாவில் மனவெளியின் அரங்காடல் நிகழ்வில், விக்னேஸ்வரன் மொழிபெயர்த்து இயக்கிய .நாற்காலிகள் நாடகத்தை பார்த்ததையும், அந்த நாடகத்தில் நடித்த கலைஞர்களான சுமதி ரூபன், சபேசன், குரும்பசிட்டி இராசரத்தினம் ஆகியோரின் சிறாப்பான நடிப்பு திறனையும் நினைவு படுத்திக்கொண்டேன்..

மூன்றாவதாக பின்னொரு அரங்காடல் நிகழ்வில் புராந்தகனின் இயக்கத்தில் மேடையேறிய “அரி ஓம் நம’ என்ற நாடகம் அயனஸ்கோவின் “Lessons” நாடகத்தை தழுவி டெல்கியில் வாழும் “வடக்கு வாசல்” ஆசிரியரும், எனது நண்பருமான பென்னேஸ்வரனால் எழுதப்பட்ட “பாடங்கள்{” என்ற நாடகந்தான் என்றும், அந்த நாடகத்தை பார்த்து ரசிக்க கிடைத்ததையும், இராசரத்தினம் அவர்களின் நடிப்பு சிறப்பையும் குறிப்பிட தவறவில்லை. .

தொடந்து, நாற்காலிகள் நாடக நூலைப்பற்றிப் பேசுகையில் அதை ஒருநாள் பொழுதில் முழுமையாக வாசிக்க முடிந்ததையும், வாசித்து முடிந்ததின் பின்னர் மனதில் எழுந்த சோகம்> நாடகத்தின் இறுதியில் மேடையில் வெறுமனே இருக்கும் கதிரைகளும், கலைந்துபோன அலங்காரத்தின் எச்சங்களும் எழுப்பிய வெறுமை என்பனவற்றை சொல்லி> அயனஸ்கோ இந்த நாடகத்தை அபத்த நாடகம் என்றில்லாமல் “Tragic Farce” என்றே குறிப்பிட்டிருக்கிறார் என்று சொன்னேன்..

பிரெஞ்சிய காலனி ஆட்சியில் அல்ஜீரியாவில் பிறந்த அல்பெயர் காமு (Albert Kamus என்ற தத்துவ சிந்தனையாளர், நோபெல் இலக்கியப் பரிசை பெற்றவர் எழுதிய The Myth of Sisyphus” என்ற உரைநூலில் குறிப்பிட ஒருகிரேக்க ஐதீகக்கதையில் வரும் ஒரு பாத்திரம் கடவுள்களின் சாபத்தின் விளைவாக ஒரு பெரிய பாறங்கல்லை மலை உச்சிக்கு உருட்டிக்கொண்டு போவதும் பிறகு அதை மலையடிவாரத்திற்கு உருண்டு வர விடுவதும், மீண்டும் உச்சிக்கு கொண்டு போவதும், மீண்டும் அடிவாரத்துக்கு விழ விடுவதுமாக தொடர்ந்து அதையே செய்து கொண்டிருக்கிறது. இருத்தலியலின் அபத்த தத்துவத்தை இந்த கதை மூலமாக விளக்குகிறார் காமூ என்பதை சொல்லி, பெக்கெற்றின் “Waiting for Godot” நாடகத்தை பார்த்த காத்திருப்பின் அருமையை உணர்ந்த சிறைக்கைதிகள் கண்ணீர் விட்டதையும், அதேபோல முதுமை தரும் தனிமை, வெறுமை பற்றி உணரத்தொடங்கியுள்ள என்னை நாற்காலிகள் நாடகம் பாதித்ததையும் சொல்லி முடித்தேன்..

Veteran Tamil Writer Late K.S.Balachandran

வெளியீட்டு நிகழ்வில் நாற்காலிகள் மேடை நாடகத்தில் திறம்பட நடித்த சுமதி ரூபன், சபேசன், குரும்பசிட்டி இராசரத்தினம் ஆகிய கலைஞர்களுக்கு நூலின் சிறப்பு பிரதிகளை வழ்ங்கினேன்..

ஏற்புரை வழ்ங்கிய நூலாசிரியர் பி.விக்னேஸ்வரன், மிகப்பெரிய அழிவுகள், யுத்தங்கள் என்பனவற்றின் தொடர்ச்சியாக நாடகம், இலக்கியம், ஓவியம் போன்றவற்றில் சிந்தனை மாற்றங்கள் ஏற்படச்செய்தன என்று கூறினார். ..

வியட்னாம் போரின் பின்னதாக, எப்படி இளஞர்களின் வாழ்வியலில் மாற்றங்களாக – Hippies, Flower people, Peace Marches என்பன முக்கியத்துவம் பெற்றன என்றும், நாற்காலிகள் நாடகத்தை வாசித்த போது தன்னை அது எவ்வாறு பாதித்ததென்றும், அதனாலேயே அதை மொழிபெயர்க்க முற்பட்டதாகவும், அதை மேடையேற்றவும், இப்போது நூலாக வெளியிடவும் மனவெளி கலையாற்றுக்குழுவினர் அளித்த ஆதரவுக்கு நன்றியும் கூறினார்…

மொத்தத்தில் அறிவார்ந்த ஒரு அவைக்கு, ஏற்றதாக காத்திரமாக நடந்த நல்லதொரு வெளியீட்டு விழா.

மனவெளியினருக்கும், நூலாசிரியர் விக்னேஸ்வரனுக்கும் என் பாராட்டுக்கள்.

=

நன்றி: கே.எஸ்.பாலச்சந்திரன்

12 Jun

மரணத்தின் வாசனை

த.அகிலனின் போர் தின்ற சனங்களின் கதைளினூடே..

 

அண்மையில் நான் பார்த்து வியந்த அற்புமான திரைப்படம் Terrence Malick இன் . “The Tree of life”. ஒரு அன்பான குடும்பதில், குடும்ப அங்கத்தவர் ஒருவனின் திடீர் மரணம் அந்தக் குடும்பத்தை எப்படி நிலைகுலைய வைக்கின்றது என்பதுதான் கருத்தளம். இயக்குனர் Terrence Malick ஓர் அற்புதமான இயக்குனர் பல விருதுகளைத் தனது திரைப்படங்களுக்காகப் பெற்றவர். “The Tree of life”

மரணங்கள் வெறும் எண்ணிக்கைகளாய். செய்தியாய் மட்டும் கடந்து போய்விடுகிற மரத்துப் போன ஒரு சூழலுக்கு நாங்கள் வந்துவிட்டேம் என்று தோன்றுகின்றது”. என்ற அகிலனின் கூற்று என்னுள் உழன்று கொண்டிருந்த வேளை “The Tree of life”  திரைப்படத்தின் கரு என் மனதில் பதிய மறுத்தது. வளரும் சூழ்நிலைக்கேற்ப மனித மனங்களின் வலியும் வேறுபட்டுப் போகுமோ?

நாம் வாழும் சூழல், எமது நாளாந்த வாழ்க்கைத் தளமென்பன எப்படி எமக்குள் பதிந்து எமை இயக்கிக் கொண்டிருக்கின்ற என்பதனை அண்மையில் ஊரிலிருந்து கனடாவிற்குப் புலம்பெயர்ந்த நண்பியொருத்தி கூற்றிலிருந்து அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. ”நான் தற்போது போரற்ற ஒரு நகரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். துப்பாக்கி வேட்டு, குண்டு வெடிச் சத்தங்கள் இல்லாத என் தற்போதைய வாழ்க்கை முறையை நம்புவதற்கு மனம் மறுக்கின்றது. இதுநாள் வரையும் எனக்கு இவையெல்லாம் நிராகரிக்கப்பட்டிருந்தன என்பதும், இன்னும் பலருக்கு வாழ்நாள் முழுவதுமே இவை நிராகரிக்கப்படுகின்றன என்பதை நினைக்கும் போது துக்கமும், கோவமும் எழுகின்றது என்றாள்.

பிறந்தநாளிலிருந்து போர் மட்டுமேயான நிலபுலத்தில் வாழ்ந்து வரும் இளையவர்களுக்கு மரணம் என்பது அன்றாட வாழ்வின் ஒரு செய்தியாக மட்டுமே இருந்திருக்கின்றது. இப்படியான தளத்திலிருந்து பிறந்திருக்கின்றது த.அகிலனின் “மரணத்தின் வாசனை”. அவரைச் சுற்றிய இறப்புக்கள் அனைத்துமே ஏதோவொருகாரணத்தினால் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்து வாசகர்கள் மனத்தில் ச்சீ இப்படியான ஒரு இக்கட்டான நிலையில்கூட போர்சூழல் எப்படியெல்லாம் மனிதர்களைக் காவு கொடுத்திருக்கின்றது என்ற எரிசலை ஏற்படுத்துகின்றது. மருந்தின்மை, உரியநேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாமை போன்ற மிகச் சிறிய விடையங்களுக்காகத் தம் சொந்தங்களைக் கண் முன்னே இழக்கும் கொடுமையை போர்ச்சூழலில் அகப்படாத வாசகியாகிய என் மனம் ஏற்க மறுக்கின்றது. அகிலனின் வாழ்வனுபவங்கள் எனக்கு வெறும் படித்துவிட்டுப் போகும் கதைகளில் ஒன்றாகவும், ”மரணத்தின் வாசனை” அகிலன் எனும் கதைசொல்லியால் புனையப்பட்ட ஒரு சிறுகதைத் தொகுதியென்பது மட்டுமே. அதையும் தாண்டி அகிலனாய் ஈழத்து மண்ணை என் வாசனைக்குள் கொண்டுவரும் போது வாழ்வெனும் பரப்பினூடே கிளர்ந்தெழும் யதார்த்தம் எனை உலுக்கியெடுக்கின்றது. அகிலன் ஒரு எழுத்தாளனாய் உண்மையைப் பதிந்துள்ளார்.

வாழ்வியல் அனுபவங்களால் இலக்கியத்தை அர்த்தமுள்ளதாக்கி வரலாறாய் பதியும் படைப்பாளிகளின் நேர்மை எப்போதும் பாராட்டுக்குரியதாகும்.

வரலாற்றை மாற்ற வேண்டித்தன் சொந்தங்களைத் தாரவார்த்துக் கொடுக்க எவரும் மனமுவந்து முன்வருவதில்லை. போரில் இணைந்த, இழந்த சொந்தங்களை எண்ணி ஏங்கும்  மனங்களின் தவிப்பும். கையறுநிலையின் விசனமும் விரிந்து பரந்து கிடக்கின்றது இவர் படைப்புக்களில். அகிலன் உண்மையிலேயே புனைவாளரில்லை. வரலாற்றுப் பதிவாளர்;. வாசகர்களாகிய நாம் இவரிடம் எதிர்வினையாற்றக் கேள்விகளற்றவர்களாகின்றோம்.. நேர்மையான வரலாறுகள் மறுப்பதற்கில்லை. அதனிலிருந்து கற்றுக்கொள்ளல் மட்டுமே சாத்தியம்.

தனது மாறுபட்ட பல சிறுகதை வடிவங்கள் மூலம் படைப்புகளில் பன்முகச் சாவல்களை எதிர்கொண்டிருக்கின்றார் கதைசொல்லி. இங்கு முக்கியமாகக் கருத்திற்கொள்ள வேண்டியது என்னவெனில், கதைசொல்லி முற்று முழுதான போர்சூழலில் பிறந்து வளர்ந்து தமது தனிப்பட்ட விருப்பினால் போராட்ட இயக்கத்தில் இணைந்துக்கொண்டு பின்னர் தமது தனிப்பட்ட விசனத்தினால் போராட்ட இயக்கத்திலிருந்து விடுபட்டவர்;. விடுபடலின் பின்னர் தன்னை வேறு எந்த இயக்கத்துடனோ இல்லாவிட்டால் அரசுடனோ இணைத்துக்கொள்ளாது தனித்து மிகச்சாதாரண வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பவர். இந்நிலையில் இன்னும் பல இளைஞர்களும், யுவதிகளுமிருந்தாலும் அவர்கள் தம்மை ஒதுக்கிக்கொண்ட நிலையிலிருக்கும் பட்சத்தில் த.அகிலன் தன்னை விடுவித்துக்கொண்டு தமது அனைத்து அனுவங்களையும் படைப்பாக்கி வாசகர்கள் முன் கொண்டு வந்துள்ளார். இக்கதைசொல்லி எமது அரசியல் சூழலில் உண்மை கூறல் எப்படிப் பார்க்கப்படும் எத்தகைய முத்திரைக் குத்தல்களுக்குத் தாம் ஆளாக நேரிடும் என்பதனைய அறிந்திருந்த போதும் பின்வாங்கலற்று தமது அனுபவப்பகி;ர்வை முன்வைத்து ஈழஇலக்கியத்தில் மிகவும் முக்கிய இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

போரற்ற வாழ்வை அறியாதவர் அகிலன். மரணத்தைத் தினம்தினம் கண்டு அழுது களைத்த சமூகத்தால் வளர்க்கப்பட்டவர். இன்னுமொருநாள் எனக்கு இருக்கின்றதா என்ற அச்சத்தில் தினம் தினம் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் மரணித்தவர்களை எண்ணி அழுவதற்குத்தான் நினைவு வருமா?

சிறுகதையென்றால் என்ன? அதன் வடிவமென்ன? அதுவொரு வரைவிலக்கணக்கத்திற்குள் அடங்கிக்கொள்கின்றதா? என்றெல்லாம் பல கேள்விகளும், அதற்கான ஆய்வுகளும் எழுத்துலகில் இருந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் த.அகிலனின் “மரணத்தின் வாசனை” சிறுகதைத் தொகுதியில் உள்ளடங்கியிருக்கும் சிறுகதைகள், அதன் வடிவங்கள் பற்றிய என் எண்ணக்கருத்தோடு ஒத்துப் போவதாய் எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்களின் சிறுகதை பற்றிய இந்த ஆய்வு அமைந்திருக்கின்றது.

“சிறுகதை என்பது சமூக மதிப்பீடுகளை ஆதரிக்க மறுக்கிற ஒரு இலக்கிய உருவம். அது சமூக விமர்சனம் சார்ந்தது. அது அப்படித்தான் இருக்கும். உண்மை வெல்லும் என்பதை வலியுறுத்தும் என்பது ஒரு கதையாக இருக்கும்போதுகூட அது ஒரு சிறுகதையாக இருப்பதில்லை. இது அறவியல் சார்ந்த ஒரு கதை. ஆனால் சிறுகதை அறவியலை வற்புறுத்தாது. நேற்றைய நம்பிக்கைகளை அது வற்புறுத்தவில்லை. வாழ்க்கை சம்பந்தமான போதாமைகளைச் சொல்கிறது அது. நெருக்கடிகளைச் சொல்கிறது அது. உண்மையைச் சொல்லியும் தோற்றுப் போனேனே என்று முடிவடைவது ஒரு சிறுகதையாக இருக்க முடியும். ஆனால் உண்மை இறுதியில் வெல்லும் என்று முடிவடைவது பெரும்பாலும் சிறுகதையாக இராது. கதையின் முடிவாக அது இருக்கலாம். சிறுகதையினுடைய முடிவாக அது இருக்க முடியாது. பழைய சம்பிரதாயங்கள், பழைய மரபுகள் இவற்றை யார் மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறாரோ, யார் எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துகிறார்களோ, இதுவரை நாம் சரி என்று நம்பிய ஒன்றை, இதுக்கு மேல் உண்மை கிடையாது என்று சொல்லப்பட்டு வந்த ஒன்றை, மேலானது என்று சொல்லபட்டு வந்ததை இன்றைய வாழ்க்கை ஏற்கவில்லை என்ற உண்மையை யார் வெளிப்படுத்துகிறார்களோ அவர்கள் சிறந்த சிறுகதை என்ற உருவத்தை அறிந்தவர்கள்.

அடுத்ததாக, என்ன விஷயங்களை சிறுகதையின் கருவாக நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளப் போகிறீர்கள் என்பது முக்கியமான விஷயம். அதற்கு எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது. ஒருவன் அவனது வாழ்க்கை அனுபவங்கள் சார்ந்து, அவனுக்கு எது முக்கியமானதாகத் தோன்றுகிறதோ, எந்த நெருக்கடி அவனுக்கு முக்கியமானதாக இருக்கிறதோ, எந்தத் துக்கம் அவனை ஓயாது வாட்டிக் கொண்டிருக்கிறதோ அதைப்பற்றி அவன் கதை எழுதலாம் – தமிழாலயமும் அகில இந்திய வானொலி நிலையமும் இணைந்து மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக நடத்தப்பட்ட சிறுகதைப் பயிலரங்கில் ஆற்றிய உரையிலிருந்து – சுந்தரராமசாமி 25.03.95

அகிலன் தட்சணாமூர்த்தியின் “மரணத்தின் வாசைன”  — சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது. அச்சிறுகதைகள் அனைத்துமே தமக்கேயான தளத்திலிருந்து மரணத்தின் வாசனையை வாசகர்களுக்கு நுகரக்கொடுத்திருக்கின்றன. மரணம் என்பது யாருக்கு எவ்வடிவில் வந்தாலும் அது சுகித்தலுக்குகந்த சுகந்தமாக வாசனையன்று. மரணத்தின் வாசனையென்று தலைப்பையேன் கதை சொல்லி தேர்ந்தெடுத்தார்? சம்பிரதாயங்களோடான மரணவீடொன்றில் அதற்கான பிரத்தியேகமான வாசனையென்று ஒன்றுள்ளது. பூஜைப்பொருட்கள் கிருமிநாசினி, வியர்வை, கண்ணீர் என்பன ஒன்றிணைந்து மரணரவீட்டின் வாசனையாய் வீசிக்கொண்டிருக்கும். இவ்வாசனையை மீண்டும் மீட்டிப்பார்க்கும் பொது மனதில் பயம் அப்பிக்கொள்ளும். மீண்டும் மீண்டும் நுகர்விற்காய் ஆவலையெழுப்பும் வாசனையன்று இது. மரணத்திற்கான வாசனை அனைவராலும் வெறுக்கப்படும் ஒன்று. ஆனால் நகரமே பற்றியெரிந்துகொண்டிருக்க கருகி, சிதறி, நிராதரவாய் ஈமொய்க்க வீதியோரம் விடப்பட்ட உடல்களடங்கிய நகரத்தின் மரணவாசனையென்பது நிராகரிக்க முடியாதது. இந்த வாசனையிலிருந்து ஓடிஒழிதல் சாத்தியமற்றது. இது நாற்றம். இது போரின் அவலம். இது வாசனையன்று. நாற்றத்தைத் தவிர்க்க மூச்சைப்பிடித்து சுத்தக்காற்றிற்காய் ஓடிச்சென்று மூச்சை இழுத்து இதமாகவிடுவதற்கு சுத்தக்காற்றுள்ள கூ+ழலை எங்குதான் தேடிஓடுவார் கதைசொல்லி.

இச்சிறுகதைத் தொகுப்பின் முதல் கதையான “ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப் போனார்” கதைக்குள் புகுந்து கொள்வதற்கு முன்பாக அகிலன் “பையன்” என்ற ஈழத்தமிழர்களின் பாவனையிலற்ற பதத்தை உபயோகப்படுத்தக் காரணம் என்ன? ஈழத்தமிழர்களின் பேச்சு வழக்கு மொழியையே அனைத்து சிறுகதைகளிலும் தனது கதை மொழியூடகமாக உபயோகப்படுத்தியிருக்கும் அகிலன் தமிழ்நாட்டுத் தமிழர்களின் புரிதலுக்கென தொகுப்பின் ஆரம்பத்தில் சொல் விளக்கக் குறிப்புக்களையும் கொடுத்திருக்கின்றார். தமிழ்நாட்டு மொழிப்பாதிப்பென்பது அனைத்து ஈழத்தமிழர்களுக்கும் பொதுவானதொன்றுதான்.

“அழுதேன் கடைசியாக அப்பாவைச் சுடலையில் கொளுத்தியபோது பட்டுவேட்டியும் சால்வையுமாகப் படுத்திருந்த அப்பாவின் சுருட்டைத் தலைமுடியைப் பற்றிக்கொண்டு மஞ்சள் தீ நடமாடியபோது, அப்பா இனிமேல் வரமாட்டார் என்று எனக்குப் புரிந்து போது வீரிட்டுக் கத்தினேன்.”

அப்பா நித்திரை, அப்பா முழிப்பு அப்பா எழும்புவார் என்று நம்பிக்கொண்டிருந்த சிறுவனுக்கு கொழுந்து விட்டெரியும் தீயில் அப்பாவின் உடல் பற்றிக்கொள்ளும் போது மரணம் புரியாவிட்டாலும் அப்பாவின் நிரந்தரப் பிரிவு புரிந்து போகின்றது. அவன் அகவயமனது காயம் கொள்கின்றது. இது நிரந்தரக்காயம். களிம்பு பூசி மூடப்பட்ட காயாத ஆழமாக காயம். அதனால்தான் கதைசொல்லி இச்சிறுகதையை இப்படி முடிக்கின்றார். “அப்பனில்லாப் பிள்ளைகள் என்ற இலவசஇணைப்பு என்னோடு எப்பவும் கூடவே வந்து அசௌகரியத்தையும் கூடவே அப்பாவின் நினைவையும் தந்துகொண்டிருக்கின்றுத”

“நரைத்த கண்ணீர்” எனும் சிறுகதையில் “எப்போதும் எனது புன்னகையில் ஆயுள் குறைவாயிருக்கின்றது” என்று ஈழத்தமிழ் மக்களின் கையறுநிலையை கண்முன்னே கொண்டுவருகின்றார் அகிலன். துப்பாக்கி வேட்டுச் சத்தத்திற்குள்ளும், ஒப்பாரிக்குள்ளும் அமிழ்ந்து கிடக்கும் மனிதவாழ்வில் பிச்சுப் போட்ட பாண் துண்டுபோல் கிடைக்கும் ஒருசில நிமிட அல்ப சந்தோஷ கணங்களில் வாய்விட்டுச் சிரிக்க முடியாது, புன்னகைக்கத்தான் முடியும். அதுவும் இடையில் முறிந்து போகும் நிழல்போல் பின்தொடரும் இன்னுமொரு அவலச்செய்தி கேட்டு.

“நான் பிறக்கும் போது என்னூரில் போர் இருந்தது. விமானங்கள் வட்டமிட்டுக்கொண்டிருந்த மாலைப்பொழுதொன்றில்தான் என்னைப் பிரசவிப்பதற்காக தான் வைத்தியசாலைக்குப் போனதாக அம்மா நினைவை மீட்டுவாள்.”  இந்தப் போர்சூழல் காலங்களில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கைதான் என்ன? பிறந்தவர்கள் எத்தனைபேர் தமது வாலிபத்தைக் கடந்து உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். உடல் அவயங்களை இழந்தோர் எத்தினை, மனநிலை பாதிக்கப்பட்டோர் எத்தினை, வன்புணர்வை எதிர்கொண்டோர் எத்தனை இவற்றிற்கெல்லாம் கணக்கு இருக்கின்றதா?

“போர்பற்றி அலைந்து கொண்டிருக்கின்ற விடுதலை வீரதீரக் கதைகளுக்குமப்பால் கீறப்பட்ட மனங்களின் குருதி வடிந்துகொண்டிருக்கும் துயரம் என்னை மேலும் மேலும் அச்சமடையச் செய்கின்றது. பிறகு அச்சமடைந்து அச்சமடைந்து சலிப்புற்று என்னை வெறுமையான மனவெளிகளுள் தள்ளுகின்றது”  என்று தன் உள்ளக்கிடக்கைகளை பதிவாகக் கொட்டுகின்றார்

மரணத்தின் அவலங்களும் வடுக்களும் மட்டுமே கதைசொல்லியின் அவதானத்திற்குட்டவையன்று, சமுதாயவிழுமியங்களுக்குட்பட்ட பல தேக்கங்களையும் தனது சிறுகதைகள் மூலம் கூறிச்செல்ல அவர் மறக்கவில்லை, “ஒரு ஊரில் ஒரு கிழவி” எனும் சிறுகதையில் “தனியொருபெண்ணாகத் தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயங்களை எழுதத் தொடங்கினா. அவ தானே தன் கதையெழுத ஆத்திரக்காரியாக இருக்கவேண்டியிருந்தது, அடாவடிக்காரியாக வேண்டியிருந்தது, ஒருகட்டத்தில் பைத்தியக்காரியாகவும் கூட ஆகவேண்டியிருந்தது. ஆனால் எல்லாவற்றையும் கடந்தா.” என்று பகுத்தறிந்துகாட்டி, பெண் என்பவள் எந்தக் காலகட்டத்திலும் தனித்தியங்குபவளாகவிருக்குமிடத்து அவள் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பலவகை “காரி”யாக மாறவேண்டிய கட்டத்திற்குள் தள்ளப்படுகின்றாள் என்றும், “மந்திரக்காரன்டி அம்மான்டி” எனும் சிறுகதையில் “ச்சீ ஆம்பிளப்பிள்ளைகள் அழக்கூடாது வெக்கக்கேடு.” என்று முதல்நாள் வகுப்பறையில் ஆசிரியர் கூறுவதன் மூலம் சிறுவன் ஒருவன் ஆண் என்ற கட்டமைப்பிற்குள் எப்படித்தள்ளப்படுகின்றான் என்பதையும்;, “ஒருத்தீ” எனும் சிறுகதையில் பெண்களினாலான குடும்பமொன்றில் ஒற்றை ஆணின் கோபத்தைத் தாண்ட முடியாதவர்களாய் அப்பெண்கள் மௌனித்து அல்லல் படுவதையும் கதைசொல்லி கூறிநிற்கின்றார்.

இந்த முற்பது ஆண்டுப் போர்சூழலில் “காணாமல் போனோர்” பட்டியல் என்றொரு நேர்மையான ஆதரங்களோடான பட்டியலொன்றைத் தயாரிக்க முடியாத நிலையில், காணாமல் போன தமது சொந்தங்களை எங்கே தேடுவது? எப்படித் தேடுவது? என்று தெரியாத நிலையில்தான் இன்றும் பலர் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்குவியலுக்குள் அவர்களுக்கான தடையங்கள் மூலமே தம் சொந்தங்களை அடையாளம் காணுதல் சாத்தியமாகின்றது. அதில் கூடத் தவறுகள் இருக்கலாம். தடையங்களற்ற எலும்புக்கூடுகளைத் தமது சொந்தமாக்கத் தயங்கும் இதயங்கள். இறப்பு நேர்ந்துவிட்டதாய் முற்றுப்புள்ளி வைக்கத் தயங்கும் மனம். எங்கோ உயிரோடிப்பதாய் ஆறுதல் கொண்டிருக்கின்றது இன்றும்.

“இது அவற்ர சேட்டு”

‘இது அவற்ர வெள்ளிமோதிரம்”

“இது அவன்ர சங்கிலி”

“நான் அவளோடு எலும்புக்கூடுகள் அடுக்கிவைக்கபட்டிருந்த இடத்திற்குப் போனேன். அவர்களுடைய எலும்புக்கூடுகள் இருக்கக் கூடாதென்றும் ஏதேனும் சிறைச்சாலை அறைகளில் விழித்துக்கொண்டிருக்கலாம் என்றும் மனம் எண்ணிக்கொண்டிருந்தது. அவள் திடீரென்று கத்தினாள். “அண்ணா…” அவள் அழுத இடத்தில் இருந்தது ஒரு 14வயதுப் பெடியனின் எலும்புக்கூடு, அதனோடு ஒரு பெரிய எலும்புக்கூடு” இவ்வரிகள் கதைசொல்லியின் கற்பனைகளல்ல. எமது நாட்டில் நாம் பிறந்து வளர்ந்த நாட்டில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் அவலங்கள். இவ்வனுபவங்களை தாம் கடந்துவந்த வாழ்நாட்களின் அன்றாட அனுவங்களாகக் கொண்டவர்கள்தாம் எத்தனை. குடும்பத்திலொருவர் விபத்தில் மரணித்துவிட்டால், குடும்ப அங்கத்தவர்கள் அனைவருக்கும் அம்மரணவலியைத் தாங்கவென்று மனஆலோசனை வழங்க எத்தனை நிறுவனங்கள் மேலை நாடுகளில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. மரணவலி, எதிர்காலம் பற்றிய கேள்விக்குறி, ஆதரவின்மை எம்மக்களின் புறஅக உளச்சல்களுக்கான விடை எங்கேயென்றறியாது திகைக்கின்றார் கதைசொல்லி.

“ஒருத்தீ” சிறுகதையில் மரணம் எப்படி அறிவிக்கப்படுகின்றது, என்று சிறுகதையை ஆரம்பிக்கும் அகிலன். மின்அஞ்சல் மூலம், தொலைபேசியில் கிரிக்கெட் ஸ்கோர் அறிவிப்பது போல், கடையில் பொருட்கள் வாங்கும் போது சுத்தப்பட்டிருந்த பேப்பர் துண்டில், (புலம்பெயர் மக்கள் பலர் வானொலிச் செய்திகளில் இறந்தவர்கள் பெயர்ப்பட்டியல்கள் வாசிக்கப்படும் போது, தவறாகத் தகவல்கள் கிடைத்து மரணவீடு முடித்துக்கொண்டு பின்னர் தமது சொந்தங்கள் உயிருடனிருக்கின்றார்கள் என்று அறிந்துகொண்டவர்களும் இருக்கின்றார்கள்).

“எனக்கு ஒரு மரணம் அறிவிக்கப்பட்டது? மின்அஞ்சல் வழியாக ஏதோவொரு இணையத்தளத்தின் செய்தியில் இருந்து எடுத்து இரண்டு வரிகள் ஒட்டப்பட்ட மின்னஞ்சலின் மீந்திருந்த கேள்வி இது அவளா?… என்று தொடங்கி அந்த “ஒருத்தீ” யுடனான தனது சொந்த அனுவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து சென்று முடிவில், “காப்டன் ஈழவேணி என்று அழைக்கப்படும் தொண்டமான்நகர் கிளிநொச்சியைச் சொந்த முகவரியாகக் கொண்ட சபாரத்தினம் பாரதி.. நான் பதிலெழுதாமல் இங்கே தொடக்கத்தில் இருக்கும் வரியை எழுதத் தொடங்கினேன்” என்று கதையை முடிக்கின்றார் அகிலன். மரணத்தின் வாசனையில் அனைத்துச் சிறுகதைகளுமே போர்சூழல் மரணங்களால் புனையப்பட்டவை என்பதால் வேறுபட்ட கதைசொல்லும் யுக்திகளைக்  கையாண்டு வாசகர்களைத் தன்வசம் வைத்துக் கொள்ளவும் தவறவில்லை அவர் என்பதும் பாராட்டுக்குரியது.

மனிதமனமென்பது தன்னார்வபூர்த்திக்கான தெரிவொன்றில் தொலைந்து போகும் தன்மையைக் கொண்டது. பொழுதுபோக்கு எனும் சொற்பதத்திற்குள் தமக்கான நேரக்க(ளி)ழிப்பை மனநிறைவாய் செய்து கொண்டிருக்கும் பலர் வாழ்வில் இவற்றிற்கு அடிமையாகிப்போவதுமுண்டு. நிர்ப்பந்தத்தால் இதனிலிருந்து வெளியேற்றப்படுபவர்கள் உளவியல் தாக்கங்களும் உள்ளாகிப் போகின்றார்கள், கடைசியல் அதுவே அவர்களது வாழ்வில் அழிவையும் கொண்டு சேர்க்கும் என்பதைத் தனது “குமார் அண்ணாவும் மிளகாய்க் கண்டுகளும்”, “தோற்ற மயக்கங்களோ” போன்ற சிறுகதைகளின் மூலம் ஆராய்ந்துள்ளார் கதைசொல்லி. தாம் ஆசையாய் பார்த்து பார்த்து வளர்த்த செடிகள், செல்லப்பிராணிகள் போன்றவற்றைப் போரின் நிமித்தம் இழந்தபோது ஏற்பட்ட வலியை இச்சிறுகதைகள் கூறுகின்றன.

படைப்பாளியின் அனைத்து சிறுகதைகளும் மரணத்தின் வாசனையை வாசகர்களுக்கு நுகரச்செய்து மரணத்தின் எல்லைவரை அவர்களையும் இழுத்துச் சென்றிருக்கின்றது. தவிர மற்றைய சிறுகதைகளின் தளத்திலிருந்து வேறுபட்டு “கரைகளிற்கிடையே..” சிறுகதை, போரின் நிமித்தம் நாட்டைவிட்டு வெளியேற நினைக்கும் ஒரு தமிழ் குடும்பம் எப்படி இன்னுமொரு தமிழனால் ஏமாற்றப்பட்டு அழிந்து போகின்றது என்பதையும் காட்டி நிற்கின்றது.

“துப்பாக்கிகளில் நல்ல துப்பாக்கிகள், கெட்ட துப்பாக்கிகள் எனப்பிரிவுகள் இருப்பதாக நம்புகிறார்கள் மொக்குச் சனங்கள். துப்பாக்கிகளுக்குத் தெரிந்ததெல்லாம் கொலை அது மட்டும்தான்” என்று போரின் பால் தான்கொண்ட மனவிசனத்தையும் சொல்லிக்கொள்கின்றார் த.அகிலன்.

மரணத்தின் வாசனையை சிறுகதைத் தொகுப்பை விமர்சனம் செய்த எழுத்தாளர் இமையம் அவர்கள் இப்படி முடிக்கின்றார்கள்

“போர்கள் எதன் பொருட்டு நடத்தப்படுகின்றன?  மனிதர்களை கொன்று குவித்துவிட்டு அடையப்பெறும் வெற்றிக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?  போர் மனிதர்களை அகதிகளாக்கியது.  பெயர் தெரியாத ஊர்களுக்கு விரட்டியடித்தது.  மொழி தெரியாத நாட்டில் வாழ வைத்தது.  உறவுகளைப் பிரித்தது.  பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளையும், குழந்தைகளிடமிருந்து பெற்றோர்களையும் பிரித்தது.  குழந்தைகள் இறந்தன.  பெற்றோர்கள் இறந்தார்கள்.  ஊமையாக்கப்பட்டார்கள்.  காணாமல் போனார்கள்.  பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்.  இத்தனை கொடூரங்களுக்கு பிறகும் போர் நடக்கிறது.  யாருக்கான, எதற்கான போர், அந்தப்போர் தேவையா என்று த.அகிலன் தன் கதைகளின் வழியே கேட்கிறார்.  மனித சமுதாயம் பதில் சொல்ல வேண்டிய கேள்வி.

 ஒரு இலக்கியப்படைப்பின் வெற்றி, பலம் என்பது அப்படைப்பில் இருக்கும் உண்மையைச் சார்ந்தே நிர்ணயமாகும். த.அகிலனின் மரணத்தின் வாசனை-போர் தின்ற சனங்களின் கதை- சிறுகதைத் தொகுப்பு- ஒரு இலக்கிய படைப்பு.”

போர் என்னை அழித்தது, என் உடன் பிறப்புக்களை அழித்தது, எனது குடும்பத்தை அழித்தது, எனது சொந்தங்களை, ஊரை, மண்ணை அழித்தது. என்னை இருக்கவிடாமல், உண்ணவிடாமல், உறங்கவிடாமல், கலைத்துக் கலைத்து அடித்தது அழித்தது. உலகெங்கும் சிதறிக்கிடக்கின்றோம் நாம். பணம் கிடைத்தால் ஆயுதங்களை வாங்கிக் குவித்து மனிதர்களை மனிதத்தை அழித்தொழிக்கும் இப்போரில் வீரம் எங்கே வந்தது? வெற்றி தோல்வி எங்கே வந்தது? அனைத்தையும் அழித்தொழித்துக் கிடைக்கும் நஞ்சூரிய நிலத்தைப் பிடிப்பதுதான் போரின் வெற்றியெனில் அது எமக்குத் தேவைதானா? என்ற கேள்வியை மரணத்தின் வாசனை எனும் சிறுகதை மூலம் விட்டுச்சென்றிருக்கின்றார் த. அகிலன். சிறுகதைத் தொகுப்பை மூடியபோது எனக்குள்ளும் இக்கேள்வியே எஞ்சி நிற்கின்றது.

 

நன்றி: கருப்பி (“வெயில் காயும் பெருவெளி – கூர் 2012″)

24 Jun

நூல் அறிமுகம்: ‘பலிஆடு’

கவிஞர்.கருணாகரன் நமக்குத் தந்திருக்கும் மூன்றாவத் கவிதை நூல் ‘பலிஆடு’ ஆகும்.

‘..உனனை என்னுள் திணிப்பதையும்
என்னை உன்மீது ஏற்றுவதையும் வெறுக்கிறேன்
உன் மகிழ்ச்சியை நீயே பாடுவதிலும்
என் பாடலை நானே இசைப்பதிலும்
ஆனந்தமுண்டல்லவா?…’

கவிஞர் முதல் நூலின் முதல் கவிதையுடன் தன்னை அறிமுகம் செய்தாலும் கவிஞருக்கு அறிமுகம் தேவையற்றது. ஏற்கனவே ‘வெளிச்சம்’ சஞ்சிகை மூலமும், தமிழீழ தேசிய தொலைக்காட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருந்தவர். உலக இலக்கியங்களில் அதி தீவிரம் காட்டியவர். நல்ல இலக்கிய முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்தவர்.எனக்கு சுந்தரராமசாமியின் எழுத்துக்களை அறிமுகம் செய்து வைத்தவர். இவரின் கவிதைகள் வாழ்வின் அணைத்து பரிமாணங்களையும் உள்வாங்கிய படி எழுதப்பட்டிருக்கிறது. காலடிக்குள் நழுவிப்போகும் வாழ்வின் வசந்தங்கள்..கைகளுக்குள் அகப்படாமல் விலகிப்போகும் சுதந்திரம்..வண்ணாத்திப்பூச்சியை தேடி ஓடும் குழந்தையை பதுங்கு குழிக்குள் அடைக்கின்ற சோகம்,வீரியன் பாம்பு நகரும் போதும்…குண்டுகள் வீழ்கின்ற வழவுக்குள் இருளில் அருகாய் கேட்கின்ற துப்பாக்கி வேட்டுக்கள்…எது வாழ்க்கை?எங்கே வாழ்வது?பசிக்கின்ற வயிற்றுக்கு உணவு எங்கே?எல்லாவற்றுக்கும் மேலான சுதந்திரம் பற்றிய சிந்தனை அறவே அற்று வாழ்வா சாவா என்கிற ஓட்டத்தில் நின்று நிதானித்து கவிதை பாடும் நேரப் பொழுதை ஒதுக்க முடியுமா? அதற்குள்ளும் தன்னை பதிய வைக்கின்ற முயற்சிக்கிற ஒரு கவிஞனின் முயற்சியைப் பாராட்டத் தான் வேண்ட்டும்.

அறுபதிற்குப் பிறகு முகிழ்க்கின்ற நமது நவீன கவிதைப் படைப்புக்கள் தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையிலேயே சென்று கொண்டிருப்பதையே உணர முடிகிறது.மகாகவி முதல் இன்றைய த.அகிலன் வரை விதைக்கப்பட்டிருக்கிறது எனலாம். ‘உண்மையைக் கண்டறியும் போதும் அதனோடு இணைந்திருக்கும் போதும் தனிமையும் துயரமும் இயல்பாக வந்து சேர்கின்றன.இந்த தனிமையும் துயரமுமே என் வாழ்வின் பெரும் பகுதியாகவும் இருக்கின்றது.ஆனாலும் இது பேராறுதலைத் தருகின்றது….’என கவிஞர் சுதாகரிப்பதும் தெரிகிறது.

‘என்னுடைய புன்னகையைத் தந்துவிட்டு
எல்லோருடைய கண்ணீரையும்
எடுத்துச் செல்கிறேன்.
மாபெரும் சவப்பெட்டியில்
நிரம்பியிருக்கும் கண்ணீரை போக்கி விடுகிறேன்.
கள்ளிச்செடிகள் இனியில்லை.
காற்றுக்கு வேர்களில்லை.
ஒளிக்குச் சுவடுகளிலை.
எனது புன்னகை
நிலவினொளியாகட்டும்.’

இவரின் முதல் இரண்டு (ஒரு பொழுதுக்கு காத்திருத்தல்(1999),ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்.(2003) நூல்களினூடாக தன்னை ஒருமுகமாக ஸ்திரப்படுத்தியபடி ‘பலிஆடு’ எனும் மூன்றாவது கவிதை நூலுடன் னம்மைச் சந்திக்க வந்துள்ளார்.

‘நிலவெறிக்குது வெறுங் காலத்தில்
வீடுகள்
முற்றங்கள்
தோட்டவெளி
தெரு
எல்லாமே சபிக்கப்பட்டு உறைந்தன போல
அமுங்கிக் கிடக்கின்றன..’
கவிஞனின் கவலை
நமக்கும் வலிக்கவே செய்கிறது..
‘நாங்கள் எதற்கு
சாட்சிகளாக்கப்
பட்டிருக்கிறோம்
அல்லது
எதற்காக
சாட்சிகளாயிருக்கிறோம்..
எனக்கேதும்
புரியவில்லை.
பகலையும் இரவையும்
கண்டு
அஞ்சும் என்
கண்களை
என்ன செய்வேன்..’

போரினுள் அன்பையும் கருனையையும் எதிர்பார்க்கும் உண்மைக் கவிஞனின் வார்த்தை வடிவங்கள் அவைகள். இன்பங்கள் அணைத்தும் துடைத்தெறியப்பட்டுள்ள சூழலில் துன்பத்தை மட்டுமே காவியபடி பதுங்குகுழி,காடுகள்,அகதிமுகாம் என வாழ்விழந்து பலிக்கடாவாக்கப்பட்டிருக்கும் ஒரு மனிதகுலத்தின் விடுதலை எப்போது என்கிற ஏக்கம்…

‘பூக்கள் இனி எப்படியிருக்கும்
மரங்கள் மிஞ்சியிருக்குமா
பறவைகளின் சிறகுகளில்
சாவு வந்து குந்திக் கொண்டிருக்கும்
காலம் இதுவல்லவா…’
‘நாடு கடக்க முடியவில்லை
சுற்றி வரக் கடல்
சிறைப் பிடிக்கப்பட்ட தீவில்
அலைகளின் நடுவே
துறைமுகத்தில்
நீண்டிருக்கும் பீரங்கிக்கு
படகுகள் இலக்கு.
மிஞ்சிய பாதைகளில்
காவலர் வேடத்தில் கொலையாளிகள்..
குற்றமும் தண்டனையும் விதிக்கப்பட்ட
கைதியானேன்…’

ஒவ்வோரு முறையும் தப்பி ஓடுதல் ஆபத்தானது.சுடப்படுவர்.கடலுக்குள் மூழ்கடிக்கப் படுவர்.கைதியாக்கப்படுவர்.

‘எனது மொழி என்னைக் கொல்கிறது
மொழியொரு தூக்கு மரம்
என்றறிந்த போது
எனது தண்டனையும் ஆரம்பமாயிற்று
எனது குரல்
என்னை அந்தர வெளியில் நிறுத்துகிறது
விரோதியாக்கி…’

நமது சாவு நம்மை நோக்கி வருகிறது அல்லது நாமே அதை நோக்கி நகர்கிறோம்.முப்பது வெள்ளிக்காசுக்காய் யேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் ஒருபுறம்…உலக வல்லாதிக்கப் போட்டிகளில் அழிகிறது எம் பூமி..இரத்தவாடை வீசுகின்ற நிலத்தில் நிமிடத்திற்கொரு பிணம் வீழ்கிற கொடுமைக்கு விதியா காரணம்?

எமக்கான நிலத்தில்,எமக்கான கடலில் வாழ்வுக்கான தேடலை சுதந்திரமாக தேட முடியாத அவலம்….கொடுமையிலும் கொடுமை! முகம் தெரியாத துப்பாக்கிகளின் விசையை அழுத்தும் வேகத்தில் மனிதம்…

‘யாருடயதோ சாவுச் செய்தியை
அல்லது கடத்தப்பட்டதான
தகவலைக் கொன்டுபோகக்
காத்திருந்த தெரு…’
….’சொற்களை முகர்ந்து பார்த்த நாய்கள்
விலகிச் சென்றன அப்பால்
கண்ணொழுக..
பாம்புகள் சொற்களினூடே
மிக லாவகமாய் நெளிந்து சென்றன
நடனமொன்றின் லாவகத்தோடு…’

சொற்கள் சுதந்திரமாய் விழுந்திருக்கின்றன. அணைத்து விஞ்ஞான பரீட்சாத்தங்களும் பரீட்சித்து பார்க்கப்படுகின்ற பூமி எங்களது. பலஸ்தீனம் பற்றி பேசத் தெரிந்த பலருக்கு நமது பலம், பலவீனம், கொடூரம், சோகம் தெரியாதது மாதிரி இருப்பது தான் வலிக்கிறது. மனு நீதி சோழனின் வருகை எதுவும் நடந்துவிடவில்லை.

…’வானத்தை நான் பார்க்கவில்லை
நட்சத்திரங்களையும் காணவில்லை
பதுங்கு குழியின்
இருளுக்குள் வீழ்ந்த வாழ்வின்
சருகு நான்….
….. நிலம் அதிர்கிறது.
குருதியின் மணத்தையும்
மரணத்தின் அருகாமையையும் உணர்கிறேன்
கந்தகநெடில்
கபாளத்தைப் பிளக்கிறது
வீரர்கள் முழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்
அழியும் வாழ்வின் பிரகடனத்தை
ஒவ்வொரு துப்பாக்கியிலும்
ஒவ்வொரு பீரங்கியிலும்…’

உண்மையாக,உண்மைக்காக,சொல்லவந்த சேதியை சரியாகச் சொன்ன கவிஞனின் வரலாற்றுப் பதிவு இந் நூலாகும். உலக ஒழுங்கின் மாற்றத்தால் ஏற்பட்ட அழிவுகளை ஓரளவுக்கேனும் தன் மொழியில் சொல்லியுள்ள கருனாகரன் ‘பலிஆடு’ போன்று தொடர்ச்சியாக நூல்களைத் தருவதனால் உலகம் தன்மௌனம் கலைக்கலாம். அன்று தொட்டு இன்று வரை வீச்சுள்ள படைப்புகளை போருக்குள் வாழ்ந்த எழுத்தாளர்களே தந்துள்ளார்கள்.புதுவை. இரத்தினதுரை, தீபச்செல்வன்,சித்தாந்தன், வீரா,அமரதாஸ், த.அகிலன் என கருனாகரனுடன் வளர்கிறது. 113 பக்கங்களில் அழகிய வடலி வெளியீடாக (2009) நம் கரம் கிட்டியுள்ள நூலுக்குச் சொந்தக்காரர்களுக்கு (படைப்பு / பதிப்பு) வாழ்த்துச் சொல்வோம்.

நன்றி: முல்லை அமுதன், காற்றுவெளியிடை

12 Jun

நூல் அறிமுகம்: ‘மரணத்தின் வாசனை.

ஈழத்தின் மூத்த பத்திரிகையாளரான ஆர்னல்ட் சதாஸிவம் பிள்ளை எழுதிய சிறுகதையே முதல் கதையென அறிஞர்கள் சுட்டுவர். நவீன சிறுகதை 1930ற்கு பின்பே ஆரம்பமாகிறது எனவும் கொள்ளப்படுகிறது.1983ற்குப் பின்னரே அதிக படைப்பாளர்களின் வருகை நிகழ்ந்துள்ளது.இனக் கலவரம், இடப்பெயர்வு, பொருளாதார இழப்பு / தடை, விமானத் தாக்குதல்கள், போக்குவரத்து அசொளகரியங்கள், உள்ளக / வெளியக புலப்பெயர்வுகள் என்பன படைப்பாளர்களையும் உருவாக்கியிருக்கலாம். வளர்ந்து வந்த இனச் சிக்கல் பெரும் போராக வெடித்ததில் போருக்குள் வாழ்ந்த / வாழ்கின்ற / வாழ்ந்து மடிந்த மக்களிடமிருந்து எழுதிய படைப்பாளர்கள் நிஜத்தை எழுதினார்கள்/எழுத முற்பட்டார்கள். போருக்குள் நின்று புதுவை இரத்தினதுரை , கருனாகரன் ,நிலாந்தன் , அமரதாஸ், வீரா , திருநாவுக்கரசு , சத்தியமூர்த்தி ,புதுவைஅன்பன் ,முல்லைகோணேஸ் , முல்லைகமல் , விவேக் , மலரன்னை ,மேஜர்.பாரதி , கப்டன்.வானதி என விரிந்து இன்றைய த.அகிலன் வரை தொடர்கிறது.

‘தனிமையின் நிழற்குடை’யைத் தொடர்ந்து நமக்கு அகிலன் தந்திருக்கும் நூலே ‘மரணத்தின் வாசனை’.போர் தின்ற சனங்களின் கதை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இதனை ‘வடலி.கொம்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளனர்.

1.ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப் போனார்..
2.ஓர் ஊரிலோர் கிழவி.
3.மந்திரக்காரன்டி அம்மான்டி.
4.குமார் அண்ணாவும் மிளகாய்க் கண்டுகளும்.
5.ஒருத்தீ.
6.சித்தி.
7.நீ போய்விட்ட பிறகு.
8.சலனங்கள் அற்றவனின் கடைசி நாள்.
9.தோற்றமயக்கங்களோ.
10.கரைகளிற்க்கிடையே
11.செய்தியாக துயரமாக அரசியலாக…
12.நரைத்த கண்ணீர்.

என பன்னிரண்டு கதைகளைக் கொண்ட தொகுதி சிறப்பான தொகுதியாக கொள்ளலாம்.அழகிய பதிப்பு. வெளியீட்டுத் துறையில் ஓர் மைல் கல்.

சிறுகதைக்கான தொடக்கம் விரிவு உச்சம் முடிவு என படித்த எமக்கு விதியாசமான கதை நகர்வினைக் கொண்டது. சிறந்த ஆவணப்பதிவு. முழுமையான ஒரு இனத்தின் வரலாற்றுப்பதிவின் ஒரு சிரு துளி எனினும் நல்ல பதிவு. 83 தொடக்கம் அல்லது இந்திய இராணுவத்தின் கொடூரங்கள் / மாவிலாறு தொடங்கி முள்ளிவாய்க்கால் வரையான கொடுமைகள், இன்று வரை தொடர்கின்ற இன அழிப்பு,அவலம் என்பவற்றின் ஒரு புள்ளி. அவலத்துள் வாழ்ந்தவனுக்குத்தான் அதன் வலி தெரியும். பதுங்கு குழி வாழ்வு, காடுகளுக்கூடான பயணம்… ஒவ்வொரு வார்த்தைகளும் நமக்கு களத்துக்குள் அழைத்து செல்லுகின்ற வல்லமை அகிலனின் கதைகளுக்கு கிடைத்திருக்கின்றது. பாம்பு கடித்து இறக்கின்ற தந்தை,கடலில் மூழ்கிப் போகும் இளைஞன்,தான் வாழ்ந்த மண்ணில் மரணிக்கிற கிழவி,தான் நேசித்த தோழி பற்றிய நினைவின் வலி …. பாத்திர வார்ப்பு அபாரம்.அகிலனின் சொந்த கதையாகவும் இருக்கலாம்.ஆனால் நமக்கு நடந்தது போல உணர முடிகிறது. அனுபவம் தனக்கு நடந்தது அல்லது பிறருக்கு நடந்தது.எனினும் நமக்குள் நடந்த நமக்கான சோகத்தை சொல்லிச் செல்வதால் நெருக்கமாகின்றது.சொல்லடல் இயல்பாகவெ வந்து வீழ்கிறது.எங்கள் மொழியில் எழுத முடிகின்றதான இன்றைய முயற்சி வெற்றி பெற்றே வருகிறது எனலாம்.சில சொற்களுக்கான விளக்கங்கள் தரப்பட்டுள்ளனவெனினும் நம் மொழியில் பிறழ்ச்சி ஏற்படாதவாறு எழுதியுள்ளமை வரவேற்கக் கூடியதே.போரின் கொடுமைகளை அவர்களின் மொழியில் பேசவேண்டும்.இங்கு அது சாத்தியமானது அகிலனுக்கு கிடைத்த வெற்றி. கதியால் , குத்தியாக , திரிக்கிஸ் , குதியன்குத்தும் , அந்திரட்டி, உறுக்கி, கொம்புபணீஸ் , புழூகம் ,தத்துவெட்டி, தோறை , எணேய் , நூக்கோணும், அம்மாளாச்சி , ரைக்ரர், விசர் , மொக்கு , சாறம் , சாமத்தியப்பட்டிட்டாள் … இவைகள் சில விளக்கங்களுக்கான சொற்கள்..

‘நரைத்த கண்ணீர்’ எனும் கதையில் வயதான தம்பதியரைப் பார்க்கப் போகும் இளைஞனின் நிலை பற்றிச் சொல்கிறது.தங்கள் மகன் பற்றிக் கேட்டதற்கு விசாரித்துச் சொல்ல முற்பட்டும் அந்த தம்பதியர்க்கு அவர்கள் மகன் வீரமரணம் அடைந்தது பற்றிச் சொல்லி அவர்களை சோகத்தில் ஆழ்த்த விரும்பாது தவிர்த்த போதும் மணைவியின் சந்தோசமே பெரிதென அந்த பெரியவர் மறைத்தது தெரிய வர அவனுடன் சேர்ந்து எமக்கும் வலிக்கிறது. தப்பிச் செல்ல இன்றோ நாளையோ என்றிருக்கையில் திடீர் பயணிக்க நேர்கையில் மூட்டை முடிச்சுகளுடன் பயத்துடன்… தோணிக்காரனுடன் புறப்படுகின்ற அவர்களுடன் நாமும் பயணிக்கிற அனுபவம் (கிளாலி,கொம்படி,ஊரியான் பாதைப்பயணங்கள்/96ன் பாரிய இடப்பெயர்வுகள்) தோணிக்காரன் இடை நடுவில் ஒரு மணற் திட்டியொன்றில் இறக்கிவிட்டுச் சென்றுவிட தவித்த தன் குடும்பத்தை தானே காப்பாற்ற எண்ணி படகுக்காரனுடன் வருவதாகக்க் சொல்லி கடலுள் குதிக்க மூழ்கிப் போகிறான்.பத்திரிகைச் செய்தியில் படித்திருந்தாலும் உண்மைக்கதையின் பதிவாகியிருக்கிறது ‘கரைகளிற்கிடையே’ கதையில்.. மக்களுடன் இடம்பெயர்ந்து பின் தன் காணி/மிளகாய்க் கண்டுகளை பார்க்கச் சென்ற குமார் அண்ணையின் அவலம்/சோகம் ‘குமார் அணாவும் மிளகாய்ச் செடிகளும்’கதை சொல்கிறது.

இப்படி ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கதை சொல்லி அசத்துகிறது. ஏகலைவர்களின்றி நகர்கின்ற போருக்குள் வாழ்ந்த மக்களிடத்திலிருந்து புறப்பட்ட படைப்பாளர்கள் சரியான தளத்தை நோக்கிப் பயணிப்பது ‘மரணத்தின் வாசனை’ சொல்லி நிற்கிறது. ஜனவரியிலும்(2009)மேயிலும் இரண்டு பதிப்புக்களை கண்டுள்ள இந் நூலின் அட்டைப்படம் மருதுவின் ஓவியத்தால் மிகச் சிறப்பாக இருக்கிறது. த.அகிலனிடமிருந்து நிறைய ஆவணப்பதிவுகளை படைப்புலகம் வாழ்த்துக்களுடன் எதிர் பார்த்து நிற்கிறது.

29 Mar

காணாமல் போனவனின் புன்னகை மீது உறைய மறுத்திருக்கும் குருதித்துளி!

– கருணாகரன் பலியாடு தொகுப்பு தொடர்பாய் –

சிவபாலன் தீபன்
1..
“சித்தாந்தமாய், சிந்தனையாய், கருத்தியலின் மொழியாய், குருவியின் குறியாய் களத்தினில் வழிந்த உயிராய், நிலத்தினில் கிடந்த உடலாய் என்று எல்லா விதங்களிலுமாய் நாங்கள் போரை சந்தித்திருக்கிறோம். எங்கள் அன்றாடம் போர் எழுதிய துயரம் மிகுந்த வாழ்வாய் இருந்தது.கட்டங்கள் கடந்தததும் காலங்கள் கடந்ததுமான போரின் சகல விளைவுகளையும் சுமந்து ஒரு சனக்கூட்டம் எஞ்சியிருக்கிறது. வாய் விட்டழவும் வலிகள் எதுவும் நினைவில்லாத மனித கூட்டம் அது. துயரத்தின் பேசாத சாட்சிகளாக போரின் தடயங்கள் ஒரு ரேகையைப்போல படர்ந்திருக்கிறது எல்லாவிடமும் எல்லோரிடமும். சாவையும் பிறப்பையும் சாதாரணமாக்கியதில் பெரிய பங்கு போருக்கு போகிறது. ஏணிகளை எடுத்தெறிந்து விட்டு பாம்புகளை மட்டும் வைத்து சாவு ஆடிய பரமபதம் நிகழ்ந்தது நேற்று. எங்களை துரத்தி துரத்தி தீண்டியது மரணம். அதற்கொரு எல்லையும் இருக்கவில்லை எவரும் தடுக்கவுமில்லை .அழுவதை மறந்து நாங்கள் ஓடிக்கொண்டே இருந்தோம். எங்கள் இனத்தில் வடிந்த துயரத்தை நீங்கள் கைகள் கொண்டு கழுவ முடியாது காலம் கொண்டு நழுவ முடியாது எங்கள் உயிரை, சதையை, குருதியை, கண்ணீரை பெருங்கதறலை உங்கள் காலடிக்கு கொண்டுவந்தபோது நீங்கள் வேட்டைப்பற்கள் தெரிந்துவிடும் என்ற சங்கடத்தில் மௌனித்தீர்கள். எங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுப்போம் நீங்கள் நீதி பேசும் சபையில் சிரிக்க.”
இறப்பு குறித்தான நிஜங்களும் வாழ்வு குறித்தான கற்பனைகளும் ஒரு கதையாகவே நிகழ்கின்ற ஒரு நிலத்தின், இனத்தின் தொடச்சியாக நாமிருக்கிறோம். இந்த தொடர்ச்சி அதன் சகல பரிமாணத்திலும் பதிவு செய்யப்பட வேண்டியாதாகிறது. இங்கே எமக்காக நாமே அழவும் சிரிக்கவும் தேவைகள் இருக்கிறது.
2..
போர்ச் சர்ப்பம் வால் விழுங்கிச் சுழலும் ஒரு வேளையில் எழுதப்பட்ட கவிதைகளை வடலி வெளியீடாக தொகுத்திருக்கிறார்கள். பலியாடு என்ற பெயரில் வெளிவந்திருக்கின்ற கருணாகரனின் கவிதைகள் குறித்து பேச நிறைய இருப்பதாகவே தோன்றுகிறது எனக்கு. விடுபடுதல்கள் விளங்கிக்கொள்தல்களின் இயல்பான அச்சம் இது குறித்து தடுத்தாலும் என்னால் பேசாமலும் இருக்க முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
“நாங்கள் எதற்கு சாட்சிகளாக்கப் பட்டிருக்கிறோம்
அல்லது
எதற்காக சாட்சிகளாயிருக்கிறோம்..
எனக்கெதுவும் புரியவில்லை
பகலையும் இரவையும் கண்டு
அஞ்சும் என் கண்களை என்ன செய்வேன்”
என்கின்ற முகப்பு கவிதை பேசுகின்ற மொழிதான் இந்த தொகுப்புக்கான கட்டியம். உண்மையிலேயே அச்சந்தருவதாயிருக்கிறது இந்த தொகுப்பு முழுவதும். ஏன் என்றும் புரியவில்லை எது குறித்து என்றும் தெரியவில்லை எந்தன் வாசிப்பனுபவம் முழுதும் விந்தி விந்தி வழிந்தது அச்சத்தின் எல்லாச் சாயலும். நான் அதை மறைத்து மறைத்து வாசித்து ஒவ்வொருதடவையும் தோற்றேன்.
“வன்னிக்கான தொடர்புகளை யுத்தம் முற்றாக அழிக்குமுன் கிடைக்கப் பெற்ற அவரது கவிதைகளது தொகுப்பு அவருடன் தொடர்புகள் ஏதுமற்ற இந்த யுத்த காலத்தில் வெளிவருகிறது.” – என்பது தான் இந்த கவிதை தொகுப்பின் அட்டையில் உள்ள மிக இறுதி வாசகம். இப்போது சொல்லுங்கள் நாங்கள் எதற்கு சாட்சிகளாக்கப்பட்டிருக்கிறோம்? அல்லது எதற்கு சாட்சிகளாயிருக்கிறோம்?
ஒரு முதியவனை கண்டேன், அவன் பிறந்த போதும் வளர்ந்த போதும் இருந்தது ஒன்றே அது போர்; அது சார்ந்த மரணங்கள் வலிகள் இன்னபிறவும் சேர்ந்து எப்போதும் சூழ்ந்து கொள்ளும் அவமானங்களாயும்.. அவன் அதற்குள்ளே பிறந்தான் அங்கேயே வளர்ந்தான் அவன் இருப்பு முழுதும் மரணம் சூழ்ந்திருந்தது. எதற்கும் அவன் பெயர்ந்தவன் இல்லை. அவனை எடுக்க அச்சப்பட்டேன் அவன் பேசியது கேட்க பயப்பட்டேன். எந்தன் கையில் கிடந்தான் ஒரு தொகுதித் துயரமாய். எனக்கு தாகமாக இருந்தது நீரருந்தவும் தயங்கினேன் அவன் சாலை முழுதும் பாலையாய் இருந்தது குருதி காய்ந்து. அவனிடம் ஒரு சோடிக் கண்கள் இருந்தது அது பேச வல்லதாயும் புலன் நிறைந்ததாயும் இருந்தது. அவன் இரப்பவனாய் இருக்கவில்லை. அவன் இரந்தபோது அதை கொடுப்பவனாயும் எவனும் இங்கு இருக்கவில்லை. இப்போது சொல்லுங்கள் நாங்கள் எதற்கு சாட்சிகளாக்கப்பட்டிருக்கிறோம் அல்லது எதற்கு சாட்சிகளாயிருக்கிறோம்? – ஒரு முதியவனை கொண்டிருந்த முகப்போவியம் என்னுள் எழுப்பிய வாசிப்பு இது.
முகப்போவியமாய் இங்கே முதுமையோடு தீட்டப்பட்டிருப்பதை எங்கள் வாழ்க்கை என்றே வாசிக்கத்தோன்றுகிறது. இந்த இடத்தில் மறைந்த பெண் கவிஞர் சிவரமணியின் பின்வரும் கவிதைகளின் மீதான வாசிப்பும் பொருத்தம் மிக்கது என நினைக்கிறேன் .
யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்
நட்சத்திரம் நிறைந்த இரவில்
அதன் அமைதியை உடைத்து வெடித்த
ஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஓசை
எல்லாக் குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை
இல்லா தொழித்தது.
எஞ்சிய சிறிய பகலிலோ
ஊமங்கொட்டையில் தேர் செய்வதையும்
கிளித்தட்டு மறிப்பதையும்
அவர்கள் மறந்து போனார்கள்….
எங்கள் குழந்தைகள்
திடாரென்று
வளர்ந்தவர்களாகி விடுகிறார்கள்
“பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஓவ்வொரு குருதி தோய்நத
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்சுவர்களும்
காரணமாய்
எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்.”
-சிவரமணி
யுத்தகாலம் சகலதையும் முதுமைக்குள்ளாக்கும் நெருக்கடியை தந்து கொண்டிருக்கிறது நீண்ட காலமாய். எல்லோரிடமும் பாதுகாப்பு வேண்டி நாங்கள் முதுமையடைகிறோம் , இதில் இயற்கையாகவும் யுத்தத்தின் இயல்பாகவும் மரணம் நம்மை நிரந்தரமாக ஆட்கொள்கிறது. யுத்த காலத்தில் தவறிப்போன இளமைக்காலம் குறித்த வருத்தம் வேதனை தருவதாக இருக்கிறது.
சாவை வளர்த்து வாழ்வுக்கு கொடுத்ததன் மூலம் சாவே வளர்ந்த சூழலில் வந்த கவிதைகள் இவை, கரு முட்டையை நோக்கி சிரமத்துடன் நீந்திச் செல்லும் விந்தணுவைப்போல இந்தக் கவிதைகளினது ஜீவிதம் குறித்தான முனைப்புகளும் பெரியவை. வாழ்ந்தாக வேண்டும் என்ற உயிரின் துடிப்பு ஓடிக்கொண்டிருக்கும் மக்களின் குரலாய் ஒலிக்கிறது. ஒவ்வொருவருடைய குருதியாலும் உடைந்துபோன சுவரில் எழுதப்பட்டிருக்கிறது மானுடத்தின் பாடல்.
“போர் அறுத்தெறிந்த வாழ்க்கை
குருதி சிந்தக் கிடக்கிறது நடுத்தெருவில்
நாய் முகர…
……………………..
யாரும் உரிமை கோராத
இந்த இரத்தத் துளியை என்ன செய்வது?
அதில் மிதக்கும் மிதக்கும் கண்களையும்
ஒலிக்கும் குரல்களையும் என்ன செய்வது?”
எங்கள் எல்லோரிடமும் அடை காக்கப்பட்ட மௌனங்களை தவிர பதில் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
என்றென்றும் நான் ஆராதிக்கின்ற கவிதை இது. வாழ்தலின் உச்சபட்ச வேண்டுதலையும் இருத்தலின் எல்லாவித சாத்தியப்பாட்டையும் வெளிப்படுத்திய மானுடத்தின் மண்டியிட்டழும் குரல் இது. விழியோடும் உவர்ப்போடும் விரல் கொண்ட நடுக்கத்தோடும் நான் இதனை வாசித்து முடித்தேன் ..
“எந்தப் பெருமையும் இல்லை
போங்கியோடும் கண்ணீரின் முன்னால்
மரணத்தின் முன்னே
மண்டியிட்டழும் நாட்களை பெறுவதில்
எந்தச் சிறுமையும் இல்லை
மரணத்திலும் எளியது
கசப்பின் துளிகள் நிரம்பியதெனினும்
ஒரு பொழுதேனும் வாழ்தல் மேலானது
என்று எவ்விதம் உரைப்பேன்? …..” .
(சாட்சிகளின் தண்டனை)
ஊசலாடுகின்ற பெண்டுலம் கடிகாரத்தை உயிர்ப்பிப்பது போல இந்தக் கவிதை என்னுள்ளே அலைந்து கொண்டே இருக்கிறது படித்த நாள் முதல். மிக அண்மையில் யுத்தத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட சிறுவர்களை மறுவாழ்வின் முடிவில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வின் புகைப்படங்களை காண நேர்ந்த போது கண் நெடுக வழிந்தது மேற்சொன்ன கவிதை வரி. மகாகனம் பொருந்தியவர்களே போரை முடித்து விட்டீர்கள், போர்க்கணக்கை நீங்கள் விரும்பியவாறு எழுதிக்கொள்ளுங்கள், புகழை எப்படியும் எழுப்பிக்கொளுங்கள் வேண்டுவதை எடுத்துக்கொள்ளுங்கள்; கூண்டுகளில் இருக்கும் எங்கள் மனிதர்களை திருப்பிதாருங்கள். மண்ணுலகில் உங்களின் மாட்சிமைக்கெதிரே மண்டியிடுகிறோம் வேண்டுவதெல்லாம் அவர்கள் வாழ்க்கை ஒன்றே! விட்டுவிடுங்கள் எல்லோரையும்.
“ஒரு வரிசையில் நீ
இன்னொரு வரிசையில் நான்
சனங்களின் கண்களை எடுத்துக் கொண்டு
அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்…”.
சனங்களின் கண்கள் இரண்டு வரிசையிலும் பிடுங்கப்பட்டது எந்த வரிசையில் இருந்தவர்களும் தப்பவில்லை. அவர்களிடம் கண்களை தவிர வேறதுவும் இருக்கவில்லை அதனால் அவர்கள் கொடுக்கவும் இல்லை. போர் தனக்கு ஒரு முகமே இருப்பதாகச் சொல்லி எல்லோர் கண்களையும் பிடுங்கியது. போரிடம் நல்ல முகம் என்பதே இல்லை என்றறிந்த மக்களிடம் கண்கள் பிடுங்கப்படிருந்தன.
3..
கருணாகரனின் கவிதைகள் பேசும் அரசியல் குறித்து அவதானத்தோடே பேச இருக்கிறது. அவரது படைப்புலக அரசியல் குறித்த ஆய்வை ஒரு பாதுகாப்பு கருதி சற்று வெளியே நிறுத்தி விட்டு இந்த தொகுப்பை வாசிக்க வேண்டிய பொறுப்பு உயிர் குறித்தான அச்சங்கள் அற்று இலக்கியம் பேசுகின்ற எங்களுக்கு இருப்பதாகவே உணர்கிறேன். அதுவே இங்கு அரசியல் சார்பு விமர்சனங்களை மீறி இந்த தொகுப்பு மீதான ஒரு மட்டுப்படுத்திய வாசிப்பை கொடுக்கிறது ஆனால் அது கவிதை அனுபவத்தில் எந்தக் கட்டுப்பாட்டையும் விதித்தாக தெரியவில்லை . ஆனாலும் அவரும் தீவிர நிலையில் கவிதைகளை எழுதிய படைப்பாளியே என்பதையும் மறுப்பதற்கு இல்லை. இங்கே கருணாகரனின் படைப்புகளில் உள்ள சிறப்பம்சமாக ஒன்றை சொல்ல வேண்டும், அவருடைய கவிதைகளுக்கும் வாசகனுக்கும் இடையில் எப்போதும் இன்னொன்றை அனுமதிப்பதில்லை. அவரது கவிதைகளே அதன் வாசகனோடு இயல்பாய் பேசிவிடுவதால் அவரது கவிதை குறித்து பேச வருபவர்களுக்கு இன்னொரு தளம் இலகுவாக கிடைக்கிறது அதன் விளைவுகள் குறித்து உரையாட .இது ஏற்படுத்தி தரும் வெளி வசதியானது இது போன்ற வாசிப்புநிலை குரல்களை செவிமடுக்க.
கருணாகரனின் கவிதைகளில் நாங்கள் சரளமாக சந்திக்க கூடிய இன்னொரு நபர் கடவுள் மற்றும் தேவதூதன், தேவாலயம், கோவில் சார்ந்த அவரது துணைப்படிநிலைகள் – குறியீடுகளாகவும் படிமங்களாகவும் நிறைந்திருக்கிறது கவிதைகள் நெடுக. நிராசைகள் நிறைந்திருக்கும் உலகில் முதல் விமர்சனப் பொருள் நம்பிக்கைகளும் கோட்பாடுகளும்தான். அவர்களால் நம்ப வைக்கப்படுகின்ற – அல்லது அவர்கள் நம்புகின்ற ஒன்றிடம் அலைகழிக்கப்பட்ட கேள்விகள் சென்றடைகின்றன. சார்போ எதிர்ப்போ பதிலளிக்க வேண்டியது அங்கே அவர்கள் தான். கையறு நிலையில் துயரம் மிகுந்தவர்களின் பிரார்த்தனைதான் பிதாக்கள் மீதான ஏளனப்பாடலாகிறது – அவர்களுமறியாமல். எல்லாமறிந்த கடவுள்களின் அபயமளிக்கின்ற புன்னகையையும் குண்டு துளைத்திருக்கிறது. கோபுரத்தில் கொல்லப்பட்டிருக்கின்ற புறாக்களின் குருதி பீடத்தில் வழிந்திருக்கும் போது கேள்விகள் இடம்பெயர்ந்தலைகின்றன உயிரை காப்பாற்றிக்கொள்ள.
“…………………………………………………
முடிவற்ற சவ ஊர்வலத்தில்
சிக்கியழிகிறது பொழுது
புனித நினைவாலயலங்கள்
ஒவ்வொன்றாக வீழ்கின்றன
எங்களை கைவிட்ட கடவுளர்கள்
எங்களால் கைவிடப்பட்ட கடவுளர்கள்
எல்லாம் இங்கேதான்
இனிவரும் முடிவற்ற இரவு
நமது பிணங்களின் பரிசாக “
(இருள்)
முடிவற்ற இரவு குறித்தான பதட்டங்களில் எழுதப்படுகிறது பிரார்த்தனையின் பாடல் – நம்பிக்கை அழிந்திருப்பவர்களிடம் இருந்து – எழுத்துப் பிழைகளுடன் தாறுமாறாக..
……………………………………………………………
சந்தையிலுருந்து திரும்பிய
பெண்ணிடம்
தன்னை அறிமுகப்படுத்திய கடவுள்
கேட்டார் இரண்டு காசுகளை கடனாக
பசி தணிந்த பிறகு காத்திருந்த
கடவுளை ஏற்றிச் செல்லவில்லை
எந்தப் பேருந்தும்
யாரும் பேசாமல் சென்றபோது
தனித்த கடவுள்
வாழ்ந்து விட்டு போங்கள் என்றார்
சலிப்பு நிரம்பிய கோபத்தோடு
…………………………………………………………………
( கண்ணழிந்த நிலத்தில் )
மேற்குறித்த வரிகளை கடந்து செல்ல எமக்கு தேவையாயிருப்பது ஒரு புன்னகை மட்டும் அன்று – கைவிடப்பட்ட மனிதர்களின் சார்பாக கடவுளை புறக்கணிக்க வேண்டியிருக்கிறது வருத்தத்துடன்.
மேலும் கடவுளர்கள் குறித்து நிரம்புகிறது கவிதைக்கான பாடு பொருள்
..கொலை வாளை வைத்திருந்தான் என்று
குற்றஞ்சாட்டப்பட்ட பழக்கடைக்காரனின்
தலையை கொய்துகொண்டு போன
புதிய கடவுளை சனங்கள் திட்டினார்கள்..
பாடுகள் சுமக்கின்ற மனிதர்களால் வரையப்படும் கடவுள் குறித்தான சித்திரங்கள் முடிவுறுவதாக தெரியவில்லை, கொடும் பாலையில் அனல் காற்று வீசியிறைக்கும் மணல் துகளாய் நிறைகிறது விழியோடும் வழியோடும்.
சாத்தானும் கடவுளும்
ஒரே ராஜ்ஜியத்தில் பங்கு வைத்துக்கொண்ட
உலகத்தில்
சனங்களின் நிழலைக் கண்டு
நெடுங்காலம் என்று சொல்லிச் செல்லும்
ஒருவனை கண்டேன்
அன்றிரவின் இறுதிக் கணத்தில்
( வளாகத்தின் நிழல்களில் படிந்திருக்கும் பயங்கரம்)
சாத்தான்களாலும் கடவுளர்களாலும் பங்கு போடப்பட்டிருக்கும் உலகில் சனங்களின் நிழலைத் தன்னும் கண்டவனை காணமுடியாமை உச்சநிலைத் திகிலை வாசிப்பு மனதில் நிகழ்த்துகிறது. மேற்குறித்த கவிதைகளில் எல்லா நிலைகளிலும் கடவுளர்கள் ஒருவராக இருப்பதில்லை அனால் சோதிக்கப்படும் பாடு நிறைந்த மக்கள் ஒருவராகவே இருக்கிறார்கள் என்பது எத்தனை முரண் நகை.
4.
இந்த தொகுப்பு ஏறத்தாள நூற்றுப்பதினைந்து பக்கங்களில் கருணாகரனின் ஐம்பது கவிதைகளை உள்ளடக்குகிறது. வடலி வெளியீட்டின் தொகுப்பு. அவரது கவிதைகளை நன்கு புரிந்த அவரது நண்பர்களால் பெரும் சிரமத்தின் மத்தியில் நேர்த்தியோடு பதிப்பிடப்பட்டிருகிறது. இதில் உள்ளடக்கப்படிருக்கும் எல்லாக்கவிதைகளையும் யுத்தத்தின் அவலச்சுவை என வகைப்படுத்த முடியாது. குற்றமும் தண்டனையும் மன்னிப்பும், தேவ தேவனின் பறவை, மூடிய ஜன்னல், சிரிக்கும் பறவை, பெண்நிழல், மாமிசம், பறக்கும் மலைகள், உறக்கத்தில் வந்த மழை, குழந்தைகளின் சிநேகிதன் முதலிய கவிதைகள் வாழ்வியலின் தொடர்ச்சியை அதன் தருணங்களில் பதிவு செய்பவை. அந்த வகையில் குழந்தைகளின் சிநேகிதன் எனக்குபிடித்த கவிதை – இன்பம் தொற்றிக்கொள்ளக் கூடியது எப்போதும் நீங்கள் அதை காவிச் செல்பவராய் இருங்கள் என்கிறது ஒரு பொன்மொழி – இங்கே குளிர் விற்பவர்கள் குழந்தைகளிடம் அப்படித்தான் இருக்கிறார்கள் இன்பத்தை அதன் கரைந்து விடும் (நிலையற்ற) நிலையில் எடுத்துச் செல்பவர்களாக..
“குளிர் விற்பவனின் மணியொலியில்
காத்துக்கொண்டிருக்கிறது
குழந்தைகளின் மகிழ்ச்சி“
என்ற எளிய கவிதை மொழி சிறுவர்களை நோக்கி பேசுகிறது. இதன் எளிமைக்காகவே இதனை நேசிக்கிறேன்.
…………………..
என்னிடமும் உண்டு
பள்ளி நாட்களில் குளிர் விற்றவனின்
மணியொலியும்
குளிர்ந்தினிக்கும் துளிகளும்
அவனிதயத்தில் நிறைந்திருந்த குழந்தைகளின் மகிழ்ச்சியும்”
யாரிடம் இல்லையென்று சொல்லுங்கள்? மணியொலி, மகிழ்ச்சி மற்றும் குளிர்ந்தினிக்கும் துளிகளைத் தந்தவர் புன்னகை.
போர் தன் சமன்பாட்டை எங்களில் எழுதிவிடுகிறது, அதற்கு விடையளிக்க முடியாதவர்களை தன் வாயால் விழுங்கி விடுகிறது. உண்மையில் அதற்கொரு விடையும் இல்லை எனக் கண்டிருக்கின்ற நாங்கள் இறந்திருக்கிறோம் எல்லா விதமாகவும். யுத்தத்தின் விளைவுகள் எவருக்கும் எப்போதும் மகிழ்ச்சிகுரியவை அன்று. யுத்தம் தன் சாட்டையை எல்லோரிடமும் விசிவிட்டு செல்கிறது அதன் வலிகள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமாய் இருக்கிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் போரின் வால் எங்களை சூழ்ந்திருக்கிறது. அது தருகிற அப்பாலான விளைவுகள் வெளிவருகிறது வேறுபட்ட வடிவங்களில்.
“வாசலைத் திறந்து
செல்ல முடியாத
பொம்மை
எல்லோரும்
வெளியேறிச் சென்றபின்
தனித்திருக்கிறது
குழந்தையின் ஞாபகங்களுடன்”
குழந்தைகளும் வாசலைத் திறந்து வெளியேறிவிட்ட வீடுகளில் ஞாபகங்களுடன் பொம்மைகளாக இருக்கிறார்கள் அவர்களை பெற்றவர்கள். உண்மையில் போர் வரின் பிரிதலோ இல்லை பொருள் வரின் பிரிதலோ, பிரிதல் வேதனையானது அது வாழ்வின் பிடிமானம் குறித்தான கடைசி நூற்புரியையும் பரிசோதித்து விடும் வல்லமை உள்ளது. எங்கள் பிடி நழுவிக்கொண்டிருக்கிறது எல்லா வகையிலும். மேற்குறித்த அருமையான கருணாகரனின் இந்தக் கவிதை இத் தொகுப்பில் இடம் பெறவில்லை. அனால் மேற்குறித்த கவிதை எம்மக்குள் நிகழ்த்தும் கிளர்வை இன்னொரு கவிதை சாத்தியப்படுத்துகிறது தொகுப்பில்.
“பின்னிரவில் தூக்கமின்றித் தவிக்கும் கிழவன்
கனவு அழைத்து போகும்
இளமைக் காலத்துக்கும்
பிள்ளைகள் கொண்டு சென்ற
தூக்கத்துக்கும் இடையில் கிடந்தது அவிகிறான்“
என்று ஆரம்பிக்கிறது தூக்கத்தை தொலைத்த கிழவன் கவிதை
“கால முரணுக்கிடையில்
தன்னை கொடுத்திருக்கிறது
அன்பை ஊற்றிச் செல்லும் தொலைபேசி
கண்டங்களுக்கும் கடலுக்கும் அப்பாலான கருணையில்..“
காலம் எல்லாவிதத்திலும் முரண்தான் – யார் அறிந்தோம்?
சர்வதேச தேதிக்கோடு என்று சொல்லப்படுகின்ற பூமிக்கோட்டில் ஒட்டிக்கொண்டிருக்கும் இரண்டு நீர்த்துளிகளின் இடைவெளியை தூரக்கணக்கில் சொன்னால் பூச்சியம் நேரக்கணக்கில் சொன்னால் நாள்; அது போலதான் உறவுகளை கருணையின் கணக்கில் ஒன்றாகவும் காலத்தின் கணக்கில் வேறாகவுமாக பிரித்து வைக்கிறது கண்டங்கள்.
“வெவ்வேறு கண்டங்களுக்கு இடையில்
வெட்டித் துண்டாடப்பட்ட
அன்பின் உடல் கிடந்த துடிக்கிறது
தந்தையென்றும் பிள்ளை என்றும்
அங்கும் இங்குமாக“
அன்பின் உடலின் துடிப்பு குழந்தையின் ஞாபகங்களோடு தனித்திருக்கின்ற பொம்மையை அழைத்து வருகிறது மீண்டும் மீண்டும்.
காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை. சிலர் காணமல் போனபோது அழுதோம் சிலர் காணாமல் போனபோது மகிழ்ந்தோம். சிலர் எழுதி வைத்துவிட்டு காணாமல் போனார்கள். சிலர் எழுத வைத்து விட்டு காணாமல் போனார்கள். சில காணாமல் போதலுக்காய் இன்னும் சில காணாமல் போதலை நியாயம் செய்தார்கள். நாங்களே எங்களுக்குள் காணாமல் போதலை நிகழ்த்தினோம் இன்னும் என்னவாய் எல்லாம் சாத்தியமோ அவ்வாறாய் எல்லாம் நாங்கள் காணாமல் போயிருக்கிறோம். சரியோ-தவறோ, நியாயமோ- அநியாயமோ, காலத்தின் தேவையோ-களத்தின் தேவையோ ஒவ்வொரு காணாமல் போதலும் ஒரொரு துயர் மிகுந்த இரவை உருவாக்கியது எங்கள் வரலாற்றில் . அந்த இரவில் விளித்திருந்தவர்களுக்கு தெரியும் அதன் வலி.
காணாமல் போனவனின் புன்னகை என்கின்ற கவிதை எங்கள் ஞாபகங்களில் சில கேள்விகளை எழுப்புகிறது. திரும்பிச் செல்லவும் முடியாது அங்கிருக்கவும் முடியாது என்கின்ற நிலையில் காணாமல் போனவன் புன்னகை எங்களை தொடர்கிறது அல்லது எங்களை தடுக்கிறது. காயமறுக்கும் கண்ணீர்த்துளிகளின் முன்னிலையிலும் குருதியின் அருகாமையிலும் சில கேள்விகள் சிந்திக்கிடக்கிறது – காலம் பதில் சொல்லக் கடவது.
” திரும்பிச் செல்ல முடியவில்லை
காணாமல் போனவனின் புன்னகையை விட்டு..”
பெருந்துயரமாக இருக்கிறது காணாமல் போனவனின் புன்னகையில் இன்றும் உறைய மறுத்திருக்கும் குருதித் துளி குறித்து.
நன்றி: தீபன், வைகறை மாதஇதழ் (கனடா)
07 Dec

மரணத்தின் வாசனை- ஒரு அறிமுகம்

அகிலனின் மரணத்தின் வாசனை கனடாவில் வெளியிடப்பட்டு, அது என்னுடைய கையுக்குக் கிடைத்து 2 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் ஒருவாறு வாசித்து முடித்திருக்கிறேன். ‘போர் தின்ற சனங்களின் கதை’ என்கிற உபதலைப்போடு, வடலி பதிப்பகத்திடமிருந்து வெளியாகியிருக்கிற அகிலனின் பன்னிரண்டு சிறுகதைகள் அல்லது அனுபவத் தூறல்களின் தொகுப்புத்தான் ‘மரணத்தின் வாசனை’.

 

  • ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்
  • ஒரு ஊரில் ஓர் கிழவி
  • மந்திரக்காரன்டி அம்மான்டி
  • குமார் அண்ணாவும் மிளகாய்க்கண்டுகளும்
  • ஒருத்தீ
  • சித்தி
  • நீ போய்விட்ட பிறகு
  • சலனங்கள் அற்றவனின் கடைசி நாள்
  • தோற்ற மயக்கங்களோ
  • கரைகளிற்கிடையே
  • செய்தியாக துயரமாக அரசியலாக
  • நரைத்த கண்ணீர்

 

மேற்சொன்ன தலைப்புகளில் படைக்கப்பட்டிருக்கிற படைப்புகள் அத்தனையிலும் ஒரேயொரு ஒற்றுமை இருக்கிறது. அது ‘மரணத்தின் வாசனை’. முதலில் வருகிற ‘ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்’ கதையில் நாசி துளைக்கிற அந்த வாசம், அம்மம்மா, சித்தி, நண்பன் தொடக்கம் நேசித்த நாய் எனப் பல தாங்கிகளில் வந்தாலும் புத்தகத்தை மூடிவைத்த பின்னரும் விலகாமல் இருக்கிறது.

 

எல்லா மரணங்களுக்கும் பொதுவான ஒரே விஷயமாக இருப்பது, போர். நீண்ட கொடும் போர். மண்ணில் மரங்களைக்கூட வேரூன்றவிடாமல் விரட்டியடிக்கிற போர். சனங்களைத் தின்கிற போர். அந்தப் போரின் காரணமாக அகிலனும் முண்டியடித்து ஓடுகிறார். அந்த ஓட்டத்தில் அவர் சந்திக்கிற சாவுகள்தான் இங்கே கதைகளாக உருப்பெற்றிருக்கின்றன. பல சமயங்களில் நாங்கள் மறந்துபோய்விட்ட, அல்லது மறந்துபோய்விட்டதாய் நாங்கள் நம்ப முயன்றுகொண்டிருக்கிற எங்களின் வாழ்வியல்க் கோலங்களை அகிலன் தொட்டுச்செல்கிறார், கூடவே பக்கச்சார்பு குறைவான ஒரு சாதாரண ‘தமிழ்ப் பொடியன்’ கண்ட அரசியலையும்தான்.

 

அகிலனின் ஒவ்வொரு கதையிலும் ஈழத்தில் ஒரு இருபது வருடம் காலம் கழித்தவன் என்கிற ஒரு தகுதியில், என்னை இணைத்துப் பார்க்க முடிகிறது. அகிலன் போன்றோர் அனுபவித்த துயரங்களை நான் அனுபவித்திருக்கவில்லை. ஆனாலும் அவர் சொல்கிற கதைகளின் பின்னணிகள் என்னுடன் ஒட்டியதாய் இருப்பதாக ஒரு மன ஓட்டம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. அகிலன் அனுபவித்த பல இன்பதுன்பங்கள் எனக்கு நேரடியாகக் கிட்டவில்லை. ஆனால் ஒரு பார்வையாளனாகவாவது பார்க்கின்ற சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

 

அகிலன் இரண்டுபேரை வைத்தியம் கிடைக்காத காரணத்தால் இழந்திருக்கிறார். அவரது அப்பா, வைத்தியசாலைக்குக் கொண்டுபோகமுடியாமல் இறந்திருக்கிறார். (ஒரு சின்னப் பையனின் அப்பா செத்துப்போகிறார்). இளமையில் அப்பா செத்துப்போனார் என்பதைவிட, ‘அப்பா வைத்தியம் கிடைக்காமல் செத்துப்போனார்’ என்கிற ஒரு அங்கலாய்ப்பு அகிலனிடமிருந்து வருகிறது. அவரது சித்திகூட இப்படியாக வைத்தியசாலையில் மருந்து கிடைக்காமல் செத்துப்போகிறார். அந்த மரணமும் அகிலனின் மனதில் ‘சித்தி மருந்து கிடைக்காமல் செத்துப்போனா’ என்றுதான் விதைத்துச் செல்கிறது. எனக்கும் கிளிநொச்சி வைத்தியசாலையில், விசக்கடியில் தப்பிப் பிழைத்து, காய்ச்சலுக்கு மருந்தில்லாமல், இரண்டு வயதும், ஒரு வயதும் நிரம்பிய இரண்டு சின்னைப் பையன்களைத் தவிக்கவிட்டு இறந்துபோன ஸ்ரீ அண்ணா மனதில் வந்து போகிறார்.

 

கணவன்/காதலனால் கைவிடப்பட்டு அல்லது ஏமாற்றப்பட்ட இரண்டு பெண்களைப் பற்றியும் அகிலன் சொல்லிப்போகிறார் (ஒரு ஊரில் ஓர் கிழவி, சித்தி). அந்தப் பெண்களிடம் இயல்பாகத் தொற்றிவிட்ட பிடிவாதம் போன்றவற்றையும் தொட்டுச்செல்கிறார். அதுவும் யார் வீட்டிலும் நிலையாகத் தங்காமல், அங்கும் இங்குமாக அலைபாய்ந்து திரிகிற, உறவினர்களால் ‘அடங்காப்பிடாரி’யாகப் பார்க்கப்படுகிற அவரது ‘சித்தி’யின் உருவில் நான் என்னுடைய மாமியைப் பார்க்கிறேன். அம்மனுடன் சகோதரியாக, தாயாக, மகளாக ஏன் ‘வேசை’ என்று விளிக்குமளவு உரிமையுள்ளவளாகப் பழகும் அவரின் அம்மம்மா (ஒரு ஊரில் ஓர் கிழவி) எனக்கு எங்களூர்க் கிழவிகள் சிலரைக் கண்முன் நிறுத்துகிறார். அம்மாவிடம் அடிவாங்காமல் சின்னப் பொடியனைக் காப்பாற்றும் அக்காக்கள் ஊரெல்லாம் பரவி இருந்திருக்கிறார்கள். தம்பிகளைப் பிள்ளைகளாய் வளர்க்கும் அந்த உறவுகளைப் பற்றிய எண்ணக் குவியல்களை மீட்டு வருகின்றன அக்காக்கள் பற்றி பெரும்பாலான கதைகளிலும் அகிலன் காட்டும் பிம்பங்கள்.

 

அவர் சொல்கிற ஜாம் பழம், வீரப்பழம் போன்ற பழங்கள் எனக்கு எங்கள் உறவுகள் இருந்த முரசுமோட்டையை ஞாபகப்படுத்திச் செல்கின்றன. எங்கள் சின்ன மாமா வீட்டில் ஒரு ஜாம் பழ மரம் இருந்தது. ராஜி அண்ணா ஏறிப் பறித்துத் தருவான். மறக்கமுடியாது. அந்த மரத்தின் கீழ் முதன் முதலாக சின்ன மாமாவிடம் கேட்டுவாங்கிச் சுவைத்த சுருட்டையும். நேமி அண்ணாவின் கையைப் பிடித்துக்கொண்டு போய் வந்த அந்தக் கோவில் திருவிழா, எனக்கு அருகில் வந்து அடிப்பதுபோல் பாவனை காட்டிக் காட்டி மேளம் அடித்த அந்த மேளக்காரர், ஒரு கட்டைக்கு ஒன்றாக இருக்கிற வீடுகள், 2004ல் கிரிக்கெட் விளையாடிய அந்த விவேகானந்தாப் பள்ளிக்கூட மைதானம், இவ்வளவு தூரம் அடிக்கிறியள் என்று வியந்த பெறாமக்கள், இரவில் படுத்துறங்கிய அந்தக் கொட்டில்….. முற்றுமுழுதாக வன்னியில் வாழாவிட்டாலும், அவர்களின் இந்த வாழ்வியல் எனக்குப் பிடித்திருந்தது. யாழ்ப்பாணத்தில் காணாத ஒரு சுகமான வாழ்வு அங்கே இருந்தது.

 

இந்தத் தொகுப்பிலேயே என்னைப் பாதித்த கதை ‘தோற்ற மயக்கங்களோ’. மேலோட்டமாகப் பார்த்தால் அந்தக் கதையில் மரணம் இல்லையோ என்று தோன்றும். ஆனால், நுண்ணிய பாதிப்பைத் தரவல்ல இரண்டு ஜீவன்களின் மரணத்தை அகிலன் அந்தக் கதையில் படம்பிடித்திருந்தார். அவர் செல்லப் பிராணிகளுக்கு வைத்த பெயர்கள், அதை எங்கிருந்து பெற்றார் என்பதெல்லாம் எங்கள் பால்யகாலச் சுவாரஸ்யங்கள். நானும் ‘டெவில்’ என்றொரு நாயை பாலில் எறும்பெல்லாம் போட்டு ஊட்டி வளர்த்தேன். என் ‘டெவிலை’யும் யுத்தம் பிரித்தது, வேறுவிதமாக.

 

அகிலனின் எழுத்தில் ஒரு அப்பாவித்தனம் இழையோடிக் கிடக்கிறது. அந்த அப்பாவித்தனம்தான் அவரது பலமும், பலவீனமும். இப்படி அப்பாவித்தனமான எழுத்துக்களை ‘மேதாவிகள்’ ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதனால் அகிலனின் இந்தப் படைப்பு ஒதுக்கப்படலாம், இன்றைய மேதாவி இலக்கியச் சூழலில். ஆனாலும், அந்த அப்பாவித்தனத்தினூடே ஊமைக் குசும்பனாக அவர் பேசும் அரசியல் எனக்குப் பிடித்திருந்தது. நண்பன் ஒருவனின் மரணம் பற்றிய ‘சலனங்கள் அற்றவனின் கடைசி நாள்’ என்கிற கதையில் அவரது நண்பன் கேசவன் போர் காரணமாக ஆறு வருடங்களாக இடுப்புக்குக் கீழ் இயங்காமல் போய் இறந்திருப்பான். அந்தக் கதையில் சில இடங்களில் அகிலன் நுட்பமாக அரசியல் பேசுகிறார். இடுப்புக்குக் கீழே உணர்ச்சியற்றிருக்கும் கணவர்களைச் சுமக்கும் அக்காமார்களின் ‘தியாகம்’ என்று கட்டமைக்கப்பட்ட வாழ்வைத் தொட்டுக்காட்டி, பல விஷயங்களை எங்களின் சிந்தனைக்கு விட்டுச்செல்கிறார்.

 

ஆறு வருடமாகப் படுக்கையில் கிடந்த கேசவனின் மரணத்தில், அவனது அவஸ்தையிலிருந்தான விடுதலை பற்றிய தனது நிம்மதியைப் பதிவு செய்யும் அதேவேளை, ‘இனியும் கேசவன்கள் உருவாகமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் என்கிற கேள்வி மனசைக் குடைகிறது. துப்பாக்கிகளைத் துதிப்பவர்களுக்குத் தெரியாதபோது எனக்கெப்பிடித் தெரிந்திருக்கும்?’ என்கிற கேள்வியோடு அவர் அந்தக் கதையை முடித்திருக்கிற விதம், வலிமை மிகுந்தது. அதே போல் ‘துப்பாக்கிகளில் நல்ல துப்பாக்கி கெட்ட துப்பாக்கி எனப் பிரிவுகள் இருப்பதாக நம்புகிறார்கள் மொக்குச் சனங்கள். துப்பாக்கிக்குத் தெரிந்ததெல்லாம் கொலை. அது மட்டும்தான்’ என அவர் சொல்லிச் செல்லுகிற அந்தச் செய்தி கவனிக்கப்படவேண்டியது (கரைகளுக்கிடையே).

 

அகிலனின் எழுத்துக்களில் குறை இல்லாமலில்லை. தொழில் முறை எழுத்தாளர்களின் எழுத்துக்களோடு ஒப்பிடும்போது சில கதைகளில் அகிலனின் எழுத்தின் செழுமை குறைவாகவே இருப்பதாகப்படும் (என்னால் இந்தளவுகூட எழுதமுடியாது என்பது வேறு விஷயம்). ஆனால் எழுத எழுத அகிலனின் எழுத்து இன்னும் செழுமை பெற்று வீரியமாக வரும் என்பதில ஐயமில்லை. ஏனென்றால் ‘ஆக்க இலக்கியங்கள்’ உருவாவதற்கு அத்தியாவசியம் என்று மெலிஞ்சி முத்தன் சொல்லும் ‘சூழலை உற்றுப் பார்க்கிற’ தன்மையும், சுஜாதா சொன்ன ‘காரணங்களும்’ அகிலனுக்கு இருக்கின்றன. களம் கிடைத்தால் அகிலன் அடித்து ஆடுவார் என்பது திண்ணம்.

பதிப்பகம்

வடலி பதிப்பகம் மேற்கொண்ட ஒரு நல்ல முயற்சி இது. சமீபகாலமாகத்தான் இவர்கள் இந்தத் துறைக்குள் காலடிவைத்திருக்கிறார்கள். ஈழத்துப் படைப்பாளிகளுக்குப் புத்தகம் அடித்துக்கொடுப்பதில் இருக்கிற பொருளாதாரச் சிக்கல்கள் இவர்களை விழுங்கிவிடாமல் இருக்கவேண்டும் என்பதுதான் இவர்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். அச்சுக்கோர்ப்பு ரீதியாக முன்னேறுகிறார்கள். கானா பிரபாவின் ‘கம்போடியா’ சிறப்பான அச்சுக்கோப்பு அல்ல. ‘மரணத்தின் வாசனை’ கூட அவ்வளவு சிறந்த ஒன்றாகச் சொல்லமுடியாவிட்டாலும், ‘கம்போடியாவை’ விட நன்றாக வந்திருந்தது. சமீபத்தில் வெளியான கே.எஸ்.பாலச்சந்திரனின் ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்’ அற்புதமாக வந்திருக்கிறது.

வடலி சரியான திசையில் போகிறது, என்ன எம்மவரிடம் இருந்து ஆதரவேதும் பெரியளவில் இல்லை என்கிற குறைதான் இவர்கள் நிலைத்து நிற்பதில் பெரும் சிக்கல்களை உருவாக்கியிருக்கிறது.

 

சின்னச் சர்ச்சை

ட்விட்டரில் இந்தப் பதிப்பைத் திறந்தவுடனே ஒரு குறை கண்டதாகச் சொல்லியிருந்தேன். சாயினி கூடக் குறை காண்பது பற்றி ஒரு மறைமுகக் குத்துக் குத்தியிருந்தார். தொப்பி அளவாயிருந்ததால் போட்டுக்கொண்டேன் :). அந்தக் குறை இதுதான். ‘சொல் விளக்கக் குறிப்புகள்’ எதற்காக? வணிக ரீதியான சில நோக்கங்களுக்காகத்தானே. அதாவது இந்தப் படைப்பு இயலுமானளவு பெரியதொரு வீச்சத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்கிற நோக்கத்தால்தானே? இதுவும் ஒரு வகையிலான பெரியண்ணன்களைக் குசிப்படுத்தும் நோக்கம் இல்லையா? (தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளலாம்)

0

நன்றி: கிருத்திகன்

27 May

மரணத்தின் வாசனை!

இணையம் மூலமாக நான் சில புத்தகங்கள் வாங்கியிருந்தேன். ஈழத்து எழுத்தாளர்களான த.அகிலன், கருணாகரன் ஆகியோரின் புத்தகங்கள். அகிலனின் ‘மரணத்தின் வாசனை’, ‘தனிமையின் நிழல்குடை’ ஆகியவையும், கருணாகரனின் ‘பலி ஆடு’ ம் வாங்கியிருந்தேன். வடலி வெளியீடாக வந்த அந்த புத்தகங்கள் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டு நேற்று என் கைக்கு வந்து சேர்ந்தன.

புத்தகம் வாங்கும்போதே, மனமெல்லாம் குழப்பமும், கொந்தளிப்புமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் வாங்குகின்றேன், வாசிப்பேனா என்று எண்ணினேன். எத்தனையோ புத்தகங்கள் தொடப்படாமலே தூங்கிக் கொண்டு இருக்கின்றன. அதனால் இவை இப்போது அவசியமா என்று தோன்றினாலும், ஏதோ ஒரு உந்துதலில் வாங்கினேன்.

புத்தகம் கிடைத்ததுமே ‘மரணத்தின் வாசனை’ வாசிக்க வேண்டும்போல் இருந்தது. இப்போ இருக்கும் வலிகளுடன் கூடிய மனநிலையில், இந்தப் புத்தகம் வாசிக்கவே வேண்டுமா என்று தோன்றிய எண்ணத்தை புறந்தள்ளி விட்டு, முன்னுரையை பார்த்து விட்டு, முதலாவது கதையான ‘ஒரு சின்னப் பையனின் அப்பா செத்துப் போனார்’ ஐ வாசித்தேன். முதலே ஓரளவு இந்தக் கதையின் கரு தெரிந்திருந்தாலும், வாசித்த பொழுதில் கண்ணீர் என் அனுமதியின்றி வழிந்ததை தடுக்க முடியவில்லை. அகிலன் தனக்கே உரிய பாணியில் மனதை தொடும் விதத்தில் எழுதியிருந்தார்.

இரு நாட்கள் முன்னாலும், நேற்றும் என் மனது மரத்துப் போனதா என்ற கேள்வியை நான் பல தடவை கேட்டுக் கொண்டேன். காரணம் உறவினர் ஒருவரின் மரணம் என் கண்ணில் நீரை வரவழைக்கவில்லை. எனக்கே வியப்பாக இருந்தது. அது மட்டுமல்லாமல், கேள்விப்பட்ட உடனே ஏதோ ஒரு கவலை வந்தாலும், சிறிது நேரத்திலேயே, ஓரளவு நிதானத்துடன் அந்த மரணத்தை மனது ஏற்றுக் கொண்டது எனக்கே ஆச்சரியத்தை தந்தது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று நினைத்துப் பார்க்கிறேன். தொடர்ந்து ஈழ மண்ணில் நடந்தேறியி்ருக்கும் ஆயிரம் ஆயிரம் மரணங்களாக இருக்குமோ? மரணத்தின் வாசனையை மட்டுமே தற்போது கொண்டிருக்க கூடிய வன்னிப் பகுதி நினைவிலும், உணர்விலும் கலந்து கிடப்பதாக இருக்குமோ?

மரணம் என்பது தவிர்க்க முடியாததுதான். ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதும்தான். ஆனாலும், இப்படியா கொத்துக் கொத்தாக, ஏதுமறியா அப்பாவிகளின் உயிர் போயிருக்க வேண்டும். உலகிலேயே மனிதாபிமானம் என்பது செத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

 

நன்றி: கலையரசி