16 Dec

பி.விக்னேஸ்வரனின் நாடக நூல் வெளியீடு

Translation of The Chairs by Eugène Ionesco

 

சென்ற 8ந்திகதி (8.12.12) சனிக்கிழமை மாலை 4.30 அளவில் சன் சிற்றி பிளாசா ஸ்ரீஐயப்பன் ஆலய மணடபத்தில் பி.விக்னேஸ்வரன் மொழிபெயர்த்த இயூஜின் அயனஸ்கோவின் அபத்த நாடகமான “நாற்காலிகள்” நூலின் வெளியீடு நடைபெற்றது.

ஏற்கெனவே மனவெளி கலையாற்றுக்குழுவினரின் அரங்காடல் நாடக நிகழ்விலே மேடையேற்றப்பட்ட இந்த நாடகத்தை விக்னேஸ்வரனே நெறியாள்கை செய்திருந்தார் எனபதும் இந்நூல் வெளியீட்டு விழாவை மனவெளி கலையாற்றுக் குழுவினரே ஏற்பாடு செய்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடற்குரியது.

அமைப்பாளர்கள் எதிர்பார்த்தபடி நாடகத்துறை சார்ந்தவர்களே நிறைந்திருந்த அரங்கில் வழங்கப்பட்ட உரைகளும் காத்திரமானவையாகவும் பொருத்தமானவையாகவும் இருந்தன.

மனவெளி கலையாற்றுக் குழுவை சார்ந்த செல்வன் வெளியீட்டுவிழா பற்றியும், மனவெளி குழுவினரின் பங்கு பற்றியும் குறிப்பிட்டு, பேச்சாளர்களை அறிமுகம் செய்து விழாவை தொடர்ந்து நடத்தினார்.

வி.என்.மதியழகன், விக்னேஸ்வரன் பற்றிய அறிமுக உரையில், அவரது ஆரம்பகால கலை ஈடுபாடு, இலங்கை வானொலியிலும், ரூபவாகினியிலும் அவரது பங்களிப்பு, அவரது ஆர்வம்< அவர் முன்னோடியாக செய்த நிகழ்ச்சிகள் எனபனவற்றையெல்லாம் விபரமாக குறிப்பிட்ட்டு சிறப்பான அறிமுகத்தை வழங்கினார்..

நாடகத்துறையில் “பட்டயப் படிப்பு’ பெற்றவரும், கவிஞருமான கந்தவனம் அவர்கள், அபத்த நாடகங்கள் பற்றி உரையாற்றினார். இரண்டாம் உலகப்போர் நடந்ததின் விளைவாகவே அபத்தநாடங்கள் பற்றிய சிந்தனை உருவாகியது என்ற பொதுவான கருத்தை அவர் மறுத்துப் பேசினார். முதலாம் உலக யுத்தகாலத்திலே ஏன் இந்தச்சிந்தனை வரவில்லை என்றார். காலாகாலமாக இப்படி மாற்றங்கள் எல்லாத் துறைகளிலும் வரத்தான் செய்கிறது. எனவே அபத்த நாடகத்தின் வருகைக்கும் யுத்தங்களுக்கும் தொடர்பு இருக்கிறதாக நினைக்க முடியாது என்றும், நாற்காலிகள் நாடகத்தைக்கூட அபத்த நாடகமாக கருதமுடியாது என்றும் கூறினார்..

 

“நாற்காலிகள்” நாடக நூலுக்கு, மிகச்சிறப்பானதும் தெளிவானதுமான நீண்ட முன்னுரைய எழுதியிருந்த கவிஞர் சேரன் உருத்திரமூர்த்தி அடுத்து உரையாற்றினார். “ஒரு படைப்பாளி இதைத்தான் எழுதுகிறேன் என்று வகுத்துக்கொண்டு எழுதுவதில்லை. விமர்சகர்கள்தான் அந்தப்பாகுபாட்டை தீர்மானிக்கிறார்கள்.” என்று கூறி முன்னுரையில் தான் கூறிய :இலக்கியத்திற்கு பிறகுதான் இலக்கணம் உருவாகின்றது” என்ற கருத்தை வலியுறுத்தினார். அபத்த நாடங்கள் வலியுறுத்த முயலும் இருத்தலியல் பற்றிய சிந்தனையினால், வாழ்வின் ஸ்திரமற்ர தன்மை என்ற அடிப்படையில் இந்த கருத்தும் நாடக வடிவமும் முள்ளிவாய்க்காலின் பின்பு எங்கள் மக்களுக்கு மிகவும் நெருங்கியாகியதென்றும், எதையும் தாங்கிக்கொண்டு தொடர்ந்து போகும் நினைப்பு அவர்களுக்கு வந்த சோகத்தை சொல்லியபோது, அவையினர் அந்த நினைவுகளை பெற்றுக்கொண்டவர்களாக காணப்பட்டர்கள்.

இந்த நூலை வெளியிட்டு வைத்து உரையாற்றும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டதை எனது கலை வாழ்க்கையின் முக்கியமான கெளரவமாக கருதுகிறேன்.அதே நேரத்தில் ஒரு நாடக அறிவு சார்ந்த அவைக்கு என் கருத்துக்களை முவைக்கும் சந்தர்ப்பம் இதுவரையில் என்னைத்தேடி வந்ததாக நினைவில்லை என்பதையும் கூற விரும்புகிறேன்…

எனது உரையில் விக்னேஸ்வரனுக்கும் எனக்கும் வானொலி, தொலைக்காட்சி காலங்களில் ஏற்பட்ட நெருக்கமான நட்பை, புரிந்துணர்வை தொட்டுக்காட்டி, அவரது தளராத தேடல்களை, மேற்கத்திய இலக்கியங்களோடு அவருக்கு பரிச்சியம் ஏற்பட காலம்சென்ற ஜோர்ஜ் சந்திரசேகரன் எவ்வாறு தூண்டுகோலாக அமைந்தார் என்பதையும் கூறினேன்..

தொடர்ந்து இயூஜின் அயனஸ்கோ உடனான அறிமுகம் எனக்கு எவ்வாறு ஏற்பட்டது என்பதை விளக்குமுகமாக அவரது மூண்று நாடகங்களை குறிப்பிட்டேன்..

இலங்கையில் கொழும்பில் எல்பின்ஸ்டன் அரங்கிலே 1989ல் நடைபெற்ற வானொலி நாடக விழாவில் இடம்பெற்ற ஜோர்ஜ் சந்திரசேகரன் மொழிபெயர்த்து இயக்கிய அயனள்கோவின் “Frenzy, doe Two or More “ {தமிழில் :நத்தையும் ஆமையும் என்ற பெயரில்) என்ற அபத்த நாடகத்தில் நானும், ஜீவனி ஞானரத்தினமும் (இரண்டே நடிகர்கள்0 45 நிமிடங்கள் நடித்ததையும்,.

பின்னர் கனடாவில் மனவெளியின் அரங்காடல் நிகழ்வில், விக்னேஸ்வரன் மொழிபெயர்த்து இயக்கிய .நாற்காலிகள் நாடகத்தை பார்த்ததையும், அந்த நாடகத்தில் நடித்த கலைஞர்களான சுமதி ரூபன், சபேசன், குரும்பசிட்டி இராசரத்தினம் ஆகியோரின் சிறாப்பான நடிப்பு திறனையும் நினைவு படுத்திக்கொண்டேன்..

மூன்றாவதாக பின்னொரு அரங்காடல் நிகழ்வில் புராந்தகனின் இயக்கத்தில் மேடையேறிய “அரி ஓம் நம’ என்ற நாடகம் அயனஸ்கோவின் “Lessons” நாடகத்தை தழுவி டெல்கியில் வாழும் “வடக்கு வாசல்” ஆசிரியரும், எனது நண்பருமான பென்னேஸ்வரனால் எழுதப்பட்ட “பாடங்கள்{” என்ற நாடகந்தான் என்றும், அந்த நாடகத்தை பார்த்து ரசிக்க கிடைத்ததையும், இராசரத்தினம் அவர்களின் நடிப்பு சிறப்பையும் குறிப்பிட தவறவில்லை. .

தொடந்து, நாற்காலிகள் நாடக நூலைப்பற்றிப் பேசுகையில் அதை ஒருநாள் பொழுதில் முழுமையாக வாசிக்க முடிந்ததையும், வாசித்து முடிந்ததின் பின்னர் மனதில் எழுந்த சோகம்> நாடகத்தின் இறுதியில் மேடையில் வெறுமனே இருக்கும் கதிரைகளும், கலைந்துபோன அலங்காரத்தின் எச்சங்களும் எழுப்பிய வெறுமை என்பனவற்றை சொல்லி> அயனஸ்கோ இந்த நாடகத்தை அபத்த நாடகம் என்றில்லாமல் “Tragic Farce” என்றே குறிப்பிட்டிருக்கிறார் என்று சொன்னேன்..

பிரெஞ்சிய காலனி ஆட்சியில் அல்ஜீரியாவில் பிறந்த அல்பெயர் காமு (Albert Kamus என்ற தத்துவ சிந்தனையாளர், நோபெல் இலக்கியப் பரிசை பெற்றவர் எழுதிய The Myth of Sisyphus” என்ற உரைநூலில் குறிப்பிட ஒருகிரேக்க ஐதீகக்கதையில் வரும் ஒரு பாத்திரம் கடவுள்களின் சாபத்தின் விளைவாக ஒரு பெரிய பாறங்கல்லை மலை உச்சிக்கு உருட்டிக்கொண்டு போவதும் பிறகு அதை மலையடிவாரத்திற்கு உருண்டு வர விடுவதும், மீண்டும் உச்சிக்கு கொண்டு போவதும், மீண்டும் அடிவாரத்துக்கு விழ விடுவதுமாக தொடர்ந்து அதையே செய்து கொண்டிருக்கிறது. இருத்தலியலின் அபத்த தத்துவத்தை இந்த கதை மூலமாக விளக்குகிறார் காமூ என்பதை சொல்லி, பெக்கெற்றின் “Waiting for Godot” நாடகத்தை பார்த்த காத்திருப்பின் அருமையை உணர்ந்த சிறைக்கைதிகள் கண்ணீர் விட்டதையும், அதேபோல முதுமை தரும் தனிமை, வெறுமை பற்றி உணரத்தொடங்கியுள்ள என்னை நாற்காலிகள் நாடகம் பாதித்ததையும் சொல்லி முடித்தேன்..

Veteran Tamil Writer Late K.S.Balachandran

வெளியீட்டு நிகழ்வில் நாற்காலிகள் மேடை நாடகத்தில் திறம்பட நடித்த சுமதி ரூபன், சபேசன், குரும்பசிட்டி இராசரத்தினம் ஆகிய கலைஞர்களுக்கு நூலின் சிறப்பு பிரதிகளை வழ்ங்கினேன்..

ஏற்புரை வழ்ங்கிய நூலாசிரியர் பி.விக்னேஸ்வரன், மிகப்பெரிய அழிவுகள், யுத்தங்கள் என்பனவற்றின் தொடர்ச்சியாக நாடகம், இலக்கியம், ஓவியம் போன்றவற்றில் சிந்தனை மாற்றங்கள் ஏற்படச்செய்தன என்று கூறினார். ..

வியட்னாம் போரின் பின்னதாக, எப்படி இளஞர்களின் வாழ்வியலில் மாற்றங்களாக – Hippies, Flower people, Peace Marches என்பன முக்கியத்துவம் பெற்றன என்றும், நாற்காலிகள் நாடகத்தை வாசித்த போது தன்னை அது எவ்வாறு பாதித்ததென்றும், அதனாலேயே அதை மொழிபெயர்க்க முற்பட்டதாகவும், அதை மேடையேற்றவும், இப்போது நூலாக வெளியிடவும் மனவெளி கலையாற்றுக்குழுவினர் அளித்த ஆதரவுக்கு நன்றியும் கூறினார்…

மொத்தத்தில் அறிவார்ந்த ஒரு அவைக்கு, ஏற்றதாக காத்திரமாக நடந்த நல்லதொரு வெளியீட்டு விழா.

மனவெளியினருக்கும், நூலாசிரியர் விக்னேஸ்வரனுக்கும் என் பாராட்டுக்கள்.

=

நன்றி: கே.எஸ்.பாலச்சந்திரன்