18 Oct

காத்திரமான படைப்பு மரணத்தின் வாசனை

கிளிநொச்சியை சேர்ந்த புலம் பெயர் எழுத்தாளரான தட்சணாமூர்த்தி அகிலனின்(த.அகிலன்) மரணத்தின் வாசனை சிறுகதை நூல் நேற்று(2016.09.16) கிளிநொச்சியில் படைப்பாளர்கள் வாசகர்கள் மத்தியில் உரையாடல் செய்யப்பட்டது.கிளிநொச்சி மத்திய கல்லாரியில் மாலை 3.30 மணிக்கு எழுத்தாளரும் ஆசிரியருமான ஜோயல் பியசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் படைப்பாளர்களான பொன்.காந்தன் சி.ரமேஸ் ப.தயாளன் வேல்.லவன் மு.தமிழ்ச்செல்வன் ஆகியோர் உரையாடினர்.

இதில் கலந்துகொண்ட கவிஞர் பொன்.காந்தன் நூல் மீது கருத்துக்களை வைத்து உரையாற்றுகையில் அகிலன் மிக துணிச்சலாகவும் கிளிநொச்சி மண்ணின் ஆத்மாவை பிரநிதிதுவப்படுத்தியும் இந்த நூலில் படைத்துள்ளார்.ஈழத்து இலக்கியத்திற்கு ஒரு கிளிநொச்சியானின் மிகவும் காத்திரமான படைப்பாக இதை கருதலாம்.நாம் தூக்கி கொண்டாடக்கூடிய படைப்பு.பொக்கிசம்.

அகிலனை சின்னப்பையனாக எனக்குத் தெரியும் அவனின் உணர்வுகளை நான் அறிவேன். கிளிநொச்சி மத்தி கல்லூரியில் கல்வி கற்றிருந்த அகிலனின் எழுத்துக்கான முனைப்பை பாத்திருக்கின்றேன்.

கிளிநொச்சி எழுத்துக்களுக்கு மரணத்தின் வாசனை புதிய வாசனை.நாம் எழுத நினைத்ததை.அல்லது நாம் நினைத்துக்கொண்டிருக்கிற எழுத்தை அகிலன் ஆழமான மொழி நடையில் பதிவு செய்துள்ளான்.அகிலனை ஒருமையில் அழைக்க காரணம்.அவன் நான் பார்க்க வளர்ந்த பையன்.நான் படித்த கிளிநொச்சி மத்திய கல்லூரியில் அவனும் படித்தான்.அவன் சந்தித்த மனிதர்களை நானும் சந்தித்தேன்.

மண்ணின் ஆத்மா மரணத்தை பற்றி அவன் எழுத்துக்களில் பேசுகின்றது. நீண்ட காலத்துக்கு பின் மனதை நெருடுகிற கதை களம். அவல நாடகங்களில் வருவது போல பாறைகளின் கீழ் நசியுண்டு சாகின்ற நாயகர்களை போல அவன் எழுத்துக்களில் மனிதர்கள் அலைகின்றார்கள். ஒரிடத்தில் அமராத வாழ்வின் இழந்து இழந்து போகின்ற ஏக்கம் இழையோடுகின்றது எங்கும். கிளிநொச்சி அது சந்தித்த போர்க்காலங்கள் ஆக்கிரமிப்புக்கள் ஆக்கிரமிப்பின் மீதான போர்கள். போர்களில் வீழ்ந்த மனிதர்கள். அவர்களின் வலி துரத்தும் வாழும் மனிதர்களின் ஏக்கம்.இன்னும் நிரவப்படாது இருக்கும் உள்ளத்தில் காயங்கள். மரணத்தின் வாசனையில் பயணப்படுகின்றது. ஒரு கிளிநொச்சியானாக புறப்படுகின்ற த.அகிலனின் மரணத்தின் வாசைன ஒரு மன்னார்காரனாக ஒரு யாழ்ப்பாணத்தானாக ஒரு மட்டக்களப்பானாக ஒரு முல்லைத்தீவானாக திருக்கோணமலையானாகா அம்பாறையானாக மரணத்தின் வாசனையை முகரச்செய்யத்தூண்டுகிறது எழுத்து.

இந்த நூல் பற்றிய உரையாடலில் ஆழமான கருத்துக்களை ஆய்வுகளை உரையாடியோர் முன்வைத்ததுடன் எழுத்தாளர்கள் கவிஞர் கதிரோவியன், பாலா மாஸ்டர், கருணாகரன், பெரு.கணேசன், விஜயசேகரன், பங்கயற்செல்வன், அன்ரன், அன்பழகன் உள்ளிட்டவர்கள் உரையாடல்கள் பற்றிய தங்கள் உணர்வுகளையும் பகிர்ந்துகொண்டனர்.

நன்றி:  telo.org (18 September, 2016)