18 Oct

காத்திரமான படைப்பு மரணத்தின் வாசனை

கிளிநொச்சியை சேர்ந்த புலம் பெயர் எழுத்தாளரான தட்சணாமூர்த்தி அகிலனின்(த.அகிலன்) மரணத்தின் வாசனை சிறுகதை நூல் நேற்று(2016.09.16) கிளிநொச்சியில் படைப்பாளர்கள் வாசகர்கள் மத்தியில் உரையாடல் செய்யப்பட்டது.கிளிநொச்சி மத்திய கல்லாரியில் மாலை 3.30 மணிக்கு எழுத்தாளரும் ஆசிரியருமான ஜோயல் பியசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் படைப்பாளர்களான பொன்.காந்தன் சி.ரமேஸ் ப.தயாளன் வேல்.லவன் மு.தமிழ்ச்செல்வன் ஆகியோர் உரையாடினர்.

இதில் கலந்துகொண்ட கவிஞர் பொன்.காந்தன் நூல் மீது கருத்துக்களை வைத்து உரையாற்றுகையில் அகிலன் மிக துணிச்சலாகவும் கிளிநொச்சி மண்ணின் ஆத்மாவை பிரநிதிதுவப்படுத்தியும் இந்த நூலில் படைத்துள்ளார்.ஈழத்து இலக்கியத்திற்கு ஒரு கிளிநொச்சியானின் மிகவும் காத்திரமான படைப்பாக இதை கருதலாம்.நாம் தூக்கி கொண்டாடக்கூடிய படைப்பு.பொக்கிசம்.

அகிலனை சின்னப்பையனாக எனக்குத் தெரியும் அவனின் உணர்வுகளை நான் அறிவேன். கிளிநொச்சி மத்தி கல்லூரியில் கல்வி கற்றிருந்த அகிலனின் எழுத்துக்கான முனைப்பை பாத்திருக்கின்றேன்.

கிளிநொச்சி எழுத்துக்களுக்கு மரணத்தின் வாசனை புதிய வாசனை.நாம் எழுத நினைத்ததை.அல்லது நாம் நினைத்துக்கொண்டிருக்கிற எழுத்தை அகிலன் ஆழமான மொழி நடையில் பதிவு செய்துள்ளான்.அகிலனை ஒருமையில் அழைக்க காரணம்.அவன் நான் பார்க்க வளர்ந்த பையன்.நான் படித்த கிளிநொச்சி மத்திய கல்லூரியில் அவனும் படித்தான்.அவன் சந்தித்த மனிதர்களை நானும் சந்தித்தேன்.

மண்ணின் ஆத்மா மரணத்தை பற்றி அவன் எழுத்துக்களில் பேசுகின்றது. நீண்ட காலத்துக்கு பின் மனதை நெருடுகிற கதை களம். அவல நாடகங்களில் வருவது போல பாறைகளின் கீழ் நசியுண்டு சாகின்ற நாயகர்களை போல அவன் எழுத்துக்களில் மனிதர்கள் அலைகின்றார்கள். ஒரிடத்தில் அமராத வாழ்வின் இழந்து இழந்து போகின்ற ஏக்கம் இழையோடுகின்றது எங்கும். கிளிநொச்சி அது சந்தித்த போர்க்காலங்கள் ஆக்கிரமிப்புக்கள் ஆக்கிரமிப்பின் மீதான போர்கள். போர்களில் வீழ்ந்த மனிதர்கள். அவர்களின் வலி துரத்தும் வாழும் மனிதர்களின் ஏக்கம்.இன்னும் நிரவப்படாது இருக்கும் உள்ளத்தில் காயங்கள். மரணத்தின் வாசனையில் பயணப்படுகின்றது. ஒரு கிளிநொச்சியானாக புறப்படுகின்ற த.அகிலனின் மரணத்தின் வாசைன ஒரு மன்னார்காரனாக ஒரு யாழ்ப்பாணத்தானாக ஒரு மட்டக்களப்பானாக ஒரு முல்லைத்தீவானாக திருக்கோணமலையானாகா அம்பாறையானாக மரணத்தின் வாசனையை முகரச்செய்யத்தூண்டுகிறது எழுத்து.

இந்த நூல் பற்றிய உரையாடலில் ஆழமான கருத்துக்களை ஆய்வுகளை உரையாடியோர் முன்வைத்ததுடன் எழுத்தாளர்கள் கவிஞர் கதிரோவியன், பாலா மாஸ்டர், கருணாகரன், பெரு.கணேசன், விஜயசேகரன், பங்கயற்செல்வன், அன்ரன், அன்பழகன் உள்ளிட்டவர்கள் உரையாடல்கள் பற்றிய தங்கள் உணர்வுகளையும் பகிர்ந்துகொண்டனர்.

நன்றி:  telo.org (18 September, 2016)

07 Oct

மரணவெளியில் உலாவரும் கதைகள்

மரணவெளி.. அழகானது.

எப்போதும் எல்லா உயிரினங்களுக்கும் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கும் மரணவெளி.

மரணவெளி மாறாதது என்பதுடன் மாற்றங்களுக்கு அப்பாற்பட்டதும் கூட.

மரணம் காலத்தை வென்ற காலச்சூத்திரம்.

புத்தனும் ஏசுவும் சித்தர்களும் மரணவெளியில் நட்சத்திரங்களாக இருந்தாலும்

நிகழ்காலத்தின் முன் அவர்கள் கடந்தகாலமாக இருப்பது மட்டுமே மரணம்’

காலத்தை வென்று நிற்கும் காலச்சூத்திரத்தின் முதல் விதி.

பூமியைப் போல உயிரினங்கள் வேறு எந்த கிரஹத்திலாவது இருக்கிறதா என்பதைத் தேடும் அறிவியல் உலகம், அங்கெல்லாம் மரணத்தின் சுவடுகள்

இருக்கிறதா என்பதையே தேடிக் கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் மரணத்தின்

சுவடுகள் இருக்கிறதோ அங்கெல்லாம் வாழ்க்கையின் தடங்களும் இருக்கும்,

‘இருக்கிறது..!

 

மரணத்தைப் பற்றிய அச்சமோ ஆச்சரியமோ கடவுளைக் கற்பித்தது.

கொண்டாட வைத்தது. கடவுளும் மரணத்திலிருந்து தப்ப முடியாது என்பதை

தத்துவமாக்கியது. அந்த தத்துவத்தின் ஊடாக வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும் மனநிலையை மண்ணில் விதைக்கவே பாடுபட்டது.

இப்படியாக எப்போதும் மரணம் அழகானதாகவும் அதிசயமானதாகவும்

சித்தர்களின் சித்துவேலைக்குள் அகப்படாத பரம்பொருளாகவும்

பிரபஞ்ச வெளியாகவும் எப்போதும் நம் கூடவே பயணித்துக் கொண்டிருக்கிறது.

 

மரணத்தைப் பற்றி எழுதாத எழுத்தாளர்கள் இல்லை.

நினைக்காத மனிதர்கள் இல்லை.

வெ.இறையன்பு அவர்கள் எழுதிய நாவல் “சாகாவரம்” முழுக்க முழுக்க மரணத்தைப் பற்றி ஒரு நாவல். மரணத்தை வென்ற சிரஞ்சீவி வெளியைத் தேடும் நசிகேதனின் கதை. வேதாளம் சொன்ன கதைகளின் உத்தியில்

14 வரிப்பாடலில் மரணத்தை வென்ற சிரஞ்சீவி வெளியை அடையும்

குறிப்பு சொல்லப்பட்டிருக்கும். ஒவ்வொரு பாடலாக வாசித்து வழி

கண்டுபிடித்து அந்த சிரஞ்சீவி வெளிக்கு வரும் போது அந்த இடம்

எப்படி இருந்தது என்பதை மிகச் சிறப்பாக விளக்கி இருப்பார்.

இறந்தகாலமோ எதிர்காலமொ இல்லாத தட்டையான நிகழ்காலம்.

மரங்கள் புதிதாகப் பூப்பதில்லை, இலை உதிர்வதில்லை, பாடாத பறவை,

இயக்கமில்லாத ஜடமான இயற்கை, பசி இல்லை, இரவு இல்லை,

மூப்பு இல்லை, உணர்வுகள் இல்லை, உறவுகளில் அர்த்தமில்லை,

காதலோ காமமோ இல்லை அது மரணத்தை வென்ற சிரஞ்சீவி வெளி அல்ல

என்பதை நசிகேதன் புரிந்து கொள்ளும் போது மரணம் வாழ்க்கையின்

ஜீவனாகிவிடுகிறது!

 

அதைப் போலவே மரணம் குறித்து வெ. வண்ணநிலவன் எழுதிய ‘பிணத்துக்காரர்கள்’ கதையையும் சொல்ல வேண்டும். அனாதைப் பிணங்களை எடுத்து வந்து சாலைகளில் வைத்து பிச்சை எடுக்கும் நான்கு மனிதர்களைப் பற்றிய கதை. ஆண் பிணத்தைவிட பெண் பிணத்திற்குத்தான் அதிகப் பிச்சைக் காசு கிடைக்கும் என்பதைப் போகிற போக்கில் உரையாடல்கள் மூலம் சொல்லிச் சென்ற கதை வாசித்து பல வருடங்கள் ஆனபின்பும் அக்கதையில் வரும் விளிம்பு நிலை மாந்தர்களின்

அந்த வாழ்க்கை அவலம் சாலையோரத்தில் நாம் கடந்து செல்லும்

அந்த மனிதர்களைப் பற்றி யோசிக்க வைத்த கதைகளில் முக்கியமானது.

 

இத்துடன் இப்போது இந்த வரிசையில் சேர்ந்திருக்கும் இரு சிறுகதை தொகுப்புகள் மரணம் குறித்த விசாலமான பார்வையை வைக்கின்றன

ஒன்று: த, அகிலன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு: : மரணத்தின் வாசனை:

அதன் குறுந்தலைப்பாக:  போர் தின்ற சனங்களின் கதை.

 

த. அகிலன் ஈழ சமூகத்தில்; 1983ல் பிறந்தவர். அவர் காட்டும் கதை மாந்தர்கள்

போர்க்களத்தில் மாண்டவர்கள் அல்லர். இன்னும் சொல்லப்போனால் ஈழ

விடுதலைப் போராட்டத்தின் போராளிகளும் அல்லர். ஆனால் அந்தச் சனங்களை போர் தின்று துப்பியது. அந்தப் போர்க்கால சூழலில் தன் வீட்டு நாய் முதல் மிளகாய்க் கண்டுகள் (இளம் மிளகாய்ச்செடி) வரை தங்கள் வாழ்க்கையின் சின்ன சின்ன சந்தோஷங்களைக் கூட இழந்துப் போன மனிதர்களைப் பற்றிய கதைகளின் தொகுப்பு. மரணமும் அது குறித்தான செய்திகளும் ஒரு கொடுநிழலைப் போல மனிதர்களைத் துரத்திக் கொண்டிருக்கும் கதை.

ஒவ்வொரு கதையும் வெவ்வேறானவை. அந்தக் கதைகளில் தான் கும்பிட்ட

அம்மனைத் தேடி வரும் “ஓர் ஊரில் ஒரு கிழவி’ கதை பிற கதைகளிலிருந்து வித்தியாசமானது. அக்கதை போர் தின்ற சனங்களின் கதை மட்டுமல்ல,

அந்த சனங்களின் வாழ்க்கையாகவும் வாழ்வின் நம்பிக்கையாகவும் இருந்த

பிம்பங்களை உடைத்து நொறுக்கியதன் வலி தாங்க முடியாத அலறலாக

நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

தன் காணியை காணியில் இருந்த கோவிலைத் தேடி வரும் அம்மம்மா.

அவள் பார்த்தக் காட்சி அங்கே காணியுமில்லை, கோவிலுமில்லை. எல்லாம்

உடைந்து சிதிலங்களாக. :

“என்ர ஆச்சி, தாயே, உன்னை இந்தக் கோலத்திலயா பாக்கோணும்,’ வாய் வார்த்தைகள் குழற குமுறி குமுறி தன் நேசத்தை எல்லாம் தீர்த்துவிடுகிற மாதிரி அழுகிறவள் இறுதியாக ஆவேசம் வந்தவள் போல அடுத்து சொல்லும்

வரிகள் வாசகனை உலுக்கி விடுகின்றன

 

‘வேசை, உன்னை இந்தக் கோலத்திலேயோடி நான் பார்க்கோணும், தோறை தோறை அறுந்த வேசை உன்னை இப்படி நான் பார்க்கோணும் எண்டுதானே என்னை உயிரோட வைச்சிருந்தனி”

 

மரணத்தின் வாசலில் பிறந்து அந்த மரணத்தின் வலியை வேதனையை

ஒவ்வொரு பருவத்திலும் சுவாசித்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைமுறையின் கதையாகவே அகிலனின் கதைகள் இருக்கின்றன.

போர் இலக்கிய வரிசையில் மட்டுமின்றி மரணம் குறித்த படைப்புகளிலும்

அகிலனின் இக்கதை தொகுப்பு தனித்த ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறது.

 

இரண்டாவதாக அண்மையில் நான் வாசித்த இன்னொரு கதை தொகுப்பு

இல. சைலபதி அவர்களின் “அப்துல்காதரின் குதிரை” என்ற சிறுகதை தொகுப்பு.

சென்னையில் அவரை நேரில் சந்திக்கும் போது கொடுத்தார். கொஞ்சம் தாமதமாகவே வாசித்தேன் என்றாலும் அக்கதைகளின்  ஊடாக சைலபதி

வைத்திருக்கும் மரணம் குறித்த விசாரனைகள் என்னை பிரமிப்பில் ஆழ்த்தின.

கதைகளின் ஊடாக அவர் என் கருத்துகளுக்கு முரணான பகுத்தறிவுக்கு ஒவ்வாத சில நம்பிக்கைகளை முன் வைத்திருந்தாலும் அந்த நம்பிக்கைகள்

அனைத்தும் தனிநபர் சார்ந்த நம்பிக்கைகளாக மட்டுமே காட்டப்படுகின்றன.

அந்த நம்பிக்கைகளின் ஊடாகவே அவர் மரணத்தையும் பார்க்கிறார். ஒரு சிறுகதை தொகுப்பில் அனைத்து கதைகளும் மரணம் குறித்த கதைகளாக

இருப்பது தற்செயலா?   அல்லது திட்டமிட்ட ஒரு தொகுப்பா?

அதிலும் அவருடைய முதல் தொகுப்பு இந்நூல் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

 

மரணமே கதைகளின் கருப்பொருளாக அந்த மரணத்தை மனிதர்கள்

உணரும் தருணங்களும் அணுகும் விதமும் சுயம் சார்ந்த அனுபவங்களுக்கு அப்பால் ஒரு மூன்றாவது மனிதனாக நின்று பார்க்கும் பார்வையுடனும்

கதைகள் நகர்கின்றன. மரணத்தைப் பற்றி இத்தனை விதங்களில் சொல்லத்

தெரிந்த ஒரு கதைசொல்லியாக சைலபதி இருக்கிறார் என்பதுடன் தன்னைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் மரணம் குறித்தும் அந்த மரணத்தைச் சுற்றி

இருக்கும் மனிதர்களைக் குறித்தும் அவருக்கென ஒரு சுயமான பார்வையைக்

கொண்டிருக்கிறார் என்பது இக்கதைகளின் மூலம் அவர் அடைந்திருக்கும்

முதல் வெற்றி எனலாம்.

அதிலும் குறிப்பாக ‘துஷ்டி’ என்ற கதை.

 

மரணத்தை கிராமத்தில் வாழ்பவர்கள் அணுகும் விதமும் நகரத்தில் வாழ்பவர்கள் அணுகும் விதமும் மிகவும் கச்சிதமாக சொல்லப்பட்டிருக்கும் கதை. கிராமத்தில் ஒரு வீட்டில் மரணம் என்றால் அன்றைக்கு ஊரார் கூடி

அழுது அந்த வீட்டில் கொட்டிக்கிடந்த துயரத்தை ஆளுக்கு கொஞ்சமாக

அள்ளிக்கொண்டு போய்விடுகிறார்கள் என்கிறார்.அவர்கள் அழுகைகள் பிய்த்து’

தின்றது போக மிச்சமிருந்த துயரம் தான் அதன் பின் மரணம் சம்பவித்த

‘வீட்டில் அந்த வீட்டாருடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அதுவே அவர்கள்

வாழ்க்கையை நகர்த்தும் உந்துசக்தியாக மரணத்தின் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதால் ஏற்படும் கிராம வாழ்க்கையின் பண்பாடாக காட்டுகிறார்.

இந்தப் பண்பாட்டிலிருந்து நகர்ப்புற வாழ்க்கையும் நகர மாந்தர்களும் எவ்வளவு தூரம் விலகி வந்துவிட்டார்கள் என்று துஷ்டி கதையில் வரும் அம்மா அல்லாடுகிறாள். தன் மரணத்திற்குப் பின் தன் பிள்ளைகளுக்கு அந்த நிலை வந்துவிடக் கூடாது என்று எண்ணி தன் மரணம் நகரத்தில் நடந்தேறிவிடக்கூடாது. என்று தீர்மானிக்கிறாள். கிராமத்திற்கு மீண்டும் அந்த

தன் கடைசிநாட்களில் அவள் போக விரும்புவதன் நோக்கமே இதுதான்.

‘செத்தவனுக்கு ஒரு கணம் தான். ஆனா அவன் கூட வாழ்றவங்களுக்குக் காலம்பூரா அது ஒரு சும. செத்தப்பவே அழுது தீர்க்கலைன்னா அது ஆயுசுக்கும்  அவங்க மனசு விட்டுப் போகாது. சாவ அன்னயோட அழுது தீர்க்கனும்’ என்று மரணத்தை அணுகும் முறையை அந்த அம்மாவின் மொழியில் தத்துவ பீடங்களின் மீது ஏறாமல் மிக எளிதாக சொல்லிவிடுகிறார்..

 

சைலபதியின் கதைகளில் வரும் மரணம் துஷ்டி வீடுகளில் துக்கம் விசாரித்துவிட்டு வரும் மரணம். நம் பக்கத்து வீட்டில் நம்முடம் நேற்றுவரை சிரித்துப் பேசிக்கொண்டிருந்த மனிதரின் மரணம். ஆனால் போர்தின்ற சனங்களின் கதையில் த. அகிலன் எழுதியிருக்கும் மரணம் , மரணமே

எழுதிய மரணத்தின் கதைகள். மரணத்தின் வாசனை, அழுது தீர்க்க முடியாத

காலம் பூரா நாம் சுமக்க வேண்டிய மரணத்தின் வலியாக கனக்கிறது.

மரணத்தின் வாசலில் இவர்களின் இந்தக் கதைகள்

மரணத்தைப் போல வாழ்க்கையின் நிஜங்களை விட்டு அகலாமல்

இருப்பதால் வாசகனுக்கு ரொம்பவும் நெருக்கமாகிவிடுகின்றன.

 

நன்றி: புதிய மாதவி

12 Jun

மரணத்தின் வாசனை

த.அகிலனின் போர் தின்ற சனங்களின் கதைளினூடே..

 

அண்மையில் நான் பார்த்து வியந்த அற்புமான திரைப்படம் Terrence Malick இன் . “The Tree of life”. ஒரு அன்பான குடும்பதில், குடும்ப அங்கத்தவர் ஒருவனின் திடீர் மரணம் அந்தக் குடும்பத்தை எப்படி நிலைகுலைய வைக்கின்றது என்பதுதான் கருத்தளம். இயக்குனர் Terrence Malick ஓர் அற்புதமான இயக்குனர் பல விருதுகளைத் தனது திரைப்படங்களுக்காகப் பெற்றவர். “The Tree of life”

மரணங்கள் வெறும் எண்ணிக்கைகளாய். செய்தியாய் மட்டும் கடந்து போய்விடுகிற மரத்துப் போன ஒரு சூழலுக்கு நாங்கள் வந்துவிட்டேம் என்று தோன்றுகின்றது”. என்ற அகிலனின் கூற்று என்னுள் உழன்று கொண்டிருந்த வேளை “The Tree of life”  திரைப்படத்தின் கரு என் மனதில் பதிய மறுத்தது. வளரும் சூழ்நிலைக்கேற்ப மனித மனங்களின் வலியும் வேறுபட்டுப் போகுமோ?

நாம் வாழும் சூழல், எமது நாளாந்த வாழ்க்கைத் தளமென்பன எப்படி எமக்குள் பதிந்து எமை இயக்கிக் கொண்டிருக்கின்ற என்பதனை அண்மையில் ஊரிலிருந்து கனடாவிற்குப் புலம்பெயர்ந்த நண்பியொருத்தி கூற்றிலிருந்து அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. ”நான் தற்போது போரற்ற ஒரு நகரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். துப்பாக்கி வேட்டு, குண்டு வெடிச் சத்தங்கள் இல்லாத என் தற்போதைய வாழ்க்கை முறையை நம்புவதற்கு மனம் மறுக்கின்றது. இதுநாள் வரையும் எனக்கு இவையெல்லாம் நிராகரிக்கப்பட்டிருந்தன என்பதும், இன்னும் பலருக்கு வாழ்நாள் முழுவதுமே இவை நிராகரிக்கப்படுகின்றன என்பதை நினைக்கும் போது துக்கமும், கோவமும் எழுகின்றது என்றாள்.

பிறந்தநாளிலிருந்து போர் மட்டுமேயான நிலபுலத்தில் வாழ்ந்து வரும் இளையவர்களுக்கு மரணம் என்பது அன்றாட வாழ்வின் ஒரு செய்தியாக மட்டுமே இருந்திருக்கின்றது. இப்படியான தளத்திலிருந்து பிறந்திருக்கின்றது த.அகிலனின் “மரணத்தின் வாசனை”. அவரைச் சுற்றிய இறப்புக்கள் அனைத்துமே ஏதோவொருகாரணத்தினால் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்து வாசகர்கள் மனத்தில் ச்சீ இப்படியான ஒரு இக்கட்டான நிலையில்கூட போர்சூழல் எப்படியெல்லாம் மனிதர்களைக் காவு கொடுத்திருக்கின்றது என்ற எரிசலை ஏற்படுத்துகின்றது. மருந்தின்மை, உரியநேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாமை போன்ற மிகச் சிறிய விடையங்களுக்காகத் தம் சொந்தங்களைக் கண் முன்னே இழக்கும் கொடுமையை போர்ச்சூழலில் அகப்படாத வாசகியாகிய என் மனம் ஏற்க மறுக்கின்றது. அகிலனின் வாழ்வனுபவங்கள் எனக்கு வெறும் படித்துவிட்டுப் போகும் கதைகளில் ஒன்றாகவும், ”மரணத்தின் வாசனை” அகிலன் எனும் கதைசொல்லியால் புனையப்பட்ட ஒரு சிறுகதைத் தொகுதியென்பது மட்டுமே. அதையும் தாண்டி அகிலனாய் ஈழத்து மண்ணை என் வாசனைக்குள் கொண்டுவரும் போது வாழ்வெனும் பரப்பினூடே கிளர்ந்தெழும் யதார்த்தம் எனை உலுக்கியெடுக்கின்றது. அகிலன் ஒரு எழுத்தாளனாய் உண்மையைப் பதிந்துள்ளார்.

வாழ்வியல் அனுபவங்களால் இலக்கியத்தை அர்த்தமுள்ளதாக்கி வரலாறாய் பதியும் படைப்பாளிகளின் நேர்மை எப்போதும் பாராட்டுக்குரியதாகும்.

வரலாற்றை மாற்ற வேண்டித்தன் சொந்தங்களைத் தாரவார்த்துக் கொடுக்க எவரும் மனமுவந்து முன்வருவதில்லை. போரில் இணைந்த, இழந்த சொந்தங்களை எண்ணி ஏங்கும்  மனங்களின் தவிப்பும். கையறுநிலையின் விசனமும் விரிந்து பரந்து கிடக்கின்றது இவர் படைப்புக்களில். அகிலன் உண்மையிலேயே புனைவாளரில்லை. வரலாற்றுப் பதிவாளர்;. வாசகர்களாகிய நாம் இவரிடம் எதிர்வினையாற்றக் கேள்விகளற்றவர்களாகின்றோம்.. நேர்மையான வரலாறுகள் மறுப்பதற்கில்லை. அதனிலிருந்து கற்றுக்கொள்ளல் மட்டுமே சாத்தியம்.

தனது மாறுபட்ட பல சிறுகதை வடிவங்கள் மூலம் படைப்புகளில் பன்முகச் சாவல்களை எதிர்கொண்டிருக்கின்றார் கதைசொல்லி. இங்கு முக்கியமாகக் கருத்திற்கொள்ள வேண்டியது என்னவெனில், கதைசொல்லி முற்று முழுதான போர்சூழலில் பிறந்து வளர்ந்து தமது தனிப்பட்ட விருப்பினால் போராட்ட இயக்கத்தில் இணைந்துக்கொண்டு பின்னர் தமது தனிப்பட்ட விசனத்தினால் போராட்ட இயக்கத்திலிருந்து விடுபட்டவர்;. விடுபடலின் பின்னர் தன்னை வேறு எந்த இயக்கத்துடனோ இல்லாவிட்டால் அரசுடனோ இணைத்துக்கொள்ளாது தனித்து மிகச்சாதாரண வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பவர். இந்நிலையில் இன்னும் பல இளைஞர்களும், யுவதிகளுமிருந்தாலும் அவர்கள் தம்மை ஒதுக்கிக்கொண்ட நிலையிலிருக்கும் பட்சத்தில் த.அகிலன் தன்னை விடுவித்துக்கொண்டு தமது அனைத்து அனுவங்களையும் படைப்பாக்கி வாசகர்கள் முன் கொண்டு வந்துள்ளார். இக்கதைசொல்லி எமது அரசியல் சூழலில் உண்மை கூறல் எப்படிப் பார்க்கப்படும் எத்தகைய முத்திரைக் குத்தல்களுக்குத் தாம் ஆளாக நேரிடும் என்பதனைய அறிந்திருந்த போதும் பின்வாங்கலற்று தமது அனுபவப்பகி;ர்வை முன்வைத்து ஈழஇலக்கியத்தில் மிகவும் முக்கிய இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

போரற்ற வாழ்வை அறியாதவர் அகிலன். மரணத்தைத் தினம்தினம் கண்டு அழுது களைத்த சமூகத்தால் வளர்க்கப்பட்டவர். இன்னுமொருநாள் எனக்கு இருக்கின்றதா என்ற அச்சத்தில் தினம் தினம் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் மரணித்தவர்களை எண்ணி அழுவதற்குத்தான் நினைவு வருமா?

சிறுகதையென்றால் என்ன? அதன் வடிவமென்ன? அதுவொரு வரைவிலக்கணக்கத்திற்குள் அடங்கிக்கொள்கின்றதா? என்றெல்லாம் பல கேள்விகளும், அதற்கான ஆய்வுகளும் எழுத்துலகில் இருந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் த.அகிலனின் “மரணத்தின் வாசனை” சிறுகதைத் தொகுதியில் உள்ளடங்கியிருக்கும் சிறுகதைகள், அதன் வடிவங்கள் பற்றிய என் எண்ணக்கருத்தோடு ஒத்துப் போவதாய் எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்களின் சிறுகதை பற்றிய இந்த ஆய்வு அமைந்திருக்கின்றது.

“சிறுகதை என்பது சமூக மதிப்பீடுகளை ஆதரிக்க மறுக்கிற ஒரு இலக்கிய உருவம். அது சமூக விமர்சனம் சார்ந்தது. அது அப்படித்தான் இருக்கும். உண்மை வெல்லும் என்பதை வலியுறுத்தும் என்பது ஒரு கதையாக இருக்கும்போதுகூட அது ஒரு சிறுகதையாக இருப்பதில்லை. இது அறவியல் சார்ந்த ஒரு கதை. ஆனால் சிறுகதை அறவியலை வற்புறுத்தாது. நேற்றைய நம்பிக்கைகளை அது வற்புறுத்தவில்லை. வாழ்க்கை சம்பந்தமான போதாமைகளைச் சொல்கிறது அது. நெருக்கடிகளைச் சொல்கிறது அது. உண்மையைச் சொல்லியும் தோற்றுப் போனேனே என்று முடிவடைவது ஒரு சிறுகதையாக இருக்க முடியும். ஆனால் உண்மை இறுதியில் வெல்லும் என்று முடிவடைவது பெரும்பாலும் சிறுகதையாக இராது. கதையின் முடிவாக அது இருக்கலாம். சிறுகதையினுடைய முடிவாக அது இருக்க முடியாது. பழைய சம்பிரதாயங்கள், பழைய மரபுகள் இவற்றை யார் மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறாரோ, யார் எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துகிறார்களோ, இதுவரை நாம் சரி என்று நம்பிய ஒன்றை, இதுக்கு மேல் உண்மை கிடையாது என்று சொல்லப்பட்டு வந்த ஒன்றை, மேலானது என்று சொல்லபட்டு வந்ததை இன்றைய வாழ்க்கை ஏற்கவில்லை என்ற உண்மையை யார் வெளிப்படுத்துகிறார்களோ அவர்கள் சிறந்த சிறுகதை என்ற உருவத்தை அறிந்தவர்கள்.

அடுத்ததாக, என்ன விஷயங்களை சிறுகதையின் கருவாக நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளப் போகிறீர்கள் என்பது முக்கியமான விஷயம். அதற்கு எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது. ஒருவன் அவனது வாழ்க்கை அனுபவங்கள் சார்ந்து, அவனுக்கு எது முக்கியமானதாகத் தோன்றுகிறதோ, எந்த நெருக்கடி அவனுக்கு முக்கியமானதாக இருக்கிறதோ, எந்தத் துக்கம் அவனை ஓயாது வாட்டிக் கொண்டிருக்கிறதோ அதைப்பற்றி அவன் கதை எழுதலாம் – தமிழாலயமும் அகில இந்திய வானொலி நிலையமும் இணைந்து மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக நடத்தப்பட்ட சிறுகதைப் பயிலரங்கில் ஆற்றிய உரையிலிருந்து – சுந்தரராமசாமி 25.03.95

அகிலன் தட்சணாமூர்த்தியின் “மரணத்தின் வாசைன”  — சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது. அச்சிறுகதைகள் அனைத்துமே தமக்கேயான தளத்திலிருந்து மரணத்தின் வாசனையை வாசகர்களுக்கு நுகரக்கொடுத்திருக்கின்றன. மரணம் என்பது யாருக்கு எவ்வடிவில் வந்தாலும் அது சுகித்தலுக்குகந்த சுகந்தமாக வாசனையன்று. மரணத்தின் வாசனையென்று தலைப்பையேன் கதை சொல்லி தேர்ந்தெடுத்தார்? சம்பிரதாயங்களோடான மரணவீடொன்றில் அதற்கான பிரத்தியேகமான வாசனையென்று ஒன்றுள்ளது. பூஜைப்பொருட்கள் கிருமிநாசினி, வியர்வை, கண்ணீர் என்பன ஒன்றிணைந்து மரணரவீட்டின் வாசனையாய் வீசிக்கொண்டிருக்கும். இவ்வாசனையை மீண்டும் மீட்டிப்பார்க்கும் பொது மனதில் பயம் அப்பிக்கொள்ளும். மீண்டும் மீண்டும் நுகர்விற்காய் ஆவலையெழுப்பும் வாசனையன்று இது. மரணத்திற்கான வாசனை அனைவராலும் வெறுக்கப்படும் ஒன்று. ஆனால் நகரமே பற்றியெரிந்துகொண்டிருக்க கருகி, சிதறி, நிராதரவாய் ஈமொய்க்க வீதியோரம் விடப்பட்ட உடல்களடங்கிய நகரத்தின் மரணவாசனையென்பது நிராகரிக்க முடியாதது. இந்த வாசனையிலிருந்து ஓடிஒழிதல் சாத்தியமற்றது. இது நாற்றம். இது போரின் அவலம். இது வாசனையன்று. நாற்றத்தைத் தவிர்க்க மூச்சைப்பிடித்து சுத்தக்காற்றிற்காய் ஓடிச்சென்று மூச்சை இழுத்து இதமாகவிடுவதற்கு சுத்தக்காற்றுள்ள கூ+ழலை எங்குதான் தேடிஓடுவார் கதைசொல்லி.

இச்சிறுகதைத் தொகுப்பின் முதல் கதையான “ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப் போனார்” கதைக்குள் புகுந்து கொள்வதற்கு முன்பாக அகிலன் “பையன்” என்ற ஈழத்தமிழர்களின் பாவனையிலற்ற பதத்தை உபயோகப்படுத்தக் காரணம் என்ன? ஈழத்தமிழர்களின் பேச்சு வழக்கு மொழியையே அனைத்து சிறுகதைகளிலும் தனது கதை மொழியூடகமாக உபயோகப்படுத்தியிருக்கும் அகிலன் தமிழ்நாட்டுத் தமிழர்களின் புரிதலுக்கென தொகுப்பின் ஆரம்பத்தில் சொல் விளக்கக் குறிப்புக்களையும் கொடுத்திருக்கின்றார். தமிழ்நாட்டு மொழிப்பாதிப்பென்பது அனைத்து ஈழத்தமிழர்களுக்கும் பொதுவானதொன்றுதான்.

“அழுதேன் கடைசியாக அப்பாவைச் சுடலையில் கொளுத்தியபோது பட்டுவேட்டியும் சால்வையுமாகப் படுத்திருந்த அப்பாவின் சுருட்டைத் தலைமுடியைப் பற்றிக்கொண்டு மஞ்சள் தீ நடமாடியபோது, அப்பா இனிமேல் வரமாட்டார் என்று எனக்குப் புரிந்து போது வீரிட்டுக் கத்தினேன்.”

அப்பா நித்திரை, அப்பா முழிப்பு அப்பா எழும்புவார் என்று நம்பிக்கொண்டிருந்த சிறுவனுக்கு கொழுந்து விட்டெரியும் தீயில் அப்பாவின் உடல் பற்றிக்கொள்ளும் போது மரணம் புரியாவிட்டாலும் அப்பாவின் நிரந்தரப் பிரிவு புரிந்து போகின்றது. அவன் அகவயமனது காயம் கொள்கின்றது. இது நிரந்தரக்காயம். களிம்பு பூசி மூடப்பட்ட காயாத ஆழமாக காயம். அதனால்தான் கதைசொல்லி இச்சிறுகதையை இப்படி முடிக்கின்றார். “அப்பனில்லாப் பிள்ளைகள் என்ற இலவசஇணைப்பு என்னோடு எப்பவும் கூடவே வந்து அசௌகரியத்தையும் கூடவே அப்பாவின் நினைவையும் தந்துகொண்டிருக்கின்றுத”

“நரைத்த கண்ணீர்” எனும் சிறுகதையில் “எப்போதும் எனது புன்னகையில் ஆயுள் குறைவாயிருக்கின்றது” என்று ஈழத்தமிழ் மக்களின் கையறுநிலையை கண்முன்னே கொண்டுவருகின்றார் அகிலன். துப்பாக்கி வேட்டுச் சத்தத்திற்குள்ளும், ஒப்பாரிக்குள்ளும் அமிழ்ந்து கிடக்கும் மனிதவாழ்வில் பிச்சுப் போட்ட பாண் துண்டுபோல் கிடைக்கும் ஒருசில நிமிட அல்ப சந்தோஷ கணங்களில் வாய்விட்டுச் சிரிக்க முடியாது, புன்னகைக்கத்தான் முடியும். அதுவும் இடையில் முறிந்து போகும் நிழல்போல் பின்தொடரும் இன்னுமொரு அவலச்செய்தி கேட்டு.

“நான் பிறக்கும் போது என்னூரில் போர் இருந்தது. விமானங்கள் வட்டமிட்டுக்கொண்டிருந்த மாலைப்பொழுதொன்றில்தான் என்னைப் பிரசவிப்பதற்காக தான் வைத்தியசாலைக்குப் போனதாக அம்மா நினைவை மீட்டுவாள்.”  இந்தப் போர்சூழல் காலங்களில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கைதான் என்ன? பிறந்தவர்கள் எத்தனைபேர் தமது வாலிபத்தைக் கடந்து உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். உடல் அவயங்களை இழந்தோர் எத்தினை, மனநிலை பாதிக்கப்பட்டோர் எத்தினை, வன்புணர்வை எதிர்கொண்டோர் எத்தனை இவற்றிற்கெல்லாம் கணக்கு இருக்கின்றதா?

“போர்பற்றி அலைந்து கொண்டிருக்கின்ற விடுதலை வீரதீரக் கதைகளுக்குமப்பால் கீறப்பட்ட மனங்களின் குருதி வடிந்துகொண்டிருக்கும் துயரம் என்னை மேலும் மேலும் அச்சமடையச் செய்கின்றது. பிறகு அச்சமடைந்து அச்சமடைந்து சலிப்புற்று என்னை வெறுமையான மனவெளிகளுள் தள்ளுகின்றது”  என்று தன் உள்ளக்கிடக்கைகளை பதிவாகக் கொட்டுகின்றார்

மரணத்தின் அவலங்களும் வடுக்களும் மட்டுமே கதைசொல்லியின் அவதானத்திற்குட்டவையன்று, சமுதாயவிழுமியங்களுக்குட்பட்ட பல தேக்கங்களையும் தனது சிறுகதைகள் மூலம் கூறிச்செல்ல அவர் மறக்கவில்லை, “ஒரு ஊரில் ஒரு கிழவி” எனும் சிறுகதையில் “தனியொருபெண்ணாகத் தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயங்களை எழுதத் தொடங்கினா. அவ தானே தன் கதையெழுத ஆத்திரக்காரியாக இருக்கவேண்டியிருந்தது, அடாவடிக்காரியாக வேண்டியிருந்தது, ஒருகட்டத்தில் பைத்தியக்காரியாகவும் கூட ஆகவேண்டியிருந்தது. ஆனால் எல்லாவற்றையும் கடந்தா.” என்று பகுத்தறிந்துகாட்டி, பெண் என்பவள் எந்தக் காலகட்டத்திலும் தனித்தியங்குபவளாகவிருக்குமிடத்து அவள் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பலவகை “காரி”யாக மாறவேண்டிய கட்டத்திற்குள் தள்ளப்படுகின்றாள் என்றும், “மந்திரக்காரன்டி அம்மான்டி” எனும் சிறுகதையில் “ச்சீ ஆம்பிளப்பிள்ளைகள் அழக்கூடாது வெக்கக்கேடு.” என்று முதல்நாள் வகுப்பறையில் ஆசிரியர் கூறுவதன் மூலம் சிறுவன் ஒருவன் ஆண் என்ற கட்டமைப்பிற்குள் எப்படித்தள்ளப்படுகின்றான் என்பதையும்;, “ஒருத்தீ” எனும் சிறுகதையில் பெண்களினாலான குடும்பமொன்றில் ஒற்றை ஆணின் கோபத்தைத் தாண்ட முடியாதவர்களாய் அப்பெண்கள் மௌனித்து அல்லல் படுவதையும் கதைசொல்லி கூறிநிற்கின்றார்.

இந்த முற்பது ஆண்டுப் போர்சூழலில் “காணாமல் போனோர்” பட்டியல் என்றொரு நேர்மையான ஆதரங்களோடான பட்டியலொன்றைத் தயாரிக்க முடியாத நிலையில், காணாமல் போன தமது சொந்தங்களை எங்கே தேடுவது? எப்படித் தேடுவது? என்று தெரியாத நிலையில்தான் இன்றும் பலர் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்குவியலுக்குள் அவர்களுக்கான தடையங்கள் மூலமே தம் சொந்தங்களை அடையாளம் காணுதல் சாத்தியமாகின்றது. அதில் கூடத் தவறுகள் இருக்கலாம். தடையங்களற்ற எலும்புக்கூடுகளைத் தமது சொந்தமாக்கத் தயங்கும் இதயங்கள். இறப்பு நேர்ந்துவிட்டதாய் முற்றுப்புள்ளி வைக்கத் தயங்கும் மனம். எங்கோ உயிரோடிப்பதாய் ஆறுதல் கொண்டிருக்கின்றது இன்றும்.

“இது அவற்ர சேட்டு”

‘இது அவற்ர வெள்ளிமோதிரம்”

“இது அவன்ர சங்கிலி”

“நான் அவளோடு எலும்புக்கூடுகள் அடுக்கிவைக்கபட்டிருந்த இடத்திற்குப் போனேன். அவர்களுடைய எலும்புக்கூடுகள் இருக்கக் கூடாதென்றும் ஏதேனும் சிறைச்சாலை அறைகளில் விழித்துக்கொண்டிருக்கலாம் என்றும் மனம் எண்ணிக்கொண்டிருந்தது. அவள் திடீரென்று கத்தினாள். “அண்ணா…” அவள் அழுத இடத்தில் இருந்தது ஒரு 14வயதுப் பெடியனின் எலும்புக்கூடு, அதனோடு ஒரு பெரிய எலும்புக்கூடு” இவ்வரிகள் கதைசொல்லியின் கற்பனைகளல்ல. எமது நாட்டில் நாம் பிறந்து வளர்ந்த நாட்டில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் அவலங்கள். இவ்வனுபவங்களை தாம் கடந்துவந்த வாழ்நாட்களின் அன்றாட அனுவங்களாகக் கொண்டவர்கள்தாம் எத்தனை. குடும்பத்திலொருவர் விபத்தில் மரணித்துவிட்டால், குடும்ப அங்கத்தவர்கள் அனைவருக்கும் அம்மரணவலியைத் தாங்கவென்று மனஆலோசனை வழங்க எத்தனை நிறுவனங்கள் மேலை நாடுகளில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. மரணவலி, எதிர்காலம் பற்றிய கேள்விக்குறி, ஆதரவின்மை எம்மக்களின் புறஅக உளச்சல்களுக்கான விடை எங்கேயென்றறியாது திகைக்கின்றார் கதைசொல்லி.

“ஒருத்தீ” சிறுகதையில் மரணம் எப்படி அறிவிக்கப்படுகின்றது, என்று சிறுகதையை ஆரம்பிக்கும் அகிலன். மின்அஞ்சல் மூலம், தொலைபேசியில் கிரிக்கெட் ஸ்கோர் அறிவிப்பது போல், கடையில் பொருட்கள் வாங்கும் போது சுத்தப்பட்டிருந்த பேப்பர் துண்டில், (புலம்பெயர் மக்கள் பலர் வானொலிச் செய்திகளில் இறந்தவர்கள் பெயர்ப்பட்டியல்கள் வாசிக்கப்படும் போது, தவறாகத் தகவல்கள் கிடைத்து மரணவீடு முடித்துக்கொண்டு பின்னர் தமது சொந்தங்கள் உயிருடனிருக்கின்றார்கள் என்று அறிந்துகொண்டவர்களும் இருக்கின்றார்கள்).

“எனக்கு ஒரு மரணம் அறிவிக்கப்பட்டது? மின்அஞ்சல் வழியாக ஏதோவொரு இணையத்தளத்தின் செய்தியில் இருந்து எடுத்து இரண்டு வரிகள் ஒட்டப்பட்ட மின்னஞ்சலின் மீந்திருந்த கேள்வி இது அவளா?… என்று தொடங்கி அந்த “ஒருத்தீ” யுடனான தனது சொந்த அனுவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து சென்று முடிவில், “காப்டன் ஈழவேணி என்று அழைக்கப்படும் தொண்டமான்நகர் கிளிநொச்சியைச் சொந்த முகவரியாகக் கொண்ட சபாரத்தினம் பாரதி.. நான் பதிலெழுதாமல் இங்கே தொடக்கத்தில் இருக்கும் வரியை எழுதத் தொடங்கினேன்” என்று கதையை முடிக்கின்றார் அகிலன். மரணத்தின் வாசனையில் அனைத்துச் சிறுகதைகளுமே போர்சூழல் மரணங்களால் புனையப்பட்டவை என்பதால் வேறுபட்ட கதைசொல்லும் யுக்திகளைக்  கையாண்டு வாசகர்களைத் தன்வசம் வைத்துக் கொள்ளவும் தவறவில்லை அவர் என்பதும் பாராட்டுக்குரியது.

மனிதமனமென்பது தன்னார்வபூர்த்திக்கான தெரிவொன்றில் தொலைந்து போகும் தன்மையைக் கொண்டது. பொழுதுபோக்கு எனும் சொற்பதத்திற்குள் தமக்கான நேரக்க(ளி)ழிப்பை மனநிறைவாய் செய்து கொண்டிருக்கும் பலர் வாழ்வில் இவற்றிற்கு அடிமையாகிப்போவதுமுண்டு. நிர்ப்பந்தத்தால் இதனிலிருந்து வெளியேற்றப்படுபவர்கள் உளவியல் தாக்கங்களும் உள்ளாகிப் போகின்றார்கள், கடைசியல் அதுவே அவர்களது வாழ்வில் அழிவையும் கொண்டு சேர்க்கும் என்பதைத் தனது “குமார் அண்ணாவும் மிளகாய்க் கண்டுகளும்”, “தோற்ற மயக்கங்களோ” போன்ற சிறுகதைகளின் மூலம் ஆராய்ந்துள்ளார் கதைசொல்லி. தாம் ஆசையாய் பார்த்து பார்த்து வளர்த்த செடிகள், செல்லப்பிராணிகள் போன்றவற்றைப் போரின் நிமித்தம் இழந்தபோது ஏற்பட்ட வலியை இச்சிறுகதைகள் கூறுகின்றன.

படைப்பாளியின் அனைத்து சிறுகதைகளும் மரணத்தின் வாசனையை வாசகர்களுக்கு நுகரச்செய்து மரணத்தின் எல்லைவரை அவர்களையும் இழுத்துச் சென்றிருக்கின்றது. தவிர மற்றைய சிறுகதைகளின் தளத்திலிருந்து வேறுபட்டு “கரைகளிற்கிடையே..” சிறுகதை, போரின் நிமித்தம் நாட்டைவிட்டு வெளியேற நினைக்கும் ஒரு தமிழ் குடும்பம் எப்படி இன்னுமொரு தமிழனால் ஏமாற்றப்பட்டு அழிந்து போகின்றது என்பதையும் காட்டி நிற்கின்றது.

“துப்பாக்கிகளில் நல்ல துப்பாக்கிகள், கெட்ட துப்பாக்கிகள் எனப்பிரிவுகள் இருப்பதாக நம்புகிறார்கள் மொக்குச் சனங்கள். துப்பாக்கிகளுக்குத் தெரிந்ததெல்லாம் கொலை அது மட்டும்தான்” என்று போரின் பால் தான்கொண்ட மனவிசனத்தையும் சொல்லிக்கொள்கின்றார் த.அகிலன்.

மரணத்தின் வாசனையை சிறுகதைத் தொகுப்பை விமர்சனம் செய்த எழுத்தாளர் இமையம் அவர்கள் இப்படி முடிக்கின்றார்கள்

“போர்கள் எதன் பொருட்டு நடத்தப்படுகின்றன?  மனிதர்களை கொன்று குவித்துவிட்டு அடையப்பெறும் வெற்றிக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?  போர் மனிதர்களை அகதிகளாக்கியது.  பெயர் தெரியாத ஊர்களுக்கு விரட்டியடித்தது.  மொழி தெரியாத நாட்டில் வாழ வைத்தது.  உறவுகளைப் பிரித்தது.  பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளையும், குழந்தைகளிடமிருந்து பெற்றோர்களையும் பிரித்தது.  குழந்தைகள் இறந்தன.  பெற்றோர்கள் இறந்தார்கள்.  ஊமையாக்கப்பட்டார்கள்.  காணாமல் போனார்கள்.  பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்.  இத்தனை கொடூரங்களுக்கு பிறகும் போர் நடக்கிறது.  யாருக்கான, எதற்கான போர், அந்தப்போர் தேவையா என்று த.அகிலன் தன் கதைகளின் வழியே கேட்கிறார்.  மனித சமுதாயம் பதில் சொல்ல வேண்டிய கேள்வி.

 ஒரு இலக்கியப்படைப்பின் வெற்றி, பலம் என்பது அப்படைப்பில் இருக்கும் உண்மையைச் சார்ந்தே நிர்ணயமாகும். த.அகிலனின் மரணத்தின் வாசனை-போர் தின்ற சனங்களின் கதை- சிறுகதைத் தொகுப்பு- ஒரு இலக்கிய படைப்பு.”

போர் என்னை அழித்தது, என் உடன் பிறப்புக்களை அழித்தது, எனது குடும்பத்தை அழித்தது, எனது சொந்தங்களை, ஊரை, மண்ணை அழித்தது. என்னை இருக்கவிடாமல், உண்ணவிடாமல், உறங்கவிடாமல், கலைத்துக் கலைத்து அடித்தது அழித்தது. உலகெங்கும் சிதறிக்கிடக்கின்றோம் நாம். பணம் கிடைத்தால் ஆயுதங்களை வாங்கிக் குவித்து மனிதர்களை மனிதத்தை அழித்தொழிக்கும் இப்போரில் வீரம் எங்கே வந்தது? வெற்றி தோல்வி எங்கே வந்தது? அனைத்தையும் அழித்தொழித்துக் கிடைக்கும் நஞ்சூரிய நிலத்தைப் பிடிப்பதுதான் போரின் வெற்றியெனில் அது எமக்குத் தேவைதானா? என்ற கேள்வியை மரணத்தின் வாசனை எனும் சிறுகதை மூலம் விட்டுச்சென்றிருக்கின்றார் த. அகிலன். சிறுகதைத் தொகுப்பை மூடியபோது எனக்குள்ளும் இக்கேள்வியே எஞ்சி நிற்கின்றது.

 

நன்றி: கருப்பி (“வெயில் காயும் பெருவெளி – கூர் 2012″)

12 Jun

நூல் அறிமுகம்: ‘மரணத்தின் வாசனை.

ஈழத்தின் மூத்த பத்திரிகையாளரான ஆர்னல்ட் சதாஸிவம் பிள்ளை எழுதிய சிறுகதையே முதல் கதையென அறிஞர்கள் சுட்டுவர். நவீன சிறுகதை 1930ற்கு பின்பே ஆரம்பமாகிறது எனவும் கொள்ளப்படுகிறது.1983ற்குப் பின்னரே அதிக படைப்பாளர்களின் வருகை நிகழ்ந்துள்ளது.இனக் கலவரம், இடப்பெயர்வு, பொருளாதார இழப்பு / தடை, விமானத் தாக்குதல்கள், போக்குவரத்து அசொளகரியங்கள், உள்ளக / வெளியக புலப்பெயர்வுகள் என்பன படைப்பாளர்களையும் உருவாக்கியிருக்கலாம். வளர்ந்து வந்த இனச் சிக்கல் பெரும் போராக வெடித்ததில் போருக்குள் வாழ்ந்த / வாழ்கின்ற / வாழ்ந்து மடிந்த மக்களிடமிருந்து எழுதிய படைப்பாளர்கள் நிஜத்தை எழுதினார்கள்/எழுத முற்பட்டார்கள். போருக்குள் நின்று புதுவை இரத்தினதுரை , கருனாகரன் ,நிலாந்தன் , அமரதாஸ், வீரா , திருநாவுக்கரசு , சத்தியமூர்த்தி ,புதுவைஅன்பன் ,முல்லைகோணேஸ் , முல்லைகமல் , விவேக் , மலரன்னை ,மேஜர்.பாரதி , கப்டன்.வானதி என விரிந்து இன்றைய த.அகிலன் வரை தொடர்கிறது.

‘தனிமையின் நிழற்குடை’யைத் தொடர்ந்து நமக்கு அகிலன் தந்திருக்கும் நூலே ‘மரணத்தின் வாசனை’.போர் தின்ற சனங்களின் கதை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இதனை ‘வடலி.கொம்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளனர்.

1.ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப் போனார்..
2.ஓர் ஊரிலோர் கிழவி.
3.மந்திரக்காரன்டி அம்மான்டி.
4.குமார் அண்ணாவும் மிளகாய்க் கண்டுகளும்.
5.ஒருத்தீ.
6.சித்தி.
7.நீ போய்விட்ட பிறகு.
8.சலனங்கள் அற்றவனின் கடைசி நாள்.
9.தோற்றமயக்கங்களோ.
10.கரைகளிற்க்கிடையே
11.செய்தியாக துயரமாக அரசியலாக…
12.நரைத்த கண்ணீர்.

என பன்னிரண்டு கதைகளைக் கொண்ட தொகுதி சிறப்பான தொகுதியாக கொள்ளலாம்.அழகிய பதிப்பு. வெளியீட்டுத் துறையில் ஓர் மைல் கல்.

சிறுகதைக்கான தொடக்கம் விரிவு உச்சம் முடிவு என படித்த எமக்கு விதியாசமான கதை நகர்வினைக் கொண்டது. சிறந்த ஆவணப்பதிவு. முழுமையான ஒரு இனத்தின் வரலாற்றுப்பதிவின் ஒரு சிரு துளி எனினும் நல்ல பதிவு. 83 தொடக்கம் அல்லது இந்திய இராணுவத்தின் கொடூரங்கள் / மாவிலாறு தொடங்கி முள்ளிவாய்க்கால் வரையான கொடுமைகள், இன்று வரை தொடர்கின்ற இன அழிப்பு,அவலம் என்பவற்றின் ஒரு புள்ளி. அவலத்துள் வாழ்ந்தவனுக்குத்தான் அதன் வலி தெரியும். பதுங்கு குழி வாழ்வு, காடுகளுக்கூடான பயணம்… ஒவ்வொரு வார்த்தைகளும் நமக்கு களத்துக்குள் அழைத்து செல்லுகின்ற வல்லமை அகிலனின் கதைகளுக்கு கிடைத்திருக்கின்றது. பாம்பு கடித்து இறக்கின்ற தந்தை,கடலில் மூழ்கிப் போகும் இளைஞன்,தான் வாழ்ந்த மண்ணில் மரணிக்கிற கிழவி,தான் நேசித்த தோழி பற்றிய நினைவின் வலி …. பாத்திர வார்ப்பு அபாரம்.அகிலனின் சொந்த கதையாகவும் இருக்கலாம்.ஆனால் நமக்கு நடந்தது போல உணர முடிகிறது. அனுபவம் தனக்கு நடந்தது அல்லது பிறருக்கு நடந்தது.எனினும் நமக்குள் நடந்த நமக்கான சோகத்தை சொல்லிச் செல்வதால் நெருக்கமாகின்றது.சொல்லடல் இயல்பாகவெ வந்து வீழ்கிறது.எங்கள் மொழியில் எழுத முடிகின்றதான இன்றைய முயற்சி வெற்றி பெற்றே வருகிறது எனலாம்.சில சொற்களுக்கான விளக்கங்கள் தரப்பட்டுள்ளனவெனினும் நம் மொழியில் பிறழ்ச்சி ஏற்படாதவாறு எழுதியுள்ளமை வரவேற்கக் கூடியதே.போரின் கொடுமைகளை அவர்களின் மொழியில் பேசவேண்டும்.இங்கு அது சாத்தியமானது அகிலனுக்கு கிடைத்த வெற்றி. கதியால் , குத்தியாக , திரிக்கிஸ் , குதியன்குத்தும் , அந்திரட்டி, உறுக்கி, கொம்புபணீஸ் , புழூகம் ,தத்துவெட்டி, தோறை , எணேய் , நூக்கோணும், அம்மாளாச்சி , ரைக்ரர், விசர் , மொக்கு , சாறம் , சாமத்தியப்பட்டிட்டாள் … இவைகள் சில விளக்கங்களுக்கான சொற்கள்..

‘நரைத்த கண்ணீர்’ எனும் கதையில் வயதான தம்பதியரைப் பார்க்கப் போகும் இளைஞனின் நிலை பற்றிச் சொல்கிறது.தங்கள் மகன் பற்றிக் கேட்டதற்கு விசாரித்துச் சொல்ல முற்பட்டும் அந்த தம்பதியர்க்கு அவர்கள் மகன் வீரமரணம் அடைந்தது பற்றிச் சொல்லி அவர்களை சோகத்தில் ஆழ்த்த விரும்பாது தவிர்த்த போதும் மணைவியின் சந்தோசமே பெரிதென அந்த பெரியவர் மறைத்தது தெரிய வர அவனுடன் சேர்ந்து எமக்கும் வலிக்கிறது. தப்பிச் செல்ல இன்றோ நாளையோ என்றிருக்கையில் திடீர் பயணிக்க நேர்கையில் மூட்டை முடிச்சுகளுடன் பயத்துடன்… தோணிக்காரனுடன் புறப்படுகின்ற அவர்களுடன் நாமும் பயணிக்கிற அனுபவம் (கிளாலி,கொம்படி,ஊரியான் பாதைப்பயணங்கள்/96ன் பாரிய இடப்பெயர்வுகள்) தோணிக்காரன் இடை நடுவில் ஒரு மணற் திட்டியொன்றில் இறக்கிவிட்டுச் சென்றுவிட தவித்த தன் குடும்பத்தை தானே காப்பாற்ற எண்ணி படகுக்காரனுடன் வருவதாகக்க் சொல்லி கடலுள் குதிக்க மூழ்கிப் போகிறான்.பத்திரிகைச் செய்தியில் படித்திருந்தாலும் உண்மைக்கதையின் பதிவாகியிருக்கிறது ‘கரைகளிற்கிடையே’ கதையில்.. மக்களுடன் இடம்பெயர்ந்து பின் தன் காணி/மிளகாய்க் கண்டுகளை பார்க்கச் சென்ற குமார் அண்ணையின் அவலம்/சோகம் ‘குமார் அணாவும் மிளகாய்ச் செடிகளும்’கதை சொல்கிறது.

இப்படி ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கதை சொல்லி அசத்துகிறது. ஏகலைவர்களின்றி நகர்கின்ற போருக்குள் வாழ்ந்த மக்களிடத்திலிருந்து புறப்பட்ட படைப்பாளர்கள் சரியான தளத்தை நோக்கிப் பயணிப்பது ‘மரணத்தின் வாசனை’ சொல்லி நிற்கிறது. ஜனவரியிலும்(2009)மேயிலும் இரண்டு பதிப்புக்களை கண்டுள்ள இந் நூலின் அட்டைப்படம் மருதுவின் ஓவியத்தால் மிகச் சிறப்பாக இருக்கிறது. த.அகிலனிடமிருந்து நிறைய ஆவணப்பதிவுகளை படைப்புலகம் வாழ்த்துக்களுடன் எதிர் பார்த்து நிற்கிறது.

07 Dec

மரணத்தின் வாசனை- ஒரு அறிமுகம்

அகிலனின் மரணத்தின் வாசனை கனடாவில் வெளியிடப்பட்டு, அது என்னுடைய கையுக்குக் கிடைத்து 2 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் ஒருவாறு வாசித்து முடித்திருக்கிறேன். ‘போர் தின்ற சனங்களின் கதை’ என்கிற உபதலைப்போடு, வடலி பதிப்பகத்திடமிருந்து வெளியாகியிருக்கிற அகிலனின் பன்னிரண்டு சிறுகதைகள் அல்லது அனுபவத் தூறல்களின் தொகுப்புத்தான் ‘மரணத்தின் வாசனை’.

 

  • ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்
  • ஒரு ஊரில் ஓர் கிழவி
  • மந்திரக்காரன்டி அம்மான்டி
  • குமார் அண்ணாவும் மிளகாய்க்கண்டுகளும்
  • ஒருத்தீ
  • சித்தி
  • நீ போய்விட்ட பிறகு
  • சலனங்கள் அற்றவனின் கடைசி நாள்
  • தோற்ற மயக்கங்களோ
  • கரைகளிற்கிடையே
  • செய்தியாக துயரமாக அரசியலாக
  • நரைத்த கண்ணீர்

 

மேற்சொன்ன தலைப்புகளில் படைக்கப்பட்டிருக்கிற படைப்புகள் அத்தனையிலும் ஒரேயொரு ஒற்றுமை இருக்கிறது. அது ‘மரணத்தின் வாசனை’. முதலில் வருகிற ‘ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்’ கதையில் நாசி துளைக்கிற அந்த வாசம், அம்மம்மா, சித்தி, நண்பன் தொடக்கம் நேசித்த நாய் எனப் பல தாங்கிகளில் வந்தாலும் புத்தகத்தை மூடிவைத்த பின்னரும் விலகாமல் இருக்கிறது.

 

எல்லா மரணங்களுக்கும் பொதுவான ஒரே விஷயமாக இருப்பது, போர். நீண்ட கொடும் போர். மண்ணில் மரங்களைக்கூட வேரூன்றவிடாமல் விரட்டியடிக்கிற போர். சனங்களைத் தின்கிற போர். அந்தப் போரின் காரணமாக அகிலனும் முண்டியடித்து ஓடுகிறார். அந்த ஓட்டத்தில் அவர் சந்திக்கிற சாவுகள்தான் இங்கே கதைகளாக உருப்பெற்றிருக்கின்றன. பல சமயங்களில் நாங்கள் மறந்துபோய்விட்ட, அல்லது மறந்துபோய்விட்டதாய் நாங்கள் நம்ப முயன்றுகொண்டிருக்கிற எங்களின் வாழ்வியல்க் கோலங்களை அகிலன் தொட்டுச்செல்கிறார், கூடவே பக்கச்சார்பு குறைவான ஒரு சாதாரண ‘தமிழ்ப் பொடியன்’ கண்ட அரசியலையும்தான்.

 

அகிலனின் ஒவ்வொரு கதையிலும் ஈழத்தில் ஒரு இருபது வருடம் காலம் கழித்தவன் என்கிற ஒரு தகுதியில், என்னை இணைத்துப் பார்க்க முடிகிறது. அகிலன் போன்றோர் அனுபவித்த துயரங்களை நான் அனுபவித்திருக்கவில்லை. ஆனாலும் அவர் சொல்கிற கதைகளின் பின்னணிகள் என்னுடன் ஒட்டியதாய் இருப்பதாக ஒரு மன ஓட்டம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. அகிலன் அனுபவித்த பல இன்பதுன்பங்கள் எனக்கு நேரடியாகக் கிட்டவில்லை. ஆனால் ஒரு பார்வையாளனாகவாவது பார்க்கின்ற சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

 

அகிலன் இரண்டுபேரை வைத்தியம் கிடைக்காத காரணத்தால் இழந்திருக்கிறார். அவரது அப்பா, வைத்தியசாலைக்குக் கொண்டுபோகமுடியாமல் இறந்திருக்கிறார். (ஒரு சின்னப் பையனின் அப்பா செத்துப்போகிறார்). இளமையில் அப்பா செத்துப்போனார் என்பதைவிட, ‘அப்பா வைத்தியம் கிடைக்காமல் செத்துப்போனார்’ என்கிற ஒரு அங்கலாய்ப்பு அகிலனிடமிருந்து வருகிறது. அவரது சித்திகூட இப்படியாக வைத்தியசாலையில் மருந்து கிடைக்காமல் செத்துப்போகிறார். அந்த மரணமும் அகிலனின் மனதில் ‘சித்தி மருந்து கிடைக்காமல் செத்துப்போனா’ என்றுதான் விதைத்துச் செல்கிறது. எனக்கும் கிளிநொச்சி வைத்தியசாலையில், விசக்கடியில் தப்பிப் பிழைத்து, காய்ச்சலுக்கு மருந்தில்லாமல், இரண்டு வயதும், ஒரு வயதும் நிரம்பிய இரண்டு சின்னைப் பையன்களைத் தவிக்கவிட்டு இறந்துபோன ஸ்ரீ அண்ணா மனதில் வந்து போகிறார்.

 

கணவன்/காதலனால் கைவிடப்பட்டு அல்லது ஏமாற்றப்பட்ட இரண்டு பெண்களைப் பற்றியும் அகிலன் சொல்லிப்போகிறார் (ஒரு ஊரில் ஓர் கிழவி, சித்தி). அந்தப் பெண்களிடம் இயல்பாகத் தொற்றிவிட்ட பிடிவாதம் போன்றவற்றையும் தொட்டுச்செல்கிறார். அதுவும் யார் வீட்டிலும் நிலையாகத் தங்காமல், அங்கும் இங்குமாக அலைபாய்ந்து திரிகிற, உறவினர்களால் ‘அடங்காப்பிடாரி’யாகப் பார்க்கப்படுகிற அவரது ‘சித்தி’யின் உருவில் நான் என்னுடைய மாமியைப் பார்க்கிறேன். அம்மனுடன் சகோதரியாக, தாயாக, மகளாக ஏன் ‘வேசை’ என்று விளிக்குமளவு உரிமையுள்ளவளாகப் பழகும் அவரின் அம்மம்மா (ஒரு ஊரில் ஓர் கிழவி) எனக்கு எங்களூர்க் கிழவிகள் சிலரைக் கண்முன் நிறுத்துகிறார். அம்மாவிடம் அடிவாங்காமல் சின்னப் பொடியனைக் காப்பாற்றும் அக்காக்கள் ஊரெல்லாம் பரவி இருந்திருக்கிறார்கள். தம்பிகளைப் பிள்ளைகளாய் வளர்க்கும் அந்த உறவுகளைப் பற்றிய எண்ணக் குவியல்களை மீட்டு வருகின்றன அக்காக்கள் பற்றி பெரும்பாலான கதைகளிலும் அகிலன் காட்டும் பிம்பங்கள்.

 

அவர் சொல்கிற ஜாம் பழம், வீரப்பழம் போன்ற பழங்கள் எனக்கு எங்கள் உறவுகள் இருந்த முரசுமோட்டையை ஞாபகப்படுத்திச் செல்கின்றன. எங்கள் சின்ன மாமா வீட்டில் ஒரு ஜாம் பழ மரம் இருந்தது. ராஜி அண்ணா ஏறிப் பறித்துத் தருவான். மறக்கமுடியாது. அந்த மரத்தின் கீழ் முதன் முதலாக சின்ன மாமாவிடம் கேட்டுவாங்கிச் சுவைத்த சுருட்டையும். நேமி அண்ணாவின் கையைப் பிடித்துக்கொண்டு போய் வந்த அந்தக் கோவில் திருவிழா, எனக்கு அருகில் வந்து அடிப்பதுபோல் பாவனை காட்டிக் காட்டி மேளம் அடித்த அந்த மேளக்காரர், ஒரு கட்டைக்கு ஒன்றாக இருக்கிற வீடுகள், 2004ல் கிரிக்கெட் விளையாடிய அந்த விவேகானந்தாப் பள்ளிக்கூட மைதானம், இவ்வளவு தூரம் அடிக்கிறியள் என்று வியந்த பெறாமக்கள், இரவில் படுத்துறங்கிய அந்தக் கொட்டில்….. முற்றுமுழுதாக வன்னியில் வாழாவிட்டாலும், அவர்களின் இந்த வாழ்வியல் எனக்குப் பிடித்திருந்தது. யாழ்ப்பாணத்தில் காணாத ஒரு சுகமான வாழ்வு அங்கே இருந்தது.

 

இந்தத் தொகுப்பிலேயே என்னைப் பாதித்த கதை ‘தோற்ற மயக்கங்களோ’. மேலோட்டமாகப் பார்த்தால் அந்தக் கதையில் மரணம் இல்லையோ என்று தோன்றும். ஆனால், நுண்ணிய பாதிப்பைத் தரவல்ல இரண்டு ஜீவன்களின் மரணத்தை அகிலன் அந்தக் கதையில் படம்பிடித்திருந்தார். அவர் செல்லப் பிராணிகளுக்கு வைத்த பெயர்கள், அதை எங்கிருந்து பெற்றார் என்பதெல்லாம் எங்கள் பால்யகாலச் சுவாரஸ்யங்கள். நானும் ‘டெவில்’ என்றொரு நாயை பாலில் எறும்பெல்லாம் போட்டு ஊட்டி வளர்த்தேன். என் ‘டெவிலை’யும் யுத்தம் பிரித்தது, வேறுவிதமாக.

 

அகிலனின் எழுத்தில் ஒரு அப்பாவித்தனம் இழையோடிக் கிடக்கிறது. அந்த அப்பாவித்தனம்தான் அவரது பலமும், பலவீனமும். இப்படி அப்பாவித்தனமான எழுத்துக்களை ‘மேதாவிகள்’ ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதனால் அகிலனின் இந்தப் படைப்பு ஒதுக்கப்படலாம், இன்றைய மேதாவி இலக்கியச் சூழலில். ஆனாலும், அந்த அப்பாவித்தனத்தினூடே ஊமைக் குசும்பனாக அவர் பேசும் அரசியல் எனக்குப் பிடித்திருந்தது. நண்பன் ஒருவனின் மரணம் பற்றிய ‘சலனங்கள் அற்றவனின் கடைசி நாள்’ என்கிற கதையில் அவரது நண்பன் கேசவன் போர் காரணமாக ஆறு வருடங்களாக இடுப்புக்குக் கீழ் இயங்காமல் போய் இறந்திருப்பான். அந்தக் கதையில் சில இடங்களில் அகிலன் நுட்பமாக அரசியல் பேசுகிறார். இடுப்புக்குக் கீழே உணர்ச்சியற்றிருக்கும் கணவர்களைச் சுமக்கும் அக்காமார்களின் ‘தியாகம்’ என்று கட்டமைக்கப்பட்ட வாழ்வைத் தொட்டுக்காட்டி, பல விஷயங்களை எங்களின் சிந்தனைக்கு விட்டுச்செல்கிறார்.

 

ஆறு வருடமாகப் படுக்கையில் கிடந்த கேசவனின் மரணத்தில், அவனது அவஸ்தையிலிருந்தான விடுதலை பற்றிய தனது நிம்மதியைப் பதிவு செய்யும் அதேவேளை, ‘இனியும் கேசவன்கள் உருவாகமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் என்கிற கேள்வி மனசைக் குடைகிறது. துப்பாக்கிகளைத் துதிப்பவர்களுக்குத் தெரியாதபோது எனக்கெப்பிடித் தெரிந்திருக்கும்?’ என்கிற கேள்வியோடு அவர் அந்தக் கதையை முடித்திருக்கிற விதம், வலிமை மிகுந்தது. அதே போல் ‘துப்பாக்கிகளில் நல்ல துப்பாக்கி கெட்ட துப்பாக்கி எனப் பிரிவுகள் இருப்பதாக நம்புகிறார்கள் மொக்குச் சனங்கள். துப்பாக்கிக்குத் தெரிந்ததெல்லாம் கொலை. அது மட்டும்தான்’ என அவர் சொல்லிச் செல்லுகிற அந்தச் செய்தி கவனிக்கப்படவேண்டியது (கரைகளுக்கிடையே).

 

அகிலனின் எழுத்துக்களில் குறை இல்லாமலில்லை. தொழில் முறை எழுத்தாளர்களின் எழுத்துக்களோடு ஒப்பிடும்போது சில கதைகளில் அகிலனின் எழுத்தின் செழுமை குறைவாகவே இருப்பதாகப்படும் (என்னால் இந்தளவுகூட எழுதமுடியாது என்பது வேறு விஷயம்). ஆனால் எழுத எழுத அகிலனின் எழுத்து இன்னும் செழுமை பெற்று வீரியமாக வரும் என்பதில ஐயமில்லை. ஏனென்றால் ‘ஆக்க இலக்கியங்கள்’ உருவாவதற்கு அத்தியாவசியம் என்று மெலிஞ்சி முத்தன் சொல்லும் ‘சூழலை உற்றுப் பார்க்கிற’ தன்மையும், சுஜாதா சொன்ன ‘காரணங்களும்’ அகிலனுக்கு இருக்கின்றன. களம் கிடைத்தால் அகிலன் அடித்து ஆடுவார் என்பது திண்ணம்.

பதிப்பகம்

வடலி பதிப்பகம் மேற்கொண்ட ஒரு நல்ல முயற்சி இது. சமீபகாலமாகத்தான் இவர்கள் இந்தத் துறைக்குள் காலடிவைத்திருக்கிறார்கள். ஈழத்துப் படைப்பாளிகளுக்குப் புத்தகம் அடித்துக்கொடுப்பதில் இருக்கிற பொருளாதாரச் சிக்கல்கள் இவர்களை விழுங்கிவிடாமல் இருக்கவேண்டும் என்பதுதான் இவர்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். அச்சுக்கோர்ப்பு ரீதியாக முன்னேறுகிறார்கள். கானா பிரபாவின் ‘கம்போடியா’ சிறப்பான அச்சுக்கோப்பு அல்ல. ‘மரணத்தின் வாசனை’ கூட அவ்வளவு சிறந்த ஒன்றாகச் சொல்லமுடியாவிட்டாலும், ‘கம்போடியாவை’ விட நன்றாக வந்திருந்தது. சமீபத்தில் வெளியான கே.எஸ்.பாலச்சந்திரனின் ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்’ அற்புதமாக வந்திருக்கிறது.

வடலி சரியான திசையில் போகிறது, என்ன எம்மவரிடம் இருந்து ஆதரவேதும் பெரியளவில் இல்லை என்கிற குறைதான் இவர்கள் நிலைத்து நிற்பதில் பெரும் சிக்கல்களை உருவாக்கியிருக்கிறது.

 

சின்னச் சர்ச்சை

ட்விட்டரில் இந்தப் பதிப்பைத் திறந்தவுடனே ஒரு குறை கண்டதாகச் சொல்லியிருந்தேன். சாயினி கூடக் குறை காண்பது பற்றி ஒரு மறைமுகக் குத்துக் குத்தியிருந்தார். தொப்பி அளவாயிருந்ததால் போட்டுக்கொண்டேன் :). அந்தக் குறை இதுதான். ‘சொல் விளக்கக் குறிப்புகள்’ எதற்காக? வணிக ரீதியான சில நோக்கங்களுக்காகத்தானே. அதாவது இந்தப் படைப்பு இயலுமானளவு பெரியதொரு வீச்சத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்கிற நோக்கத்தால்தானே? இதுவும் ஒரு வகையிலான பெரியண்ணன்களைக் குசிப்படுத்தும் நோக்கம் இல்லையா? (தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளலாம்)

0

நன்றி: கிருத்திகன்

27 May

மரணத்தின் வாசனை!

இணையம் மூலமாக நான் சில புத்தகங்கள் வாங்கியிருந்தேன். ஈழத்து எழுத்தாளர்களான த.அகிலன், கருணாகரன் ஆகியோரின் புத்தகங்கள். அகிலனின் ‘மரணத்தின் வாசனை’, ‘தனிமையின் நிழல்குடை’ ஆகியவையும், கருணாகரனின் ‘பலி ஆடு’ ம் வாங்கியிருந்தேன். வடலி வெளியீடாக வந்த அந்த புத்தகங்கள் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டு நேற்று என் கைக்கு வந்து சேர்ந்தன.

புத்தகம் வாங்கும்போதே, மனமெல்லாம் குழப்பமும், கொந்தளிப்புமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் வாங்குகின்றேன், வாசிப்பேனா என்று எண்ணினேன். எத்தனையோ புத்தகங்கள் தொடப்படாமலே தூங்கிக் கொண்டு இருக்கின்றன. அதனால் இவை இப்போது அவசியமா என்று தோன்றினாலும், ஏதோ ஒரு உந்துதலில் வாங்கினேன்.

புத்தகம் கிடைத்ததுமே ‘மரணத்தின் வாசனை’ வாசிக்க வேண்டும்போல் இருந்தது. இப்போ இருக்கும் வலிகளுடன் கூடிய மனநிலையில், இந்தப் புத்தகம் வாசிக்கவே வேண்டுமா என்று தோன்றிய எண்ணத்தை புறந்தள்ளி விட்டு, முன்னுரையை பார்த்து விட்டு, முதலாவது கதையான ‘ஒரு சின்னப் பையனின் அப்பா செத்துப் போனார்’ ஐ வாசித்தேன். முதலே ஓரளவு இந்தக் கதையின் கரு தெரிந்திருந்தாலும், வாசித்த பொழுதில் கண்ணீர் என் அனுமதியின்றி வழிந்ததை தடுக்க முடியவில்லை. அகிலன் தனக்கே உரிய பாணியில் மனதை தொடும் விதத்தில் எழுதியிருந்தார்.

இரு நாட்கள் முன்னாலும், நேற்றும் என் மனது மரத்துப் போனதா என்ற கேள்வியை நான் பல தடவை கேட்டுக் கொண்டேன். காரணம் உறவினர் ஒருவரின் மரணம் என் கண்ணில் நீரை வரவழைக்கவில்லை. எனக்கே வியப்பாக இருந்தது. அது மட்டுமல்லாமல், கேள்விப்பட்ட உடனே ஏதோ ஒரு கவலை வந்தாலும், சிறிது நேரத்திலேயே, ஓரளவு நிதானத்துடன் அந்த மரணத்தை மனது ஏற்றுக் கொண்டது எனக்கே ஆச்சரியத்தை தந்தது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று நினைத்துப் பார்க்கிறேன். தொடர்ந்து ஈழ மண்ணில் நடந்தேறியி்ருக்கும் ஆயிரம் ஆயிரம் மரணங்களாக இருக்குமோ? மரணத்தின் வாசனையை மட்டுமே தற்போது கொண்டிருக்க கூடிய வன்னிப் பகுதி நினைவிலும், உணர்விலும் கலந்து கிடப்பதாக இருக்குமோ?

மரணம் என்பது தவிர்க்க முடியாததுதான். ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதும்தான். ஆனாலும், இப்படியா கொத்துக் கொத்தாக, ஏதுமறியா அப்பாவிகளின் உயிர் போயிருக்க வேண்டும். உலகிலேயே மனிதாபிமானம் என்பது செத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

 

நன்றி: கலையரசி

07 May

ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்

இந்த மிக எளிமையான வரியில் ஆழம் நிறைந்த வலியை பதிவு செய்திருக்கும் என் சகோவின் (என் சகோதரன் என்று தன்னிச்சையாக நான் அழைக்கும் அகிலனின்) இந்தப்புத்தகத்தை எந்த வித வண்ணத்தின் வழி பரிதாபத்தையும் எதிர்நோக்காத ஒர் ஆவணப்படத்தின் எழுத்துருவாக்கமாகவே உணர்கிறேன்.

மதிப்புரை வழங்கும் அளவிற்கு நான் என்னை உயர்த்திக்கொள்ளாத(சரியான வார்த்தையா தெரியவில்லை) இந்த சூழலிலும், இந்த பதிவை ஒரு வாசகப்பதிவு என்றும் அந்நியப்படுத்த ஏலாது. மேலும் என் சகோவிற்கும் (மற்ற ஈழநண்பர்கள் பலருக்கும்) எனக்கும் இடையில் எளிதில் கடக்க முடியாத எப்பொழுதும் நிறைந்திருக்கும் நிழல்களின் சில அடையாளங்களை அறிய ஏதுவாக இந்த புத்தகம் அமைந்திருக்கிறது.

(இந்த பதிவின் உண்மைத்தன்மை அறிய விரும்புவோர்க்கு ஒரு தகவல். இன்னொரு மரணத்தின் வாயிலில் நானே நேரில் சகோவிடம் கேட்டுப்பெற்ற இந்த புத்தகத்தில் அவர் கையெழுத்திடவும் இல்லை. நான் பணம் தரவுமில்லை)

 

ஒவ்வொரு பகுதி தொடங்கும் பொழுதும் அந்தப்பகுதியில் முன்னிலை படுத்தப்படும் உயிரின் மரணம் இறுதியில் அறிவிக்கப்படும் என்பது நாம் அறிந்ததே. மேலும்

போருக்கும் மரணத்திற்குமான தொடர்பும் புதிதல்ல.

ஆயினும் இங்கு எளிமையான ஒரு மனிதனின் அண்ணன் பாட்டி சித்தி தந்தை தோழி காதலி நாய்குட்டி பூனை இன்ன பிற உறவுகளின் / உற்ற உயிர்களின் வாழ்க்கைக்கும் போருக்கும் உள்ள அதீதத்தொலைவும் அந்த தொலைவை மிகச்சில நொடிகளில் வென்றுசெல்லும் செல்களையும் பற்றிய உண்மைகளோடும் தீராத அமைதியோடு அழுகுரல்களையும் பதிவுசெய்திருக்கிறது இந்த புத்தகம்.

 

குறுக்காசும், பெடியல் மற்றும் ஆமிக்காரர்கள் எல்லாரும் போரின் சாட்சிகளாக வந்துபோகிறார்கள்.அதாவது இங்கு சொல்லப்படும் அனைத்து மரணத்திற்கும் போர் காரணம் எனபதை மட்டும் சொல்லிவிட்டு போருக்கு யார் காரணம் என்ற கேள்வியை காலத்தின் கையிலேயே விட்டுவிட்டுத் தொடரும் இந்த எழுத்துக்களின் மௌனம் நம்மை தடுமாறவே செய்கிறது.

 

இந்தப்புத்தகத்தில் உள்ளது போல குண்டு விழுந்ததை கூட ‘நேற்று இரவு குண்டு விழுந்தது’ என்று இயல்பாக எழுத முடியுமா என்பது அதிர்ச்சியாய் தோன்றுகிறது. அகிலனைப்போன்று போருக்கிடையிலே வாழ்ந்தவர்களால் மட்டுமே இவ்வாறு எழுதமுடியும் என்றும் இது போரின் மிகக்குரூரமான முகம் என்றும் சற்றே நிதானிக்கும் பொழுது அவதானிக்கமுடிகிறது.

 

அதே நேரம் போர் சூழலிலே பிறந்து வளர்ந்த மனிதனுக்குள்ளும் நகைச்சுவை உணர்வு உள்ளது என்பதை பதிவு செய்ய மறக்கவில்லை அகிலன். முக்கியமாக இன்றைய காலகட்டத்தில் நாம் அதிகம் பதற்றத்தோடு கேட்டறிந்த ‘தந்திரோபாய பின்நகர்வு’ என்ற சொற்றொடர் இந்த புத்தகத்தில் பயன்படுத்திய இடத்தில் வாய்விட்டு சிரிக்க வைத்ததை மறக்க ஏலாது. மற்றும் ‘தொடங்கீற்றான்ரா சிங்கன்’

 

இந்த புத்தகத்தின் மூலம் ஈழ வாழ்வை நெருங்கிபார்க்க முடிந்தது என்பதில் நிறைவும் அதை வேளை துர்மரணங்கள் ஏற்படுத்தும் வெறுமையும் ஒரே நேரத்தில் உணர்வது சற்றே எதிர்கொள்ள இயலாத கணத்தை ஏற்படுத்திவிடுகிறது.

இங்கு மரணத்தின் வாசனை யின் உள்ளீடுகளை அதிகம் பதிவு செய்ய விருப்பமில்லை.அதன் மீதான என் மீ-பார்வைகளை மட்டுமே பதிவுசெய்கிறேன்.மற்றவை படித்து அறியவும்.

 

மரணத்தின் வாசனை என்ற தலைப்பு முதலில் என்னை அசௌகரியப்படுத்தியது. அதற்கு அகிலன் காரணமல்ல.இங்கே பலவார்த்தைகளை நம் வியாபார நோக்கிற்காக அதன் அர்த்த ஆழங்களை பற்றி சிறிதும் அக்கறையற்று வெறும் உவமையாகவும் ஈர்ப்புக்காகவும் பயன்படுத்துகிறோம். உதாரணத்திற்கு முலை,யோனி,மரணம்,ரத்தம்,வெளி,பிரபஞ்சம் இன்னபிற.

 

ஈழம் குறித்து பலரும் எழுதுகிறோம். அது கேள்வி ஞானத்தால் ஆனது. வாசனை என்பது நேரில் சந்தித்த வாழ்க்கை என்பதன் தெளிவை ஏற்படுத்துகிறது. உண்மையில் இந்த புத்தகம் ஒரு சிறுவனின் வாக்குமூலத்தின் வழி ‘மரணத்தின் வாசனை’ என்ற இரண்டு வார்த்தைகளின் ஆழத்தை நோக்கி பயணிக்கிறது.

 

ஈழம்வாழ்வின் பகல் இரவை அறிய எண்ணுபவர்களுக்கு இந்தப்புத்தகம் மிகவும் நெருக்கமானதாக அமையும் என்றே கருதுகிறேன்.

நன்றி : இராவணன்

17 Apr

மரணத்தின் வாசனை – த.அகிலன்

இரண்டு வாரங்களாக இந்தப் புத்தகம் என்னுடன் எல்லா நேரத்திலும் பயணித்து வந்தது. ஒன்றிரண்டு நாட்களில் வாசித்திருக்க முடியும். ஆனால் இப்புத்தகத்தின் ஆழமும், வாசித்தபின் ஏற்படும் மன அழுத்தமும் சொல்லில் அடங்காது. கதையென்று அதை எப்படிக் கூற முடியும்? போரின் கொடூரங்களை பேரழிவுகளை வார்த்தை வார்த்தையாக கொட்டியிருக்கிறார் அகிலன். அவரைப்போல எம் ஈழ மக்களுக்கு அங்கு ஏற்பட்டிருக்கும் பெரும்துயர் என்று எப்போது எப்படி ஆறும்? காலத்தின் படர்ந்திருக்கும் இந்த ரத்தக் கறையை எவ்வளவு துடைத்தாலும் மறையுமா? பதில் சொல்ல யாரிருக்கிறார்? இத்தனைக்குப் பின்னும் வாழ்தலின் பேரலவலத்தை புனைவாயும் நிஜமாயும் விவரிக்கிறார் அகிலன். நம்முன் அலறித்துடிக்கும் அந்த ஓலத்தின் குரல் தமிழ்க்குரல் என்பதைத் தவிர நமக்கு போரின் அவலங்கள் பற்றி எவ்வளவு வாசித்தும் எத்தனை படம் பார்த்தும் தினம் தினம் செய்தி கேட்டும் என்ன தெரிந்துவிடும்?

‘மரணத்தின் வாசனை’ மூலம் அகிலனும் நானும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்துள்ளோம்.‘எதைக் கடந்துவிட்டதாய் நான் எண்ணிக் கொண்டிருந்தேனோ, அது என்னைத் துரத்துகிறது’ அவனைப் போலவே நானும் பல நாள்கள் துயருற்றிருக்கிறேன். பிரிவும், தனிமையும், மரணமும் செர்ந்து என்னை துரத்தியபடியே இருந்த காலகட்டங்கள் உண்டு. எம்மைவிட மிக வலிமையான அவற்றுடன் நான் போராடிச் சலித்து இறுதியில் சரணடைந்துவிட்டேன். என் பிரியமான தங்கையை மரணம் என்னிடமிருந்து இரக்கமில்லாமல் பிடுங்கிச் சென்றது. பின் அன்பான நண்பனை தெருவில் அடிபட்டு சாகச் செய்தது. எனக்கு தோழமையாகவும் வழிகாட்டியாகவும் இருந்த என்னுடைய பாஸை (boss) மலையிலிருந்து கீழ் தள்ளி சாகடித்து அகோரமாய் சிரித்ததுப் பார்த்தது. எல்லாமே எதிர்பாராத மரணங்கள்… இளமையின் வெவ்வேறு படிகளில் நின்றுகொண்டிருந்த அவர்கள் நினைத்திருப்பார்களா சாவு தங்களை இப்படி காவு கொள்ளுமென்று? பித்துப் பிடித்து செய்வதறியாது நான் கலங்கி நின்றிருந்தேன். யாரிடமும் காண்பிக்க முடியாத வேதனையை கவிதையாய், எழுத்தாய், என் டைரியின் தாள்களில் இறக்கி வைத்தேன். துக்கம் ஓரளவிற்கு இருநூறு பக்கங்களில் அடங்கிவிட்டது. ஆனால் அதன் வெம்மை என் மனதிற்குள் அணையா நெருப்பாய் இருக்கிறது, நான் இறக்கும்வரையிலும் அது இருக்கத்தான் செய்யும். தற்செயலாய் அதை வாசித்த என் நண்பர் ஒருவர் இரண்டு நாள் இரவு தூங்காமல் தவித்தாராம். அத்தனை வலியையும் வேதனையும் வார்த்தையின் வடிவில் பார்த்தவருக்கு அதிர்ச்சி. எப்படி தாங்கிக் கொண்டாய், இதற்குப்பின்னரும் உன்னால் எப்படி சிரிக்க முடிகிறது, நானென்றால் பைத்தியமாகியிருப்பேனே என்றார். நான் புன்னகைத்து வாழ்க்கை கற்றுக் கொடுக்கும் பாடங்களில் மகத்தானது மரணத்தை பற்றியது சிலருக்கு அது கொடூரமாக சொல்லித்தருகிறது, என்னைப் போல என்றேன். இப்போது அகிலனின் கதைகளை வாசிக்கும்போது எமக்கேற்பட்ட துன்பங்கள் மங்கலாகிக் கொண்டிருக்கிறது. தந்தையை, நண்பனை, சித்தியை, ப்ரியமான நங்கையை – சமீபத்தில் தன்னுடன் பிறந்தவனை என எத்தனை எத்தனை மரணங்கள் அவர் வாழ்வில். வழி நெடுக மரணத்தூனூடே பயணிக்கிறது அகிலனின் வாழ்வு இந்த சிறிய வயதில் எப்படி எப்படித் தாங்கிக் கொண்டார் என நினைக்கையில் மனம் கனத்துக் கிடக்கிறது. வெகு நாள் கழித்து முகம் தெரியாத மனிதர்களுக்காகவும் அழ நேர்ந்தது. காலம் எல்லா காயங்களுக்கும் மருந்து போடும் என்பதைத் தவிர அகிலனுக்கு ஆறுதலாய்க் கூற வார்த்தை ஏதுமில்லை என்னிடம்.

இப்புனைவுகளை நுட்பமான மொழிநடையில் ஈழத்தின் அழகுத் தமிழில் எழுதியுள்ளார் அகிலன். தொன்மையான நம் தமிழனின் மொழியது. சில வார்த்தைகள் புரியாவிட்டாலும் தொடர்ந்து வாசிக்கும்போது தெள்ளந்தெளிவாக புரிகிறது. இத்தொகுப்பில் மொத்தம் பனிரெண்டு கதைகள். எல்லாக் கதைகளுமே என்னை பாதித்தது, மிகவும் பாதித்த கதைகள் எண்டு சொன்னால், ‘ஒரு சின்னப் பையனின் அப்பா செத்துப் போனார்’, ‘செய்தியாக – துயரமாக – அரசியலாக’, சித்தி’, குமார் அண்ணாவும் மிளகாய்க் கண்டுகளும்’, ‘சலனங்கள் அற்றவனின் கடைசிநாள்’, ‘தோற்ற மயங்கங்களோ’. மற்ற கதைகளான ‘ஒரு ஊரில் ஒரு கிழவி’, ‘ஒருத்தீ’, ‘மந்திரக்காரண்டி அம்மாண்டி’, ‘கரைகளிற்க்கிடையே’ ‘நீ போய்விட்ட பிறகு’ ‘நரைத்த கண்ணீர்’, ஆகியவையும் மிகவும் நுட்பமான கதைகள்.

 

இப்புத்தகத்திலிருந்து என் மனதை பிழிந்தெடுத்த சில வரிகள், இதை எழுதும் போது அகிலனின் மனநிலையை அவதானிக்க முடிகிறது. என் கண்ணில் கண்ணீரை அல்ல அனல் நீரை வார்க்கச் செய்துவிட்டது இவ்வுரைகள்.

“மரணமும் அதுகுறித்தான பயமும் அறியப்படாத ஒரு ரகசியச் சுவை போல நம்மிடையே கலந்திருக்கிறது. யாரும் தாண்டிவிட விரும்பாத சுவரைப்போலவும்….”

“அவர்கள் நேசித்த உடலைக் கண்ணுக்குள் வைப்பதும் யாருவருக்கும் பிரியமான ஒரு செய்லாயிருக்கிறது. நான் நினைத்தேன், மனிதன் உடலாகவே அறியப்படுகிறான். கறுப்பாய், ஒல்லியாய், குண்டாய் என அவனது உடலையே நம் நினைவுகள் முதலில் கொண்டாடுகின்றன. உடல் சார்ந்தே அவனுடைய பிறநினைவுகளும் வாழ்கின்றன. அந்த உடலின் பிரதிநிதியாகவே ஒரு மனிதன் குறித்த நினைவுகள் நமக்குள் தங்கிவிடுகின்றன. அதனால் அந்த உடலைக் கடைசியாகப் பார்த்துவிட வேண்டும் என்று துடிக்கிறோம்…..”

“துயர் தரும் மரணத்தின் கதைகளுக்கு இந்த நாட்டில் பஞ்சமா? குருதியும் எதிந்த தசைகளின் துர்மணமும் நிறைந்த கதைகள் தவிர வேறென்ன இருக்கிறது இங்கே. எல்லாரையும் கொன்று கொண்டோ அல்லது கொல்வதற்குக் கட்டாயப்படுத்திக் கொண்டோ இருக்கிறது.”

“தேவதையின் மரணத்தை அண்ணி கடிதத்தில் உறுதி செய்தாள். மெலிந்து கறுத்துப் போன உனது சீருடைப் படத்திற்உ உன் கிராமத்து வீட்டில் மாலைபோட்டு ஊதுபத்தி ஏற்றியிருப்பதாக, மரணத்தின் வாசனை அதனின்றும் கமழ்ந்து கொண்டிருப்பதை தான் போய் பார்த்தேன் என்று அண்ணி எழுதியிருந்தாள். மரணம் நாசமாய்ப் போக. அது தேவதைகளையும் விட்டு வைப்பதில்லை.”

“யுத்தம் கொடிய யுத்தம். மனித மனங்களை சிதைத்துக் குவித்துக் கொன்றுவிட்டிருக்கும் யுத்தத்தின் இன்னுமொரு சாட்சி இவன். இனி என்றைக்கும் திரும்பவியலாதது. பிரிவும் துயரமும் எதிர்ப்பார்ப்பு கலவையாகிப் பினைந்து கொண்டிருக்கிறது இவன் சிந்தனைகளை என்று தோன்றியது எனக்கு.”

புத்தகத்தை மூடி வைத்து இரவில் வெகு நேரம் தூங்காமல் விழித்திருந்தேன். அகிலன் சொல்வது போல் ‘மரணமும் அது குறித்தான சேதிகளும் ஒரு கொடு நிழலைப்போல் என்னைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றன” ஆம்…

நன்றி: உமா ஷக்தி  (16th April 2009)

16 Jan

த.அகிலனின் மரணத்தின் வாசனை

வடலி வெளியீடு

போர் தின்ற சனங்களின் கதை

அதிகாரத்தின் பெருவாய் அப்பாவிகளின் உயிர் குடிக்க அலைகிறது. பிணங்களும் ரணங்களுமே இன்றைய ஈழத் தமிழனின் சொத்து. களமாடிச் சவமாகிக் கிடக்கும் தமிழச்சிகளின் பிணங்களைப் புணரும் சிங்களப் பேரினவாதத்தின் கொடூரம், ஹிட்லரின் நாஜிப் படையும் செய்யத் துணியாதது. இந்த உண்மைகளை வலியோடு பேசுகிறது த.அகிலனின் ‘மரணத்தின் வாசனை’ புத்தகம்.

நன்றி:

 ஆனந்த விகடன் (2009 ஜனவரி)