07 Apr

அம்பரய

அம்பரய தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் முதல் சிங்கள நாவல்.

சிங்களர் வாழ்வைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. பிரசன்ன விதானேவின் சில படங்கள் வேறு சில சிங்கள படங்களின் நமக்கு மெலிந்த சித்திரங்கள் உண்டு.

 

அம்பரய என்றால் ஆம்பல் என்று பொருள் கடலில் கொழுத்த தலையுள்ள திமிங்கலத்தின் எச்சத்தையும் அம்பரய என்றே சொல்கிறார்கள். அதற்கு சந்தையில் நல்ல மதிப்புண்டு. அது வாசனைத்திரவியங்கள் உண்டாக்க பயன்படுகிறது. சாமானியத்தில் கிடைக்காது. இதை தேடும் சுமனே என்ற இளைஞனின் வாழ்வே இந்த நாவல்.

நுணுக்கமான விவரங்களின் வழி வாழ்வு சார்ந்த சித்தரிப்புகளின் வழி இந்த நாவல் மேல் செல்கிறது.

சிங்கள வாழ்வு பெருமளவு மலையாள வாழ்வை ஒத்திருக்கிறது. உணவு, வாழுமிடம், கலாச்சாரம், கட்டுமானம், நிலப்பரப்பு, இப்படி பலவகையில் சிங்கள கிராம சமூகமும் மலையாள கிராம சமூகமும் அண்மிக்கின்றன. எழுபதுகளின் சிங்கள கிராமம் அதன் வறுமை பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கிராம வாழ்விற்கே உண்டான நன்மை தீமைகள், மாசுபடாத அதன் இயற்கை, மெல்ல விரியும் கிராமம். அரசாங்க அபிவிருத்தி திட்டங்கள், இரத்த உறவுகளுக்குள் இருக்கும் தீரா பகைமை, வர்க்க வேறுபாடுகள், கொண்டாட்டம், போன்ற சித்திரங்களின் வழி நாம் அறியாதொரு வாழ்வை நமக்கு நிகழ்த்திக்காட்டுகிறார் நாவலாசிரியர் உ.சு.ல.பி. விஜய சூர்யா.

சுமனே நேர்மையான வாழ்விற்காக விடாது போராடுகிறான்.

‘கடற்கரைக்கு போவதற்கான நீண்ட நடையிலோ அல்லது ஆற்றில் இரவல் வாங்கிய கட்டுமரத்தில் மீன் பிடிக்க போகும்போதோ சுமனோ அவன் தனியே இருக்கும்போதோ சட்டை போடாத மீன்பிடிக்கும் பையன் அல்ல அவன். அவன் படித்த நல்லதொரு உத்தியோகத்தில் உள்ள இளைஞன். அவன் ஆங்கிலத்தில் கதைத்தான் அழகிய சிறிய வீடொன்றில் வாழ்ந்தான். அவனது சகோதரிகளும் வேலையில் இருந்தனர். அவன் தந்தையும் திரும்பி வந்துவிட்டார். அவர்கள் வீட்டு விராந்தையில் வெள்ளை பேனியனும் கோடுபோட்ட சாரத்துடன் அமர்ந்திருந்தார். ஒரு சுருட்டு அவர் வாயில் புகைந்துகொண்டிருந்தது. பாட்டியும் வீட்டில்தான் இருந்தாள் அவளுக்கு இப்போதெல்லாம் தென்னோலைக்கு களவெடுக்க தேவையில்லை ஒவ்வொரு பின்னேரமும் அவள் விகாரைக்கு ஒரு கூடை நிறைய நறுமணம் கமழும் மலர்களுடன் போய்வந்தாள்’ இப்படியான வாழ்விற்குதான் சுமனே கனவு கண்டான்.

நேர்மையான வாழ்விற்கான போராட்டம் எல்லா காலத்திலும் எல்லா சமூகத்திலும் துயர்மிக்கதாகவே இருக்கிறது. சுமனேவும் உலகம் தோன்றிய காலத்தில் உருவான அந்த விதியில் இருந்து தப்ப முடியவில்லை.

அம்பரய என அழைக்கப்படுகின்ற கொழுத்த தலையுள்ள திமிங்கலத்தின் எச்சத்தை கடைசி வரை சுமனே காணவேயில்லை.

 

நன்றி: சாம்ராஜ் – அந்நியமற்ற நதி