10 Oct

ஃபஹீமாஜஹானின் “அபராதி”

 

படைப்பொன்றை பதிந்து செல்லும் பொது அது வெவ்வேறு அனுபவங்களை படைப்பாளிக்கும் வாசிப்பவனுக்கும் விட்டுச் செல்கிறது. படைப்பாளி நின்று பேசும் தளம் யாதாகவிருப்பினும் எந்த சூழ்நிலையில், எதன் பொருட்டு நிகழ்த்தப்படிருப்பினும் அந்தப்படைப்பை உள்வாங்கிக் கொள்வதன் மூலம் வாசிப்பவரின் பிரவேசம் எழுத்துக்குள் நிகழ்கிறது. ஒரு படைப்பின் பின் படைப்பாளி மரணித்துவிடுகிறார் என்று குறிப்பிட்டார் ஒருவர். அவ்வாறே, ஃபஹீமாஜஹான் அவர்களின் கவிதைத் தொகுப்பான அபராதியை வாசிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வாசிப்பனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் பொருட்டு இந்தப் பதிவு.

“ஆருயிரே வருக” என்ற தலைப்பிட்ட கவிதையுடன் திறக்கும் அபராதியின் பக்கங்களை முப்பத்தொரு கவிதைகள் நிரப்பியிருக்கின்றன. ஒவ்வொரு கவிதையும் வாசகருக்கு வெவ்வேறு அனுபவங்களைத் தந்து நகர்கின்றன.
“நிழல் மரங்களற்றுச்
சூரியன் தவிதவித்திடும் நெடுஞ்சாலையோரம்
வெய்யிலை உதறி எறிந்தவாறு
நடக்கிறாள் மூதாட்டி”
என்பதாகத் “துயர்” என்னும் கவிதையில் எழுதும் கவிஞர் கொதிமண்ணில் நடக்கும் அவளின் முன்
“வெயில்
மிகப் பெருந் தண்டனையை
வழி நீளப் பரவ விட்டுள்ளது” என்கிறார்.
ஆதி முதல் தொடரும் பயணத்தில் ஒளிந்திருக்கும், ஏலவே அனுமானிக்கக் கூடிய முடிவு தெருவின் வளைவுக்குள் மறைந்திருக்கிறது. கூடவே வரும் ஆனால் நீள அகலம் மாறி மாறித் தோன்றும் நிழல் போல அவளுடனும், அவளுள் உறைந்தும் பயணிக்கிறது துயர்.
“என்றோ விதியாகித் தொடரும்
நியதிகளில் நசுங்குண்டவாறு
இரவு நெடு நேரம் வரை
துயிலை விரட்டி விரட்டிக் காத்திருப்பாள்”
என்றவாறு “அம்மா”வை உருவகிக்கும் கவிஞர், எல்லா வீடுகளிலும் விறாந்தையில் தலைக்குக் கை வைத்துப் படுத்தபடி காவலிருக்கும் தாய்மார்களை நினைவுகளில் காட்சிப்படுத்தி மௌனிக்கிறார். ஊரில் விறாந்தைகளில் காவலிருக்கும் தாய்மார்களின் பிரதிநிதிகளை இங்கே, புலம்பெயர் தேசங்களில் குளிர் ஊறும் அறைகளுக்குள்ளே ஆற்றாமையில் புலுங்கியழும் மனதுகளுக்கு சொந்தக்காரர்களாய் காணக் கிடைக்கிறது. தாய்மார்கள் மீது அமைதியாகக் கட்டவிழ்க்கப்படும் வன்முறையை யாரும் ஆத்மார்த்தமாக உணர்ந்து கொண்டதாகத்தான் தெரியவில்லை.
“கருங்கல் சிலையொன்று
அதிகாரம் செய்தபடி அலைகின்ற வீட்டில்
மோதி மோதியே செத்துவிட்டன
அவள் வளர்த்த எல்லா மான் குட்டிகளும்..”
என்று முடியும் அந்தப் பதிவில் இவ்வாறாகத் தங்கள் மனதுக்குள் பிறப்புவித்து உயிர் கொடுத்து வளர்த்தெடுத்த உணர்வுகளைக் காவு கொடுத்து நடைப்பிணமாய் வாழும் தாய்மார்கள் எனப்படும் பெண்களை நினைத்து எம்மாலும் மௌனம்தான் கொள்ள முடிகிறது.
“முறைப்பாடுகளுக்கு அஞ்சிய
எல்லாக் காவலரண்களும்
அவளை வெளியே துரத்துகின்றன”
என்று “எல்லைக் கோட்டில் தடுக்கப்பட்டவள்” கவிதையில்
“இன்று
கின்னரர் தம் இசையிழந்த
நிலமெங்கும்
அவளது ஒப்பாரி அலைகிறது
அரசரைத் துதி பாடிச் செல்வோரின்
கால்களின் கீழே
பேரவலத்தின் ஓசை மாண்டழிகிறது” என்கிறார்.
ஆமாம்; பேரவலத்தின் ஓசை, தாய்மார்களின், மனைவிமார்களின், குழந்தைகளின், எல்லோரினதும் குரலுந்தான் மாண்டழிந்தது. மாண்டழிகிறது. தங்கள் புத்திரர்களை வெறிகொண்டு தாழப்பறக்கும் பருந்தொன்றுக்குப் பறிகொடுத்துவிட்டு வீதிவீதியாய், தெருத்தெருவாய் மெல்லிய தீற்றாய்ப் பதிந்த அவர்களது காலடித் தடங்கள் தேடி அலையும் தாய்மார்களையும், உறவுகளையும் நினைத்து அதிர்ந்து அடங்குகிறது மனது.
“மழை” என்ற கவிதையில்
“இறுகி மூடப்பட்ட
வீட்டினும் வர முடியாது
நனைந்து கொடிருக்கிறது
மழை”
என்னும் கவிஞர்
“அது புகார் கொண்டு
தன்னைப் போர்த்தியவாறு
தென்னந் தோப்பினுள்
வழி தவறியலைகிறது” என்று தொடர்கிறார்.
யன்னலின் வெளியே தூறிக் கொண்டிருக்கும் மழை பெலத்து மனதுக்குள் துமிக்கிறது ஊர் ஞாபகங்களை அதே கருஞ்சாம்பல் நிறத்துடன் உடல் சுற்றிப் படரும் புகாருடன்;
“இன்னொரு வெப்பமழை பெய்து கொண்டிருந்த
அவள் முகத்தில் வீழ்ந்த கணத்தில்
தனது ஆவேசமேல்லாம் ஒடுங்கிப் போய்விட
பெய்வதை நிறுத்தி
பெருமூச்செறிந்து போயிற்று
அந்த மழை”
என்றவாறு முடியும் அந்தக் கவிதை தனித்திருக்கும் பெண்ணின் பிரிவின் வலியை, தனிமையின் கனத்தை, வஞ்சிக்கப்பட்ட கோபத்தை உவமித்து அகல்கிறது. மழை மட்டுமா பெருமூச்செறிந்தது?
“நொந்த உடலுக்கான நஞ்சு” என்ற கவிதையில் பால்ய பருவத்தைப் பீடித்து நிற்கும் நோயையும், நோயிலிருந்து மீட்கும் பொருட்டு அன்னைமாரால் நிகழ்த்தப்படும் சாகசங்களையும் பகிரும் கவிஞர் நிகழ்காலத்தைக் குறித்து இப்படி சொல்கிறார்.
“துடைத்தழித்திட முடியாமல்
நோயின் வழியைத் தாங்கி நிற்கும் முகத்தை
விசாரிக்க வருவோரிடமிருந்து
மறைப்பது பற்றிச் சிந்திக்கிறேன்”
கனவுகளாலும், எதிர்பார்ப்புக்களாலும் நிரப்பப்பட்ட பால்ய பருவத்தின் நாட்கள் அற்ப ஆயுள் கொண்டவை. அந்த நாட்களில் எம்முடன் பயணிக்கும் உறவுகளை வெறுத்துவிட அல்லது கோபப்பட ஒரு சிறு நூழிலையளவுக்கான காரணம் போதுமாக இருக்கிறது. அவர்களை அன்பு செய்யவும் அதுவுமே போதும். விரைவாக சுழலும் காலத்தின் மாற்றங்கள் ஏற்படுத்திப் போகும் பாதிப்புக்களில் வாழ்க்கையை, உறவுகளைப் புரிந்து கொள்ளவும் அனுபவங்கள் தேவைப்படுகின்றன. இல்லாவிடின் உணர்ந்து கொள்ளும் பக்குவத்தை உலக நடப்புக்கள், சம்பவங்களைப் பார்த்தாவது அறிந்துகொள்ளுதல் இன்றியமையாததாகிறது. இந்தப் பொழுதில் பிறரிடமிருந்து எமது இயலாமையை, வலியை மறைத்துவைக்கும் மனதின் விருப்பத்தை செயலாற்றுவதற்கு உடல் எவ்வாறு ஒத்துழைக்கும் என்ற கேள்வி தொக்கி நிற்கவே
“மின் கம்பியில் குந்தியவாறு
எனதறையையே பார்த்திருந்த வெண் பறவைக்கு
மரணத்தின் துர்க்குறிகள் கிட்டவில்லை”
என்று சொல்லிக் கொள்கிறார் கவிஞர்.
தற்கொலை குறித்தும், மரணம் குறித்தும் பாடாத கவிஞர்கள் வெகு குறைவு எனலாம். மரணத்தைப் பாடுதலும், அதிலும் சுய மரணத்தைப் பாடு பொருளாகக் கொள்வதற்கான மனம் எந்தப் பொழுதில் வாய்க்கும் என்ற கேள்வி எப்போதாவது மனதில் அலையாய் அடித்து மறைவதுதான். தற்கொலை செய்துகொண்ட (பெண்) கவிஞர்கள் எழுதிவைத்துப் போன பாடல்களின் தாக்கமும், கனத்த மனதும் ஒன்றாய் வாய்க்கையில் பீடிக்கும் அந்த ஒரு பொழுதின் அடர்த்தியை வார்த்தைகளில் கொண்டு வருதல் எத்துனை சாத்தியமாயிருக்கும் என்பதுதான் சூட்சுமமானது.
ஃபஹீமாவின் “தற்கொலை” என்ற கவிதையில்
“ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கும்
விழுமியங்களினூடாக
பரவிச் சென்றிருக்கும் வேரினை
விடுவிக்க முடியாதவளாக
அண்ட சராசரங்களின் எதிரே வீழ்ந்து கிடக்கிறாள்”
“நீ கொடுத்த சுமைகளையும்
அந்த உடலையும்
உன்னிடமே எறிந்துவிட்டாள்
இனி எக்காலத்திலும்
உன்னெதிரே வரப்போவதில்லை
நீ துன்புறுத்திய
அவள் ஆத்மா”
தொடரும் ஆதிப் பெருந்துயரின் வீச்சுக்குள் மூழ்கிப் போயின தொன்மைமிகு முகங்கள் எனினும் புதியனவற்றையும் தன் சுழல் நாக்குக்கு தின்னக் கொடுத்து நகர்கிறது அது. வழங்கப்பட்ட உடலைத் துறந்து புது உடல் கொண்டு விலகும் பெண்மையின் பிறப்பு எத்துணை சுலபமானதாக அமைந்துவிடும்? மரணித்த தன் உணர்வுகளைக் கனவுகளைக் கொண்டு கட்டிய வாழ்க்கையின் இன்னொரு பாதையை நோக்கிய புதிய அடிகளின் அமைவு அந்த அரூபத்தின் மரணத்தின் பின்னானதாக எந்தவகையில் அவளால் கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும், தெரியவில்லை.
“நம்மெதிரே வீழ்ந்து கிடக்கிறது
காலத்தின் பிறிதொரு முகம்”
என்று “கடைசிச் சொல்” கவிதையில் பிரிவைக் காட்சிப்படுத்தும் கவிஞர் “கிரீடங்களை அவமதித்தவள்” என்ற இன்னொரு கவிதையில்
“ஆதி முதல் போற்றிவரும்
அந்தக் கிரீடங்களின் மீது
அவமதிப்பை விட்டெறிகிறேன்” என்கிறார்.
அபராதியின் கவிதைகளூடே பயணிக்கும் பெண்ணொருத்தியைக் கண்கூடாகக் காணக்கிடைக்கிறது. அவளின் உணர்வுகளை, பிரிவின் கதையை, நினைவுகளை அவை நிகழ்ந்த நொடிகளின் உயிர்ப்பு மாறாமல் தன் கவிதைகளுக்குள் பொதித்து வைத்திருக்கிறார் கவிஞர். அந்தப் பெண்ணுடன் உரையாடும் பொருட்டு ஒவ்வொரு கவிதையையும் நெருங்கின் அவலச்சுவையை, வலியின் நுனியில் துளிர்த்திருக்கும் புது இரத்தத்துளியை அதன் சூட்டுடன், துவர்ப்புச் சுவை மன நாக்கின் மெல்லிய இடுக்குகளில் பரவ உணரமுடிகிறது.
“தம்பிக்கு” என்ற தலைப்பிட்ட கவிதையில்
“அபயம் தேடித் தவித்த
உன் இறுதிச் சொற்கள்
எனது அறையெங்கும்
எதிரொலித்தபடியலைகின்ற இந்நாளில்
நம்பிக்கையும் ஆறுதலும் தரக்கூடிய
எல்லாச் சொற்களையும் நானிழந்து நிற்கிறேன்” என்கிறார்.
தங்கள் உறவுகளைப் புலம்பெயர அனுப்பிவிட்டு ஊர் எல்லையில் தொடர்பு வெளிக்கு அப்பால் நிற்கும் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான உறவுகளைக் காணக்கிடைக்கிறது இந்தக் கவிதையில். மொழி மௌனித்து நிற்கும் அந்தப் பொழுதில் உறைந்து நிற்கும் அன்பின் வெளிப்பாடு யாதாகவிருக்கும், கண்ணீராக, இந்நிலைக்குக் காரணமானவருக்கான சாபமாக, சுயபச்சாபத்தின்/கையாலாகாததனத்தின் பொருட்டுக் கிளம்பும் கதறலாக, அடுத்த கவிதையை நோக்கி நகருவதற்கு சில நொடிகள் தேவைப்படுகிறது.
“அபராதி” என்ற தொகுப்பின் தலைப்பைத் தாங்கி வரும் கவிதை இவ்வாறு முடிகிறது.
“கொடூரச் சாவுகளைக்
கண்டு கண்டு அதிர்ந்த மண்
பலி கொல்லும் கண்களுடன்
உன்னையே பாத்திருக்கிறது
உனது அரசியல்
சகித்திட முடியாத் துர் வாடையுடன்
வீதிக்கு வந்துள்ளது
சுபீட்சம் மிகுந்த தேசத்தின் ஆன்மா
கைவிடப்பட்ட களர் நிலமொன்றில்
புதையுண்டு அழுகிறது”
“அபராதி” என்ற கவிதை பேசும் நுண்ணரசியல் வலிமையானதாக இருக்கிறது. அதிகாரத்தைச் சாடும் கவிஞர் நீ செய்தவற்றுக்கான அபராதத்தை நீ கட்டும் வேளை வரும், அதை உன்னைப் பழிவாங்கக் காத்திருக்கும் கண்களின் தீவிரம் உனக்கு உணர்த்தும் என்பதாக உருவகிக்கிறார். “அபராதி” என்னும் தலைப்பு தொகுப்புக்கு எங்கணம் பொருந்துகிறது எனக் கேட்டால், ஏலவே குறிப்பிட்டபடி கவிகளுக்குள் ஊடாடித் திரியும் பெண்ணால் எழுப்பப்படும் கேள்விகள் நினைவின் பதிவுகள் வஞ்சிக்கப்பட்டவளுக்கான அல்லது காயப்படுத்தப்பட்டவளுக்கான குரலில் ஒலிக்கின்றன. ஆக கவிதைகளின் தொனியும் செலுத்தப்படவேண்டிய அபராதத்தின் மையத்தை நோக்கி எறியப்படும் கயிறின் வழியே தம் சுவடுகளைப் பதியவிட்டுக் காத்திருக்கின்றன என்றும் கொள்ளலாம்.
“அவளை வழியனுப்பிய இடம்,” “பேய்களால் தின்னப்பட்டவள்,” “அவள் வளர்க்கும் செடிகள்,” “நஞ்சூட்டப்பட்ட செடி,” “உயிர்வேலி” அடங்கலாக முப்பதொரு கவிதைகளின் தொகுப்பான ஃபஹீமாஜஹானின் தொகுப்பான “அபராதி” வாசிப்பின் முடிவில் வார்த்தைகளின் கனதியை மனதில் பதியவிட்டு தான் கொண்ட கவிதைகளின் பேரால் படைப்பிற்குரிய வெற்றியைப் பெறுகிறது.
————————————-
குறிப்பு – கனடாவில் 09-10-2011 அன்று இடம்பெற்ற வடலியின் நான்கு நூற்கள் அறிமுகவிழாவில் வாசிக்கப்பட்டது சில திருத்தங்களுடன் மீள் வாசிப்புக்குட்படுத்தப்பட்டு இங்கே பதியப்படுகிறது.
———————————
நன்றி : மயூ மனோ
25 Nov

நீலம் பாவிய நிலம்

நாயகர்களைப்போல்
அவர்கள் சண்டையிட்டபோது,
அவர்களின் போற்றத்தக்க
இதயங்கள் அமைதியாகவும்
வாள்கள் வன்முறை
கொண்டும் இயங்கின.
சாகவும் கொல்லவும்
அவர்கள் எப்போதோ
தயாராகி விட்டிருந்தார்கள்.
– ஜோர்ஜ் லூயி போர்ஹே
ஃபஹீமா ஜஹான் இலங்கையைச் சேர்ந்த கவிஞர். 90-களின் மையப்பகுதியில் எழுதத் தொடங்கினார். ஒரு கடல் நீருற்றி (2007) அபராதி (2009) என்று இரு கவிதைத் தொகுப்புகளையும் ஆதித்துயர் (2010) என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பையும் வெளியிட்டிருக் கிறார். ஃபஹீமா போயம்ஸ் என்ற வலைத் தளத்திலும் பதிவுகளைச் செய்துவருகிறார்.
அழகிய படிமங்களைக் கொண்டவை. ஆரவாரமற்ற இயற்கையோடு ஒன்றிப் போகக் கூடிய மானுடத்தின் குரல். ஆணாதிக்கத்தைப் பொதுத்தன்மையோடு எதிர்ப்பவை. போர் சூழலில் கூடிழந்து அலையும் பறவைக் கூட்டங் களாக மனிதர்கள் அலையுறுவதையும் நிலம் சார்ந்த பிடிப்பை, ஆர்வத்தை, அக்கறையை வெளிப் படுத்துவனவாகவும் இருக்கின்றன. நிலத்தை கூர்மையாக அவதானிப்பதையும் அதன் முகிழ்ந் தலை இரசனையோடு விவரிப்பதையும் கொண்டிருக்கின்றன.
மீன்கள் நிரம்பிய சின்னச்சட்டையை நனைத்துக் கூத்தாடும் கவிஞர் நதி நனைத்து சுமந்து வந்த பல்லாயிரம் வேர்களின் மொழிகளின் சூட்சுமத்தில் கரைந்து போகிறார்.
ஃபஹீமாவின் கவிதைகள் எளிமை யானவை தனித்துவம் மிக்கவை. இவர் இன அரசியல் பிரச்சனைக்குரிய நாட்டில் வாழ்பவர். குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தைச் சார்ந்தவர். இஸ்லாத்தைப் பின்பற்றுகிற பெண்கள் எழுத வருவது குறைவு. அவர்களை வரவேற்க எழுது வதற்கு உந்துதலை அளிக்க வேண்டி யிருக்கிறது.
ஃபஹீமாவின் கவிதைகளில் பெண்ணுக் கான குரல் தீவிரமாக எழுகிறது. பழைய நடைமுறைகளைக் கேள்விகேட்கிறது. அழுத்தித் திணிக்கும் பழைய மரபுகளுக்கு எதிராக நிற்கிறது. நிலவுடமையும் மதமும் பெண்ணை ஒடுக்குகிற அம்சங்களின்மீது தொடர்ந்து விசாரணைகளை நிகழ்த்த வேண்டியிருக்கிறது. பெண்ணாக பலங் கொண்டமட்டும் அவற்றின் அடக்கு முறையை எதிர்க்க வேண்டிய துணிவைப் பெற வேண்டி யிருக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்குமான மாறு பட்ட நியதிகளைக் களையெடுக்க வேண்டி யிருக்கிறது. இந்நிலையில் ஃபஹிமாவின் கவிதை கள் பெண்ணின் குரலாக வெளிப்படுகின்றன. பெண்ணின் கருத்தை நெரித் திடும் ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கிற இவர் பெண்ணைப் பெண்ணாக வாழவிடச் சொல்கிறார்.
 எக்காலத்திலும் இனி
உங்கள் பீடங்களில்
முழந்தாளிட வரமாட்டேன்
நீங்கள் ஆராதிக்கும்
நாமங்களிலும் சேரமாட்டேன்
ஆதிமுதல் போற்றிவரும்
அந்தக் கிரீடங்களின்மீது
அவமதிப்பை விட்டெறிகிறேன்
என கோபத்தை வெளிக்காட்டத் தயங்காத குரல் ஃபஹிமாவுடையது.
காதலின் துவக்கத்தில் இருபாலருக்குமான வேறுபாடுகள் கருத்து வேறுபாடுகளை அதிகம் நிகழ்த்துவதில்லை. ஒருவர் மற்றொருவரின்மீது எடுத்துக் கொள்ளும் உரிமையின் ஜ்வாலையைத் தாண்டி பால்சார்ந்து இயற்றப்படும் நியதிகள் முன்வைக்கப் படுகின்றது.
உன்மனத்திரையினூடு சட்டமிட்டுப்பார்க்கும்
எல்லைகள் உள்ளவரை
எனது குரலின் நியாயத்தை நீயுணர முடியாது
என காதல் சரிசமமாக நிகழ்வதற்குக்கூட பால்பாகுபாடு தடையாக இருப்பதை அதன் தீவிரத்தைப் பதிவுசெய்கிறார். அன்பிற்குக்கூட தடைகளும் முரண்களும் செயலூக்கமற்ற நிலைக்குக் கொண்டு செல்வதைச் சுட்டுகிறார்.
காதலின் பெயரால் அடிபணிவதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். காதலின் பெயரால் குற்றச்சாட்டுகளுக்கு பயந்து தலையசைப்பவளாக உரிமையற்றவளாக இருப்பதை மறுக்கிறார். பெண்ணாக இருப்பதனால் அடிபணிய முடியாது சக உயிராக சமதையாக காதலின் இருபாலினமும் இருக்கவேண்டும் என்பதை விழைகிறார்.
வாழ்வின் விதிமுறைகள்
எனதுலகையும் உனதுலகையும்
வேறுபிரித்த வேளையில்
விடைபெற்றோம்
ஒன்றித்துப் பறந்த வானத்தையிழந்தோம்
இறுதியாக அன்றுதான்
அழகாகச் சிரித்தோம்
என பால்வேறுபாடின்றி ஒன்றிப் பறந்த நாட்களின் நினைவெச்சத்தை ஆதங்கத்தோடு முன்னிறுத்துகிறார் வாழ்வின் உயிர்த்தலைமீறி வகுத்துக் கொண்ட சட்டகங்கள் அழுத்தங்களை ஏற்படுத்தத் தக்கனவாக மட்டுமல்ல. மகிழ்ச்சியைக் களவாண்ட தருணமாகவும் மாறிவிட்டது. ஓரிடத்தில் கலாசாரம் பண்பாடு எனும் அரிகண்டங் களை அவளது கழுத்தில் கௌரவமாய்ச் சூடினாய்என உனதடி பணிதலில் அவளுக்கு ஈடேற்றம் கிடைக்குமென்கிறாயே என்கிறார். வானதி கவிதைகள் எனும் தொகுப்பில் கவிஞர் வானதி தாலியை கேள்விக்குட்படுத்தி இனப்போர் நடக்கும் வேளையில் சயனைடு குப்பிகளே கழுத்தை அலங்கரிக்கிறது என மரபார்ந்த தாலியை விமர்சிப்பார். அந்த வரிகள் இயல்பாகவே நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.
அவளைப் பலவீனப்படுத்த
எல்லா வியூகங்களையும் வகுத்தபின்பும்
அவளை உள்நிறுத்தி எதற்காக
இன்னுமின்னும் வேலிகளை எழுப்புகிறாய்?
போரிலும் பகையிலும் முதல்பொருளாய்அவளையே சூறையாடினாய்
அவளுக்கே துயரிழைத்தாய்
உன்னால் அனாதையாக்கப்பட்ட
குழந்தைகளையெல்லாம் அவளிடமே
ஒப்படைத்தாய்
தலைவனாகவும் தேவனாகவும் நீ
நிமிர்ந்து நடந்தாய்
போர்ச் சூழலிலும் பெண்ணினமே துயரத் தைச் சுமந்து அலைவதாக இருக்கிறது. பாரங்களை முற்றிலும் சுமந்து கொண்டு இனத்தை வளர்க்க பிரயத்தனப்படுகிறார். ஆனால் இவையெல்லா வற்றையும் சுமத்திவிட்டு ஆணாதிக்கம் – அரசாங்கம் எனும் படிநிலைகளின்படி ஆண் மனித இனத்திற்கு தலைமையேற்கிறான். சுமத்துபவனுக்கும் சுமைதாங்கிக்குமான வேறுபாடு இரு இனங்களுக்கிடையே நிறைந்திருப்பதைக் காட்டுகிறார்.
ஃபஹிமா பேசும் முக்கியமான இடம் நிலம். காலங்காலமாக மனிதனின் வாழ்க்கையில் முக்கிய வினையாற்றுவது நிலம். ஐம்பூதங்களுள் ஒன்றான நிலம் இருப்பின் ஆதாரம். ஆதிமனிதன் தொடங்கி இக்கால நவீனமனிதன் வரை அனைவருடைய வாழ்விலும் இன்றியமையாத கூறு நிலம். நிலத்தில் மனிதன் நிலை பெறுதலி லேயே நாகரிகம் வளர்ச்சி பெற்றது. நிலம் மிகப்பெரும் சக்தியாக உருவெடுக் கிறது. வாழ் வதற்கு நிலமற்றவனுக்கும் பெரு நிலத்தைக் கொண்டிருப்போருக்குமான வேறுபாட்டைக் கூர்ந்து கவனித்தால் விளங்கிக் கொள்ளலாம். ஆதிக்கம் அரசு உருவாக்கிய சட்டகங்கள் அனைத்தும் நிலத்தை கையகப்படுத்தவும் பாது காக்கவும் பயன்பெறவுமாக உண்டாக்கப் பட்ட வையே! நிலமில்லாதவனை துச்சமென மதிக்கும் போக்கு எல்லாக் காலத்திலும் உள்ளது போலவே நிலத்திற்காகப் போராடுவதும் தொடர்ந்து வருகிறது. ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழ்வதன் பொருட்டாக அந்நிலத்தில் வாழும் இன மக்கள் வெவ்வேறு காலங்களில் போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றனர் என்பதைக் காண் கிறோம்.
நிலம் வாழும் மனிதனுக்கு நம்பிக்கை யளிப்பது. மனிதனின் பண்பாட்டு வேர் அவன் வாழுகின்ற நிலத்தை ஒட்டியே அமைகிறது.
பூர்விக குடிகள் விட்டுச்சென்ற தடயங்களைப்
பாறை இடுக்குகளில்
மூலிகைச் செடிகளிடையே பத்திரப்படுத்தியிருப்பாய்
பூர்விகமாக வாழும் இடத்தில் அவர்களுக் கான வாழ்வியல் முறைகள் இருக்கும். அவர்களுடைய உடை, உணவு, மருத்துவம் சார்ந்த அடிப்படை விடயங்களிலும் பிரதிபலிக்கும். ஒவ்வொரு இனமும் தன் குழந்தைகள் மூலமாக இந்த அடிப்படைகளையும் கடத்துகின்றன ; நிலைபெறுகின்றன ; பின்பற்றுகின்றன.
ஏகாதிபத்தியம் முழுப்பண்பாட்டையும் ஒரு சேரத் தாக்குகிறது. சமூக அமைப்புகள் பொருளாதார உறவுகள் பண்பாட்டு மரபுகள் முதலானவற்றையும் ஏகாதிபத்திய அரசியல் பாதிக்கிறது. இதற்கு எதிராக பண்பாட்டை நிலைநிறுத்த வேண்டிய தேவையும் எழுகிறது. அன்னிய கலாச்சாரம் திணிக்கப்படுவதை எதிர்ப்பது போலவே சொந்த கலாச்சாரம் சிதைக்கப்படுவதையும் தடுக்க வேண்டியிருக்கிறது.
கண்ணீர் வற்றாத இத்தீவையும்
குறுகுறுக்கும் மனதுடன்
கடக்கிறது வெயில்
ஈரத்தை உறிஞ்சிக் கொண்டு
இரத்தக் கறைகளை அப்படியே விட்டுவிட்டு
இனமக்களின்மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறை அவர்களது அடையாளச் சிதைவாக மாறுகிறது. அடையாளத்தை வேரறுத்தல் என்பது வரலாற்றின் பக்கங்களில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியப் பழங்குடிகளை அழித்தொழிக்க பங்காற்றிய ஆஸ்திரேலிய அரசு. சொந்த மண்ணில் வாழும் அதிக மக்கள் தொகை கொண்டவர்களை அழிக்க இறங்கிய இலங்கை அரசு மற்றும் உலகம் முழுவதும் இன அழித் தொழிப்புப் போர்கள் நடைபெறுவதைக் கண் கூடாகக் காண்கிறோம்.
பெரு முதலாளிகளின் கூட்டிணைவில் நாட்டிற்கு வந்துசேரவேண்டிய இலாபத்தைக்கூட தனியார் பெருமுதலாளிகளிடம் தாரைவார்க்க பழங்குடிகளை அழித்தொழிப்பு செய்வது நடுநிலை நாடென உலக அரசியலில் பெயர்பெற்ற நாட்டில் அப்போது இருந்த அதே கட்சி நடத்தும் ஆட்சியின்போது நிகழ்த்தப்படுகிறது.
இங்கெல்லாம் புரியாதமொழி பேசியவாறு
துப்பாக்கி மனிதர்கள்
ஊடுருவத் தொடங்கியவேளை
விக்கித்துப் போனோம்
எமது கல்லூரி நூலகம் கடற்கரை விளையாட்டுத்திடல் ஆலயமெங்கிலும் அச்சம் விதைக்கப்பட்டு
ஆனந்தம் பிடுங்கப்பட்டதை
விழித் துவாரங்களினூடே
மௌனமாய்ப் பார்த்திருந்தோம்
குறிப்பிட்ட இன மக்களின் அடையாளத்தை அழிக்கும் பொருட்டாக மற்றொரு இன மக்களை அவ்விடங்களில் குடியமர்த்துவதும் இராணுவத்தை யும் காவல் துறையையும் களமிறக்குவதும் இலங்கையில் சர்வ சாதாரணம். போர் அபாயம் இல்லாத பகுதிகளில் முன்பே வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட இம்முறைமை போர்பாதித்த பகுதிகளிலும் தற்போது நிகழ்ந்துவருகிறது. மிகச் சாதாரணமாக பூர்வீகத்தை, மூலத்தை, வேர்களைப் பிடுங்கி எறிய ஏகாதிபத்தியத்தியத்தின் கொடுங் கோல் ஆட்சியின் கோடரிகளால் நிகழ்த்தப்படுகிற அவலம் பார்க்க இயலாதது. சொந்த மண்ணில் சொந்த நாட்டில் தன் தாய்மொழியைக்கூட உரத்துப்பேசிவிட முடியாதது அவலத்தின் உச்சம்.
தோற்றுப்போன அரசியலின் பின்னர்
அமைதியைத் தேடித் தூரதேசம் ஒன்றில்
அடைக்கலம் புகுந்தாய்
மனச்சுமைகள் அனைத்தையும்
மௌனமாக அஞ்ஞாத வாசத்தில் கரைத்தாய்
நானும் நீயுமன்றி
இந்தப் பரம்பரையே தோள்களில் சுமையழுத்திடத்
திசைக் கொவ்வொன்றாய்ச் சிதறுண்டுபோனது
மண்ணையிழந்தவர் தம் படிமங்களையும்
மொழியையும் இழப்பார்களென்று
உனது நிழலில் அமர்ந்து அந்தச் சிறுமியர் படித்த. . .
தட்பவெட்ப நிலை மாறுதலைமுன்னிட்டு பறவைகள் சொந்த நிலத்தைவிட்டு இனப் பெருக்கத்திற்காக வேறொரு நிலத்திற்கு வருகிற இயற்கையை பறவைகள் சரணாலயங்களில் பார்க் கிறோம். பெயர் தெரியாத எந்த தேசத்திலிருந்து வந்தது என்ற ஆய்வை தொடர்ந்து நிகழ்த்தச் செய் கிறது இயற்கை. ஒரு விதை விளைந்த மரத்தை விட்டு தொலைதூரம் சென்றுவிழ எச்சங்கள் உதவுகின்றன.
ஆறு தன்போக்கில் நிலையில்லாமல் ஓடிக் கடந்து கொண்டே போகும் பாதையை வளம் மிக்கதாக மாற்றுகிறது. இயற்கை எல்லை கடத்தலை நிலம் மாறுவதை இனசுழற்சிக்காக பயன்படுத்திக் கொள்கிறது. இயற்கையின் படைப் பான மனிதன் மனிதநேயமின்றி ஆயுதமெடுப் பதன்மூலம் மானுட இனத்தின் பகுதியை இரத்தக் களரி யாக்குகிறான், நரபலியிடுகிறான், சுயதேவை, அதிகாரம், பணபலம் இவற்றின் காரணமாக இதயத்தை அறுத்துவிட்டு இடிஅமீன்கள் தழைத்துக் கொண்டிருக்கின்ற அரசியல் சூழல் நிலவுகிறது. இல்லைஎன மறுக்க முடியாத அளவு சூழலியல் சார்ந்த நிலைப் பாட்டில் உலகின் வல்லரசு நாடுகளும் அதன் ஆதரவு நாடுகளும் தேர்ந்தெடுத்திருக்கும் கொடிய பாதை கண்முன் விரிகிறது.
சிறுதீவுகளின் அழிவை கவனத்தில் கொள்ளாத சுற்றுச்சூழல் மாநாட்டின் உதவாத சடங்குத் தனம் செரிமானத்தை நிறுத்துகிறது. இதைமிக இயல்பாக எடுத்துக்கொள்வதற்கு பிறநாடுகள் பழக்கப் படுத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகள் வன்முறையை மிகச் சாதாரண கண்களோடு கண்டு கடந்து விடுகிறது. அவ்வாறே உலக நாடுகள் மனிதநேயத்தை வெறும் பேச்சளவில் மட்டுமே கடைபிடிக்கவேண்டிய கட்டாயத்தின் எல்லையில் நிறுத்தப்பட்டிருக் கின்றன. மண்ணைவிட்டு சிதறடிக்கப் படுகிற இனத்தின் மொழி தழைக்குமா? அழியுமா? எனும் ஐயம் உள்ளது. காலப்போக்கில் அழிவதற்கான சாத்தியங்களே அதிகம். இவ்வுண்மையை ஃபஹிமாவின் கவிதை வரிகள் சுட்டுகின்றன.
ஃபஹீமா இஸ்லாமிய பெண்ணியலாளராக தன் பெண்சார்ந்த உணர்வை முன்வைக்காமல் பால் வேறுபாட்டுத் தளத்தில் மட்டுமே இயங்கு கிறார். பெண் அடக்கப்படும் பல்வேறு சட்டகங்களை விமர்சிக்கிறார். போர்நிகழும் சூழலில் பெண்ணியம் மலர்வது அரிது. உயிரைத் தற்காத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தமும் ஏற்கப்பட்ட ஆயுதங்களுமே இவர்களை வழி நடத்தும். போரச்சம் இல்லாத சூழலில் வாழ்ந்து வருகிற ஃபஹிமாவின் கவிதைகளில் நிலத்தை பிறர் ஆக்கிரமிக்கும் பொழுது சுயம் அழிக்கப்பட்ட இனத்தினராக இயல்பான நடைமுறைக்கு ஊறுநேர்வதாக சுதந்திரம் கட்டுப்படுத்தப் படுவதான அவலம் பதிவாகிறது. செழித்தநிலம், திரிந்த நிலம், கருணைமிக்க நிலம், வாழ்வா தாரத்தின் துணையாக இருக்கின்ற நிலம் இந்த நிலத்தை வளப்பமாக்கிய பெண்ணின் வாழ்க்கையைப் பேசுகிறது.

– ச. விசயலட்சுமி

நன்றி: கீற்று; 

பெருவெளிப்பெண்