07 Dec

மரணத்தின் வாசனை- ஒரு அறிமுகம்

அகிலனின் மரணத்தின் வாசனை கனடாவில் வெளியிடப்பட்டு, அது என்னுடைய கையுக்குக் கிடைத்து 2 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் ஒருவாறு வாசித்து முடித்திருக்கிறேன். ‘போர் தின்ற சனங்களின் கதை’ என்கிற உபதலைப்போடு, வடலி பதிப்பகத்திடமிருந்து வெளியாகியிருக்கிற அகிலனின் பன்னிரண்டு சிறுகதைகள் அல்லது அனுபவத் தூறல்களின் தொகுப்புத்தான் ‘மரணத்தின் வாசனை’.

 

  • ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்
  • ஒரு ஊரில் ஓர் கிழவி
  • மந்திரக்காரன்டி அம்மான்டி
  • குமார் அண்ணாவும் மிளகாய்க்கண்டுகளும்
  • ஒருத்தீ
  • சித்தி
  • நீ போய்விட்ட பிறகு
  • சலனங்கள் அற்றவனின் கடைசி நாள்
  • தோற்ற மயக்கங்களோ
  • கரைகளிற்கிடையே
  • செய்தியாக துயரமாக அரசியலாக
  • நரைத்த கண்ணீர்

 

மேற்சொன்ன தலைப்புகளில் படைக்கப்பட்டிருக்கிற படைப்புகள் அத்தனையிலும் ஒரேயொரு ஒற்றுமை இருக்கிறது. அது ‘மரணத்தின் வாசனை’. முதலில் வருகிற ‘ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்’ கதையில் நாசி துளைக்கிற அந்த வாசம், அம்மம்மா, சித்தி, நண்பன் தொடக்கம் நேசித்த நாய் எனப் பல தாங்கிகளில் வந்தாலும் புத்தகத்தை மூடிவைத்த பின்னரும் விலகாமல் இருக்கிறது.

 

எல்லா மரணங்களுக்கும் பொதுவான ஒரே விஷயமாக இருப்பது, போர். நீண்ட கொடும் போர். மண்ணில் மரங்களைக்கூட வேரூன்றவிடாமல் விரட்டியடிக்கிற போர். சனங்களைத் தின்கிற போர். அந்தப் போரின் காரணமாக அகிலனும் முண்டியடித்து ஓடுகிறார். அந்த ஓட்டத்தில் அவர் சந்திக்கிற சாவுகள்தான் இங்கே கதைகளாக உருப்பெற்றிருக்கின்றன. பல சமயங்களில் நாங்கள் மறந்துபோய்விட்ட, அல்லது மறந்துபோய்விட்டதாய் நாங்கள் நம்ப முயன்றுகொண்டிருக்கிற எங்களின் வாழ்வியல்க் கோலங்களை அகிலன் தொட்டுச்செல்கிறார், கூடவே பக்கச்சார்பு குறைவான ஒரு சாதாரண ‘தமிழ்ப் பொடியன்’ கண்ட அரசியலையும்தான்.

 

அகிலனின் ஒவ்வொரு கதையிலும் ஈழத்தில் ஒரு இருபது வருடம் காலம் கழித்தவன் என்கிற ஒரு தகுதியில், என்னை இணைத்துப் பார்க்க முடிகிறது. அகிலன் போன்றோர் அனுபவித்த துயரங்களை நான் அனுபவித்திருக்கவில்லை. ஆனாலும் அவர் சொல்கிற கதைகளின் பின்னணிகள் என்னுடன் ஒட்டியதாய் இருப்பதாக ஒரு மன ஓட்டம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. அகிலன் அனுபவித்த பல இன்பதுன்பங்கள் எனக்கு நேரடியாகக் கிட்டவில்லை. ஆனால் ஒரு பார்வையாளனாகவாவது பார்க்கின்ற சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

 

அகிலன் இரண்டுபேரை வைத்தியம் கிடைக்காத காரணத்தால் இழந்திருக்கிறார். அவரது அப்பா, வைத்தியசாலைக்குக் கொண்டுபோகமுடியாமல் இறந்திருக்கிறார். (ஒரு சின்னப் பையனின் அப்பா செத்துப்போகிறார்). இளமையில் அப்பா செத்துப்போனார் என்பதைவிட, ‘அப்பா வைத்தியம் கிடைக்காமல் செத்துப்போனார்’ என்கிற ஒரு அங்கலாய்ப்பு அகிலனிடமிருந்து வருகிறது. அவரது சித்திகூட இப்படியாக வைத்தியசாலையில் மருந்து கிடைக்காமல் செத்துப்போகிறார். அந்த மரணமும் அகிலனின் மனதில் ‘சித்தி மருந்து கிடைக்காமல் செத்துப்போனா’ என்றுதான் விதைத்துச் செல்கிறது. எனக்கும் கிளிநொச்சி வைத்தியசாலையில், விசக்கடியில் தப்பிப் பிழைத்து, காய்ச்சலுக்கு மருந்தில்லாமல், இரண்டு வயதும், ஒரு வயதும் நிரம்பிய இரண்டு சின்னைப் பையன்களைத் தவிக்கவிட்டு இறந்துபோன ஸ்ரீ அண்ணா மனதில் வந்து போகிறார்.

 

கணவன்/காதலனால் கைவிடப்பட்டு அல்லது ஏமாற்றப்பட்ட இரண்டு பெண்களைப் பற்றியும் அகிலன் சொல்லிப்போகிறார் (ஒரு ஊரில் ஓர் கிழவி, சித்தி). அந்தப் பெண்களிடம் இயல்பாகத் தொற்றிவிட்ட பிடிவாதம் போன்றவற்றையும் தொட்டுச்செல்கிறார். அதுவும் யார் வீட்டிலும் நிலையாகத் தங்காமல், அங்கும் இங்குமாக அலைபாய்ந்து திரிகிற, உறவினர்களால் ‘அடங்காப்பிடாரி’யாகப் பார்க்கப்படுகிற அவரது ‘சித்தி’யின் உருவில் நான் என்னுடைய மாமியைப் பார்க்கிறேன். அம்மனுடன் சகோதரியாக, தாயாக, மகளாக ஏன் ‘வேசை’ என்று விளிக்குமளவு உரிமையுள்ளவளாகப் பழகும் அவரின் அம்மம்மா (ஒரு ஊரில் ஓர் கிழவி) எனக்கு எங்களூர்க் கிழவிகள் சிலரைக் கண்முன் நிறுத்துகிறார். அம்மாவிடம் அடிவாங்காமல் சின்னப் பொடியனைக் காப்பாற்றும் அக்காக்கள் ஊரெல்லாம் பரவி இருந்திருக்கிறார்கள். தம்பிகளைப் பிள்ளைகளாய் வளர்க்கும் அந்த உறவுகளைப் பற்றிய எண்ணக் குவியல்களை மீட்டு வருகின்றன அக்காக்கள் பற்றி பெரும்பாலான கதைகளிலும் அகிலன் காட்டும் பிம்பங்கள்.

 

அவர் சொல்கிற ஜாம் பழம், வீரப்பழம் போன்ற பழங்கள் எனக்கு எங்கள் உறவுகள் இருந்த முரசுமோட்டையை ஞாபகப்படுத்திச் செல்கின்றன. எங்கள் சின்ன மாமா வீட்டில் ஒரு ஜாம் பழ மரம் இருந்தது. ராஜி அண்ணா ஏறிப் பறித்துத் தருவான். மறக்கமுடியாது. அந்த மரத்தின் கீழ் முதன் முதலாக சின்ன மாமாவிடம் கேட்டுவாங்கிச் சுவைத்த சுருட்டையும். நேமி அண்ணாவின் கையைப் பிடித்துக்கொண்டு போய் வந்த அந்தக் கோவில் திருவிழா, எனக்கு அருகில் வந்து அடிப்பதுபோல் பாவனை காட்டிக் காட்டி மேளம் அடித்த அந்த மேளக்காரர், ஒரு கட்டைக்கு ஒன்றாக இருக்கிற வீடுகள், 2004ல் கிரிக்கெட் விளையாடிய அந்த விவேகானந்தாப் பள்ளிக்கூட மைதானம், இவ்வளவு தூரம் அடிக்கிறியள் என்று வியந்த பெறாமக்கள், இரவில் படுத்துறங்கிய அந்தக் கொட்டில்….. முற்றுமுழுதாக வன்னியில் வாழாவிட்டாலும், அவர்களின் இந்த வாழ்வியல் எனக்குப் பிடித்திருந்தது. யாழ்ப்பாணத்தில் காணாத ஒரு சுகமான வாழ்வு அங்கே இருந்தது.

 

இந்தத் தொகுப்பிலேயே என்னைப் பாதித்த கதை ‘தோற்ற மயக்கங்களோ’. மேலோட்டமாகப் பார்த்தால் அந்தக் கதையில் மரணம் இல்லையோ என்று தோன்றும். ஆனால், நுண்ணிய பாதிப்பைத் தரவல்ல இரண்டு ஜீவன்களின் மரணத்தை அகிலன் அந்தக் கதையில் படம்பிடித்திருந்தார். அவர் செல்லப் பிராணிகளுக்கு வைத்த பெயர்கள், அதை எங்கிருந்து பெற்றார் என்பதெல்லாம் எங்கள் பால்யகாலச் சுவாரஸ்யங்கள். நானும் ‘டெவில்’ என்றொரு நாயை பாலில் எறும்பெல்லாம் போட்டு ஊட்டி வளர்த்தேன். என் ‘டெவிலை’யும் யுத்தம் பிரித்தது, வேறுவிதமாக.

 

அகிலனின் எழுத்தில் ஒரு அப்பாவித்தனம் இழையோடிக் கிடக்கிறது. அந்த அப்பாவித்தனம்தான் அவரது பலமும், பலவீனமும். இப்படி அப்பாவித்தனமான எழுத்துக்களை ‘மேதாவிகள்’ ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதனால் அகிலனின் இந்தப் படைப்பு ஒதுக்கப்படலாம், இன்றைய மேதாவி இலக்கியச் சூழலில். ஆனாலும், அந்த அப்பாவித்தனத்தினூடே ஊமைக் குசும்பனாக அவர் பேசும் அரசியல் எனக்குப் பிடித்திருந்தது. நண்பன் ஒருவனின் மரணம் பற்றிய ‘சலனங்கள் அற்றவனின் கடைசி நாள்’ என்கிற கதையில் அவரது நண்பன் கேசவன் போர் காரணமாக ஆறு வருடங்களாக இடுப்புக்குக் கீழ் இயங்காமல் போய் இறந்திருப்பான். அந்தக் கதையில் சில இடங்களில் அகிலன் நுட்பமாக அரசியல் பேசுகிறார். இடுப்புக்குக் கீழே உணர்ச்சியற்றிருக்கும் கணவர்களைச் சுமக்கும் அக்காமார்களின் ‘தியாகம்’ என்று கட்டமைக்கப்பட்ட வாழ்வைத் தொட்டுக்காட்டி, பல விஷயங்களை எங்களின் சிந்தனைக்கு விட்டுச்செல்கிறார்.

 

ஆறு வருடமாகப் படுக்கையில் கிடந்த கேசவனின் மரணத்தில், அவனது அவஸ்தையிலிருந்தான விடுதலை பற்றிய தனது நிம்மதியைப் பதிவு செய்யும் அதேவேளை, ‘இனியும் கேசவன்கள் உருவாகமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் என்கிற கேள்வி மனசைக் குடைகிறது. துப்பாக்கிகளைத் துதிப்பவர்களுக்குத் தெரியாதபோது எனக்கெப்பிடித் தெரிந்திருக்கும்?’ என்கிற கேள்வியோடு அவர் அந்தக் கதையை முடித்திருக்கிற விதம், வலிமை மிகுந்தது. அதே போல் ‘துப்பாக்கிகளில் நல்ல துப்பாக்கி கெட்ட துப்பாக்கி எனப் பிரிவுகள் இருப்பதாக நம்புகிறார்கள் மொக்குச் சனங்கள். துப்பாக்கிக்குத் தெரிந்ததெல்லாம் கொலை. அது மட்டும்தான்’ என அவர் சொல்லிச் செல்லுகிற அந்தச் செய்தி கவனிக்கப்படவேண்டியது (கரைகளுக்கிடையே).

 

அகிலனின் எழுத்துக்களில் குறை இல்லாமலில்லை. தொழில் முறை எழுத்தாளர்களின் எழுத்துக்களோடு ஒப்பிடும்போது சில கதைகளில் அகிலனின் எழுத்தின் செழுமை குறைவாகவே இருப்பதாகப்படும் (என்னால் இந்தளவுகூட எழுதமுடியாது என்பது வேறு விஷயம்). ஆனால் எழுத எழுத அகிலனின் எழுத்து இன்னும் செழுமை பெற்று வீரியமாக வரும் என்பதில ஐயமில்லை. ஏனென்றால் ‘ஆக்க இலக்கியங்கள்’ உருவாவதற்கு அத்தியாவசியம் என்று மெலிஞ்சி முத்தன் சொல்லும் ‘சூழலை உற்றுப் பார்க்கிற’ தன்மையும், சுஜாதா சொன்ன ‘காரணங்களும்’ அகிலனுக்கு இருக்கின்றன. களம் கிடைத்தால் அகிலன் அடித்து ஆடுவார் என்பது திண்ணம்.

பதிப்பகம்

வடலி பதிப்பகம் மேற்கொண்ட ஒரு நல்ல முயற்சி இது. சமீபகாலமாகத்தான் இவர்கள் இந்தத் துறைக்குள் காலடிவைத்திருக்கிறார்கள். ஈழத்துப் படைப்பாளிகளுக்குப் புத்தகம் அடித்துக்கொடுப்பதில் இருக்கிற பொருளாதாரச் சிக்கல்கள் இவர்களை விழுங்கிவிடாமல் இருக்கவேண்டும் என்பதுதான் இவர்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். அச்சுக்கோர்ப்பு ரீதியாக முன்னேறுகிறார்கள். கானா பிரபாவின் ‘கம்போடியா’ சிறப்பான அச்சுக்கோப்பு அல்ல. ‘மரணத்தின் வாசனை’ கூட அவ்வளவு சிறந்த ஒன்றாகச் சொல்லமுடியாவிட்டாலும், ‘கம்போடியாவை’ விட நன்றாக வந்திருந்தது. சமீபத்தில் வெளியான கே.எஸ்.பாலச்சந்திரனின் ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்’ அற்புதமாக வந்திருக்கிறது.

வடலி சரியான திசையில் போகிறது, என்ன எம்மவரிடம் இருந்து ஆதரவேதும் பெரியளவில் இல்லை என்கிற குறைதான் இவர்கள் நிலைத்து நிற்பதில் பெரும் சிக்கல்களை உருவாக்கியிருக்கிறது.

 

சின்னச் சர்ச்சை

ட்விட்டரில் இந்தப் பதிப்பைத் திறந்தவுடனே ஒரு குறை கண்டதாகச் சொல்லியிருந்தேன். சாயினி கூடக் குறை காண்பது பற்றி ஒரு மறைமுகக் குத்துக் குத்தியிருந்தார். தொப்பி அளவாயிருந்ததால் போட்டுக்கொண்டேன் :). அந்தக் குறை இதுதான். ‘சொல் விளக்கக் குறிப்புகள்’ எதற்காக? வணிக ரீதியான சில நோக்கங்களுக்காகத்தானே. அதாவது இந்தப் படைப்பு இயலுமானளவு பெரியதொரு வீச்சத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்கிற நோக்கத்தால்தானே? இதுவும் ஒரு வகையிலான பெரியண்ணன்களைக் குசிப்படுத்தும் நோக்கம் இல்லையா? (தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளலாம்)

0

நன்றி: கிருத்திகன்

27 May

மரணத்தின் வாசனை!

இணையம் மூலமாக நான் சில புத்தகங்கள் வாங்கியிருந்தேன். ஈழத்து எழுத்தாளர்களான த.அகிலன், கருணாகரன் ஆகியோரின் புத்தகங்கள். அகிலனின் ‘மரணத்தின் வாசனை’, ‘தனிமையின் நிழல்குடை’ ஆகியவையும், கருணாகரனின் ‘பலி ஆடு’ ம் வாங்கியிருந்தேன். வடலி வெளியீடாக வந்த அந்த புத்தகங்கள் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டு நேற்று என் கைக்கு வந்து சேர்ந்தன.

புத்தகம் வாங்கும்போதே, மனமெல்லாம் குழப்பமும், கொந்தளிப்புமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் வாங்குகின்றேன், வாசிப்பேனா என்று எண்ணினேன். எத்தனையோ புத்தகங்கள் தொடப்படாமலே தூங்கிக் கொண்டு இருக்கின்றன. அதனால் இவை இப்போது அவசியமா என்று தோன்றினாலும், ஏதோ ஒரு உந்துதலில் வாங்கினேன்.

புத்தகம் கிடைத்ததுமே ‘மரணத்தின் வாசனை’ வாசிக்க வேண்டும்போல் இருந்தது. இப்போ இருக்கும் வலிகளுடன் கூடிய மனநிலையில், இந்தப் புத்தகம் வாசிக்கவே வேண்டுமா என்று தோன்றிய எண்ணத்தை புறந்தள்ளி விட்டு, முன்னுரையை பார்த்து விட்டு, முதலாவது கதையான ‘ஒரு சின்னப் பையனின் அப்பா செத்துப் போனார்’ ஐ வாசித்தேன். முதலே ஓரளவு இந்தக் கதையின் கரு தெரிந்திருந்தாலும், வாசித்த பொழுதில் கண்ணீர் என் அனுமதியின்றி வழிந்ததை தடுக்க முடியவில்லை. அகிலன் தனக்கே உரிய பாணியில் மனதை தொடும் விதத்தில் எழுதியிருந்தார்.

இரு நாட்கள் முன்னாலும், நேற்றும் என் மனது மரத்துப் போனதா என்ற கேள்வியை நான் பல தடவை கேட்டுக் கொண்டேன். காரணம் உறவினர் ஒருவரின் மரணம் என் கண்ணில் நீரை வரவழைக்கவில்லை. எனக்கே வியப்பாக இருந்தது. அது மட்டுமல்லாமல், கேள்விப்பட்ட உடனே ஏதோ ஒரு கவலை வந்தாலும், சிறிது நேரத்திலேயே, ஓரளவு நிதானத்துடன் அந்த மரணத்தை மனது ஏற்றுக் கொண்டது எனக்கே ஆச்சரியத்தை தந்தது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று நினைத்துப் பார்க்கிறேன். தொடர்ந்து ஈழ மண்ணில் நடந்தேறியி்ருக்கும் ஆயிரம் ஆயிரம் மரணங்களாக இருக்குமோ? மரணத்தின் வாசனையை மட்டுமே தற்போது கொண்டிருக்க கூடிய வன்னிப் பகுதி நினைவிலும், உணர்விலும் கலந்து கிடப்பதாக இருக்குமோ?

மரணம் என்பது தவிர்க்க முடியாததுதான். ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதும்தான். ஆனாலும், இப்படியா கொத்துக் கொத்தாக, ஏதுமறியா அப்பாவிகளின் உயிர் போயிருக்க வேண்டும். உலகிலேயே மனிதாபிமானம் என்பது செத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

 

நன்றி: கலையரசி

07 May

ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்

இந்த மிக எளிமையான வரியில் ஆழம் நிறைந்த வலியை பதிவு செய்திருக்கும் என் சகோவின் (என் சகோதரன் என்று தன்னிச்சையாக நான் அழைக்கும் அகிலனின்) இந்தப்புத்தகத்தை எந்த வித வண்ணத்தின் வழி பரிதாபத்தையும் எதிர்நோக்காத ஒர் ஆவணப்படத்தின் எழுத்துருவாக்கமாகவே உணர்கிறேன்.

மதிப்புரை வழங்கும் அளவிற்கு நான் என்னை உயர்த்திக்கொள்ளாத(சரியான வார்த்தையா தெரியவில்லை) இந்த சூழலிலும், இந்த பதிவை ஒரு வாசகப்பதிவு என்றும் அந்நியப்படுத்த ஏலாது. மேலும் என் சகோவிற்கும் (மற்ற ஈழநண்பர்கள் பலருக்கும்) எனக்கும் இடையில் எளிதில் கடக்க முடியாத எப்பொழுதும் நிறைந்திருக்கும் நிழல்களின் சில அடையாளங்களை அறிய ஏதுவாக இந்த புத்தகம் அமைந்திருக்கிறது.

(இந்த பதிவின் உண்மைத்தன்மை அறிய விரும்புவோர்க்கு ஒரு தகவல். இன்னொரு மரணத்தின் வாயிலில் நானே நேரில் சகோவிடம் கேட்டுப்பெற்ற இந்த புத்தகத்தில் அவர் கையெழுத்திடவும் இல்லை. நான் பணம் தரவுமில்லை)

 

ஒவ்வொரு பகுதி தொடங்கும் பொழுதும் அந்தப்பகுதியில் முன்னிலை படுத்தப்படும் உயிரின் மரணம் இறுதியில் அறிவிக்கப்படும் என்பது நாம் அறிந்ததே. மேலும்

போருக்கும் மரணத்திற்குமான தொடர்பும் புதிதல்ல.

ஆயினும் இங்கு எளிமையான ஒரு மனிதனின் அண்ணன் பாட்டி சித்தி தந்தை தோழி காதலி நாய்குட்டி பூனை இன்ன பிற உறவுகளின் / உற்ற உயிர்களின் வாழ்க்கைக்கும் போருக்கும் உள்ள அதீதத்தொலைவும் அந்த தொலைவை மிகச்சில நொடிகளில் வென்றுசெல்லும் செல்களையும் பற்றிய உண்மைகளோடும் தீராத அமைதியோடு அழுகுரல்களையும் பதிவுசெய்திருக்கிறது இந்த புத்தகம்.

 

குறுக்காசும், பெடியல் மற்றும் ஆமிக்காரர்கள் எல்லாரும் போரின் சாட்சிகளாக வந்துபோகிறார்கள்.அதாவது இங்கு சொல்லப்படும் அனைத்து மரணத்திற்கும் போர் காரணம் எனபதை மட்டும் சொல்லிவிட்டு போருக்கு யார் காரணம் என்ற கேள்வியை காலத்தின் கையிலேயே விட்டுவிட்டுத் தொடரும் இந்த எழுத்துக்களின் மௌனம் நம்மை தடுமாறவே செய்கிறது.

 

இந்தப்புத்தகத்தில் உள்ளது போல குண்டு விழுந்ததை கூட ‘நேற்று இரவு குண்டு விழுந்தது’ என்று இயல்பாக எழுத முடியுமா என்பது அதிர்ச்சியாய் தோன்றுகிறது. அகிலனைப்போன்று போருக்கிடையிலே வாழ்ந்தவர்களால் மட்டுமே இவ்வாறு எழுதமுடியும் என்றும் இது போரின் மிகக்குரூரமான முகம் என்றும் சற்றே நிதானிக்கும் பொழுது அவதானிக்கமுடிகிறது.

 

அதே நேரம் போர் சூழலிலே பிறந்து வளர்ந்த மனிதனுக்குள்ளும் நகைச்சுவை உணர்வு உள்ளது என்பதை பதிவு செய்ய மறக்கவில்லை அகிலன். முக்கியமாக இன்றைய காலகட்டத்தில் நாம் அதிகம் பதற்றத்தோடு கேட்டறிந்த ‘தந்திரோபாய பின்நகர்வு’ என்ற சொற்றொடர் இந்த புத்தகத்தில் பயன்படுத்திய இடத்தில் வாய்விட்டு சிரிக்க வைத்ததை மறக்க ஏலாது. மற்றும் ‘தொடங்கீற்றான்ரா சிங்கன்’

 

இந்த புத்தகத்தின் மூலம் ஈழ வாழ்வை நெருங்கிபார்க்க முடிந்தது என்பதில் நிறைவும் அதை வேளை துர்மரணங்கள் ஏற்படுத்தும் வெறுமையும் ஒரே நேரத்தில் உணர்வது சற்றே எதிர்கொள்ள இயலாத கணத்தை ஏற்படுத்திவிடுகிறது.

இங்கு மரணத்தின் வாசனை யின் உள்ளீடுகளை அதிகம் பதிவு செய்ய விருப்பமில்லை.அதன் மீதான என் மீ-பார்வைகளை மட்டுமே பதிவுசெய்கிறேன்.மற்றவை படித்து அறியவும்.

 

மரணத்தின் வாசனை என்ற தலைப்பு முதலில் என்னை அசௌகரியப்படுத்தியது. அதற்கு அகிலன் காரணமல்ல.இங்கே பலவார்த்தைகளை நம் வியாபார நோக்கிற்காக அதன் அர்த்த ஆழங்களை பற்றி சிறிதும் அக்கறையற்று வெறும் உவமையாகவும் ஈர்ப்புக்காகவும் பயன்படுத்துகிறோம். உதாரணத்திற்கு முலை,யோனி,மரணம்,ரத்தம்,வெளி,பிரபஞ்சம் இன்னபிற.

 

ஈழம் குறித்து பலரும் எழுதுகிறோம். அது கேள்வி ஞானத்தால் ஆனது. வாசனை என்பது நேரில் சந்தித்த வாழ்க்கை என்பதன் தெளிவை ஏற்படுத்துகிறது. உண்மையில் இந்த புத்தகம் ஒரு சிறுவனின் வாக்குமூலத்தின் வழி ‘மரணத்தின் வாசனை’ என்ற இரண்டு வார்த்தைகளின் ஆழத்தை நோக்கி பயணிக்கிறது.

 

ஈழம்வாழ்வின் பகல் இரவை அறிய எண்ணுபவர்களுக்கு இந்தப்புத்தகம் மிகவும் நெருக்கமானதாக அமையும் என்றே கருதுகிறேன்.

நன்றி : இராவணன்

17 Apr

மரணத்தின் வாசனை – த.அகிலன்

இரண்டு வாரங்களாக இந்தப் புத்தகம் என்னுடன் எல்லா நேரத்திலும் பயணித்து வந்தது. ஒன்றிரண்டு நாட்களில் வாசித்திருக்க முடியும். ஆனால் இப்புத்தகத்தின் ஆழமும், வாசித்தபின் ஏற்படும் மன அழுத்தமும் சொல்லில் அடங்காது. கதையென்று அதை எப்படிக் கூற முடியும்? போரின் கொடூரங்களை பேரழிவுகளை வார்த்தை வார்த்தையாக கொட்டியிருக்கிறார் அகிலன். அவரைப்போல எம் ஈழ மக்களுக்கு அங்கு ஏற்பட்டிருக்கும் பெரும்துயர் என்று எப்போது எப்படி ஆறும்? காலத்தின் படர்ந்திருக்கும் இந்த ரத்தக் கறையை எவ்வளவு துடைத்தாலும் மறையுமா? பதில் சொல்ல யாரிருக்கிறார்? இத்தனைக்குப் பின்னும் வாழ்தலின் பேரலவலத்தை புனைவாயும் நிஜமாயும் விவரிக்கிறார் அகிலன். நம்முன் அலறித்துடிக்கும் அந்த ஓலத்தின் குரல் தமிழ்க்குரல் என்பதைத் தவிர நமக்கு போரின் அவலங்கள் பற்றி எவ்வளவு வாசித்தும் எத்தனை படம் பார்த்தும் தினம் தினம் செய்தி கேட்டும் என்ன தெரிந்துவிடும்?

‘மரணத்தின் வாசனை’ மூலம் அகிலனும் நானும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்துள்ளோம்.‘எதைக் கடந்துவிட்டதாய் நான் எண்ணிக் கொண்டிருந்தேனோ, அது என்னைத் துரத்துகிறது’ அவனைப் போலவே நானும் பல நாள்கள் துயருற்றிருக்கிறேன். பிரிவும், தனிமையும், மரணமும் செர்ந்து என்னை துரத்தியபடியே இருந்த காலகட்டங்கள் உண்டு. எம்மைவிட மிக வலிமையான அவற்றுடன் நான் போராடிச் சலித்து இறுதியில் சரணடைந்துவிட்டேன். என் பிரியமான தங்கையை மரணம் என்னிடமிருந்து இரக்கமில்லாமல் பிடுங்கிச் சென்றது. பின் அன்பான நண்பனை தெருவில் அடிபட்டு சாகச் செய்தது. எனக்கு தோழமையாகவும் வழிகாட்டியாகவும் இருந்த என்னுடைய பாஸை (boss) மலையிலிருந்து கீழ் தள்ளி சாகடித்து அகோரமாய் சிரித்ததுப் பார்த்தது. எல்லாமே எதிர்பாராத மரணங்கள்… இளமையின் வெவ்வேறு படிகளில் நின்றுகொண்டிருந்த அவர்கள் நினைத்திருப்பார்களா சாவு தங்களை இப்படி காவு கொள்ளுமென்று? பித்துப் பிடித்து செய்வதறியாது நான் கலங்கி நின்றிருந்தேன். யாரிடமும் காண்பிக்க முடியாத வேதனையை கவிதையாய், எழுத்தாய், என் டைரியின் தாள்களில் இறக்கி வைத்தேன். துக்கம் ஓரளவிற்கு இருநூறு பக்கங்களில் அடங்கிவிட்டது. ஆனால் அதன் வெம்மை என் மனதிற்குள் அணையா நெருப்பாய் இருக்கிறது, நான் இறக்கும்வரையிலும் அது இருக்கத்தான் செய்யும். தற்செயலாய் அதை வாசித்த என் நண்பர் ஒருவர் இரண்டு நாள் இரவு தூங்காமல் தவித்தாராம். அத்தனை வலியையும் வேதனையும் வார்த்தையின் வடிவில் பார்த்தவருக்கு அதிர்ச்சி. எப்படி தாங்கிக் கொண்டாய், இதற்குப்பின்னரும் உன்னால் எப்படி சிரிக்க முடிகிறது, நானென்றால் பைத்தியமாகியிருப்பேனே என்றார். நான் புன்னகைத்து வாழ்க்கை கற்றுக் கொடுக்கும் பாடங்களில் மகத்தானது மரணத்தை பற்றியது சிலருக்கு அது கொடூரமாக சொல்லித்தருகிறது, என்னைப் போல என்றேன். இப்போது அகிலனின் கதைகளை வாசிக்கும்போது எமக்கேற்பட்ட துன்பங்கள் மங்கலாகிக் கொண்டிருக்கிறது. தந்தையை, நண்பனை, சித்தியை, ப்ரியமான நங்கையை – சமீபத்தில் தன்னுடன் பிறந்தவனை என எத்தனை எத்தனை மரணங்கள் அவர் வாழ்வில். வழி நெடுக மரணத்தூனூடே பயணிக்கிறது அகிலனின் வாழ்வு இந்த சிறிய வயதில் எப்படி எப்படித் தாங்கிக் கொண்டார் என நினைக்கையில் மனம் கனத்துக் கிடக்கிறது. வெகு நாள் கழித்து முகம் தெரியாத மனிதர்களுக்காகவும் அழ நேர்ந்தது. காலம் எல்லா காயங்களுக்கும் மருந்து போடும் என்பதைத் தவிர அகிலனுக்கு ஆறுதலாய்க் கூற வார்த்தை ஏதுமில்லை என்னிடம்.

இப்புனைவுகளை நுட்பமான மொழிநடையில் ஈழத்தின் அழகுத் தமிழில் எழுதியுள்ளார் அகிலன். தொன்மையான நம் தமிழனின் மொழியது. சில வார்த்தைகள் புரியாவிட்டாலும் தொடர்ந்து வாசிக்கும்போது தெள்ளந்தெளிவாக புரிகிறது. இத்தொகுப்பில் மொத்தம் பனிரெண்டு கதைகள். எல்லாக் கதைகளுமே என்னை பாதித்தது, மிகவும் பாதித்த கதைகள் எண்டு சொன்னால், ‘ஒரு சின்னப் பையனின் அப்பா செத்துப் போனார்’, ‘செய்தியாக – துயரமாக – அரசியலாக’, சித்தி’, குமார் அண்ணாவும் மிளகாய்க் கண்டுகளும்’, ‘சலனங்கள் அற்றவனின் கடைசிநாள்’, ‘தோற்ற மயங்கங்களோ’. மற்ற கதைகளான ‘ஒரு ஊரில் ஒரு கிழவி’, ‘ஒருத்தீ’, ‘மந்திரக்காரண்டி அம்மாண்டி’, ‘கரைகளிற்க்கிடையே’ ‘நீ போய்விட்ட பிறகு’ ‘நரைத்த கண்ணீர்’, ஆகியவையும் மிகவும் நுட்பமான கதைகள்.

 

இப்புத்தகத்திலிருந்து என் மனதை பிழிந்தெடுத்த சில வரிகள், இதை எழுதும் போது அகிலனின் மனநிலையை அவதானிக்க முடிகிறது. என் கண்ணில் கண்ணீரை அல்ல அனல் நீரை வார்க்கச் செய்துவிட்டது இவ்வுரைகள்.

“மரணமும் அதுகுறித்தான பயமும் அறியப்படாத ஒரு ரகசியச் சுவை போல நம்மிடையே கலந்திருக்கிறது. யாரும் தாண்டிவிட விரும்பாத சுவரைப்போலவும்….”

“அவர்கள் நேசித்த உடலைக் கண்ணுக்குள் வைப்பதும் யாருவருக்கும் பிரியமான ஒரு செய்லாயிருக்கிறது. நான் நினைத்தேன், மனிதன் உடலாகவே அறியப்படுகிறான். கறுப்பாய், ஒல்லியாய், குண்டாய் என அவனது உடலையே நம் நினைவுகள் முதலில் கொண்டாடுகின்றன. உடல் சார்ந்தே அவனுடைய பிறநினைவுகளும் வாழ்கின்றன. அந்த உடலின் பிரதிநிதியாகவே ஒரு மனிதன் குறித்த நினைவுகள் நமக்குள் தங்கிவிடுகின்றன. அதனால் அந்த உடலைக் கடைசியாகப் பார்த்துவிட வேண்டும் என்று துடிக்கிறோம்…..”

“துயர் தரும் மரணத்தின் கதைகளுக்கு இந்த நாட்டில் பஞ்சமா? குருதியும் எதிந்த தசைகளின் துர்மணமும் நிறைந்த கதைகள் தவிர வேறென்ன இருக்கிறது இங்கே. எல்லாரையும் கொன்று கொண்டோ அல்லது கொல்வதற்குக் கட்டாயப்படுத்திக் கொண்டோ இருக்கிறது.”

“தேவதையின் மரணத்தை அண்ணி கடிதத்தில் உறுதி செய்தாள். மெலிந்து கறுத்துப் போன உனது சீருடைப் படத்திற்உ உன் கிராமத்து வீட்டில் மாலைபோட்டு ஊதுபத்தி ஏற்றியிருப்பதாக, மரணத்தின் வாசனை அதனின்றும் கமழ்ந்து கொண்டிருப்பதை தான் போய் பார்த்தேன் என்று அண்ணி எழுதியிருந்தாள். மரணம் நாசமாய்ப் போக. அது தேவதைகளையும் விட்டு வைப்பதில்லை.”

“யுத்தம் கொடிய யுத்தம். மனித மனங்களை சிதைத்துக் குவித்துக் கொன்றுவிட்டிருக்கும் யுத்தத்தின் இன்னுமொரு சாட்சி இவன். இனி என்றைக்கும் திரும்பவியலாதது. பிரிவும் துயரமும் எதிர்ப்பார்ப்பு கலவையாகிப் பினைந்து கொண்டிருக்கிறது இவன் சிந்தனைகளை என்று தோன்றியது எனக்கு.”

புத்தகத்தை மூடி வைத்து இரவில் வெகு நேரம் தூங்காமல் விழித்திருந்தேன். அகிலன் சொல்வது போல் ‘மரணமும் அது குறித்தான சேதிகளும் ஒரு கொடு நிழலைப்போல் என்னைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றன” ஆம்…

நன்றி: உமா ஷக்தி  (16th April 2009)

16 Jan

த.அகிலனின் மரணத்தின் வாசனை

வடலி வெளியீடு

போர் தின்ற சனங்களின் கதை

அதிகாரத்தின் பெருவாய் அப்பாவிகளின் உயிர் குடிக்க அலைகிறது. பிணங்களும் ரணங்களுமே இன்றைய ஈழத் தமிழனின் சொத்து. களமாடிச் சவமாகிக் கிடக்கும் தமிழச்சிகளின் பிணங்களைப் புணரும் சிங்களப் பேரினவாதத்தின் கொடூரம், ஹிட்லரின் நாஜிப் படையும் செய்யத் துணியாதது. இந்த உண்மைகளை வலியோடு பேசுகிறது த.அகிலனின் ‘மரணத்தின் வாசனை’ புத்தகம்.

நன்றி:

 ஆனந்த விகடன் (2009 ஜனவரி)